'சூப்பர்பவர்' மோட்டார் உலகத்துக்கு மாறும் இந்திய ராணுவம்!!
சீனா, பாகிஸ்தான் போன்ற அணு ஆயுத நாடுகளை அருகில் வைத்திருக்கும் இந்தியா, தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் நிர்பந்தத்தில் உள்ளது. மேலும், தீவிரவாத அச்சுறுத்தல், அண்டை நாடுகளால் இருக்கும் எல்லைப்பிரச்னைகளை சமாளிக்க வலுவான ராணுவத்தையும், அதிநவீன பாதுகாப்பு சாதனங்களையும் கொண்ட பாதுகாப்புப் படையை வைத்திருப்பது அவசியமாகிறது.
இதற்காக, பாதுகாப்புத் துறையை மேம்படுத்த பல பில்லியன் டாலர்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில், பெரும்பாலான தொகை நவீன ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், டிஆர்டிஓ மற்றும் எச்ஏஎல் போன்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இந்த அமைப்புகள் வெளிநாடுகளுடன் கூட்டாகவும், தனியாகவும் பாதுகாப்புத் துறை தேவைகளை பூர்த்தி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வல்லரசு நாடுகளுக்கு இணையான அல்லது போட்டி போடும் அளவுக்கு ராணுவ பலத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் ராணுவ பலத்தை கூட்டுவதற்காக இந்தியா தயாரித்து வரும் அல்லது இணைக்க இருக்கும் அதிநவீன சூப்பர்பவர் ஆயுதங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. ஏவுகணையை போட்டுத் தள்ளும் ஏவுகணை
இந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிரி நாட்டின் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் வல்லமை கொண்ட இரண்டு விதமான ஏவுகணைகளை இந்தியா சொந்தமாக தயாரித்து வருகிறது. ஒன்று அதிஉயரத்தில் பறந்து வந்து தாக்குதல் நடத்த வரும் எதிரிநாட்டு ஏவுகணையை வழிமறித்து தாக்கக்கூடிய பிருத்வி ஏர் டிஃபன்ஸ் மிஸைல் என்ற ஏவுகணை[அதிகபட்சம் 80 கிமீ உயரம்], மற்றொன்று, தாழ்வாக பறந்து வரும் எதிரிநாட்டு ஏவுகணைகளை வழிமறித்து தாக்க வல்ல அட்வான்ஸ்டு ஏர் டிஃபென்ஸ் மிஸைல் ஆகியவையாகும். 5,000 கிமீ தூரத்துக்கு அப்பால் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை கூட துல்லியமாக கணித்து வழிமறித்து தாக்கும் திறன் கொண்டது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேலுக்கு அடுத்து பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வழிமறித்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணையை சொந்தமாக தயாரித்த உலகின் நான்காவது நாடு இந்தியா என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

02. ஐந்தாம் தலைமுறை போர் விமானம்
உலகிலேயே அமெரிக்கா மட்டுமே ஐந்தாம் தலைமுறை எனப்படும் உலகிலேயே நவீன போர் விமானத்தை பயன்பாட்டில் வைத்திருக்கிறது. ஆயுதங்கள் ஏந்திய இந்த விமானத்தை எதிரிநாட்டு ரேடார்களால் கண்டுபிடிக்க இயலாது. இந்தநிலையில், ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை ரஷ்யாவின் கூட்டணியுடன் இந்தியா தயாரிக்கிறது. இது சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ என்று அழைக்கப்படுகிறது. ரஷ்யா தயாரிக்கும் இந்த விமான மாடல் ஒற்றை இருக்கையுடன், இந்தியா தயாரிக்கும் மாடல் இரண்டு பேர் செல்லக்கூடியதாகவும் இருக்கும். எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காமல் இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய பல்வகை பயன்பாட்டு போர் விமான மாடல். அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ரேப்டர் விமானத்தைவிட பல மேன்மைகள் கொண்டதாக இந்த விமானம் இருக்கும். கடந்த 2010ம் ஆண்டு முதல்முறையாக உருவாக்கப்பட்ட விமானம் பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டு வருவதுடன், போர் விமானிகளுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ரேடார் கண்களில் சிக்காது என்பதால், எதிரிநாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்.

03. ஐஎன்எஸ் அரிஹந்த்
இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் விசாகப்பட்டினத்தில் கட்டமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முழுமையாக களத்தில் இருக்கும் இந்த நீர்மூழ்கி கப்பல் இந்திய கடல்சார் ராணுவ பலத்தை மற்றொரு படிக்கு முன்னே இட்டுச்செல்லும். தற்போது ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனாவைத் தொடர்ந்து அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பலை வைத்திருக்கும் உலகின் ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பெருமையும் இந்த போர்க்கப்பல் மூலமாக கிடைத்திருக்கிறது. அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பலின் மிகப்பெரிய சாதகமான அம்சம், பல ஆண்டுகளுக்கு எரிபொருள் நிரப்ப தேவையில்லை. எனவே, அதிக நாட்கள் தண்ணீருக்குள் மூழ்கி சென்று வரும் வாய்ப்புண்டு.

04. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. ஐஎன்எஸ் விராத் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு மாற்றாக இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 44,500 டன் எடை கொண்ட இந்த கப்பல் 284 மீட்டரம் நீளமும், 60 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த கப்பலில் 20க்கும் மேற்பட்ட மிக்-29கே ரக போர் விமானங்களை தாங்கிச் செல்லும். அத்துடன் கண்காணிப்புகளுக்காக 10 ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கக்கூடிய ஏவுகணைகள், தரை இலக்குகளை அழிக்கக்கூடிய ஏவுகணைகள் பொருத்த்ப்டு இருக்கின்றன. 700 கடல் மைல்கள் தொலைவுக்கு கடற்பகுதி கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். இந்த போர்க்கப்பலில் 1,600 பணியாளர்கள் உள்ளனர். ஒருமுறைக்கு 13,000 கடல்மைல்கள் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

05. டஸ்ஸால்ட் ரஃபேல்
பிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்கப்படும் நவீன ரக போர் விமானம். இந்தியாவின் வான் பகுதி பாதுகாப்பை அதிகரிக்க இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள போர் விமானம். பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது 4.5-ம் தலைமுறை போர் விமான மாடலாக குறிப்பிடப்படுகிறது. விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ரஃபேல் போர் விமானத்தின் சிறப்புகள்!

06. அவாக்ஸ் கண்காணிப்பு விமானம்
எதிரிநாட்டு போர் விமானங்கள் இந்திய வான் பரப்பில் நுழைவதை துல்லியமாக கண்டறிந்து, எச்சரிக்கை கொடுக்கும் நவீன வகை விமானம். தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஐஎல்-76 விமானங்களுக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வான்வழி தகவல் தொடர்புகளையும் எளிதாக கண்டறிந்து எச்சரிக்கும் நவீன வசதிகள் கொண்டது.

07. சவுரியா மற்றும் அக்னி-5 ஏவுகணைகள்
இந்தியாவின் ராணுவ பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்தியம்புவதற்கான சிறப்பான எடுத்துக்காட்டுகளாக இந்த இரு ஏவுகணைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஏவுகணைகள் இரண்டு நிலைகளில் செயல்படும். முதல்நிலையில், ஏவுகணைகள் 40 கிமீ உயரத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பிறகு, பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும். இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இரண்டாவது நிலையை எட்டியபிறகு இந்த ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது எதிரிநாடுகளுக்கு இயலாத காரியமாக இருக்கும்.

08. பிரம்மோஸ் ஏவுகணை
ஒலியைவிட அதிவேகத்தில் செல்லும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை சுகோய் போர் விமானத்தில் பொருத்த இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது. இந்தநிலையில், பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட பிரம்மோஸ்- II என்ற ஹைப்பர்சானிக் வகை ஏவுகணையும் இறுதிக் கட்ட தயாரிப்பில் உள்ளது. எதிரிநாட்டு ரேடார் கண்களிலும் சிக்காமல், ஒலியைவிட பன்மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கை அழித்துவிடும் திறன் கொண்டது. ரஷ்யாவின் கூட்டணியில் இந்த பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்தியாவின் ராணுவ பலத்தை புதிய உயரத்தில் வைக்கும் வல்லமை இந்த பிரம்மோஸ் ஏவுகணைக்கு உண்டு.

09. பாரக் 8
இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஸ்பைடர், பாரக் 8 ஆகிய ஏவுகணைகளும் முக்கிய பங்காற்றும். போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் எளிதாக பொருத்தி தாக்குதல் நடத்த முடியும். அத்துடன், எதிரிநாட்டு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உளவு விமானங்களையும் இந்த ஏவுகணைகளை செலுத்தி வீழ்த்த முடியும்.

10. பி8ஐ போஸிடன்
எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிப்பதற்கும், கடல் பகுதி கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டைக்கும் உகந்த போர் விமானம். அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. மேலும், இந்த விமானத்தை வாங்கும் உலகின் முதல் வாடிக்கையாளர் இந்தியா என்பதுடன், போயிங் ராணுவ விமான தயாரிப்பு நிறுவனம் இந்தியாவுடன் செய்து கொண்ட முதல் ஒப்பந்தமும் இதுதான். கடந்த 2013ல் மூன்று விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டன. இவை அனைத்தும் அரக்கோணத்திலுள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்திலிருந்து இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்
ரஃபேல் போர் விமானத்தின் அவசியம்...!!
உலகின் விலையுயர்ந்த டாப்-10 ராணுவ வாகனங்கள்
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்

மோட்டார் உலகச் செய்திகள்
மோட்டார் உலகச் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்க ...!


Click it and Unblock the Notifications








