சிட்டியில, ஹைவேயில, ஹில்ஸ்ல கார் ஓட்டி போரடித்துவிட்டதா...!!
சிட்டியில் கார் ஓட்டி, ஓட்டி கால் கடுத்து போய்விட்டதா, அடிக்கடி நெடுஞ்சாலை பயணங்களும் பழகி புளித்துவிட்டதா, அட, ஊட்டி, கொடைக்கானல் மலைச்சாலைகளும் அத்துப்படிதான். அதிலிருந்த த்ரில்லும் போய்விட்டதே என்று திக்கி நிற்கிறீர்களா... ஏதாவது ஒரு புதுமையான பயணமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று மனதில் நினைத்து யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த செய்தித் தொகுப்பு.
மிக மிக வித்தியாசமான அனுபவத்தை பெறுவதற்கான இடமாக இந்த செய்தியில் தென்னிந்தியாவின் பிரபலமான கடற்கரைகளுக்கு ஒரு விசிட் அடிக்கும் விதத்தில் இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம். ஒரு லாங் டிரைவாகவும் இருக்க வேண்டும், குதூகலிப்பதற்கான இடமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இடங்கள் சரியான தேர்வாக இருக்கும்.
இதில், கொடுக்கப்பட்டிருக்கும் சில கடற்கரைகளிலேயே நீங்கள் காரை ஓட்ட முடியும் என்பதுதான் ஹைலைட். ஆனால், பெரும்பாலான கடற்கரைகளின் அருகில் வரை காரை ஓட்டிச் செல்வதற்கான சாலை வசதி உண்டு. தமிழக கடற்கரைகளை பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு ஒரு நீண்ட தூர ட்ரிப்பாகவும், மறக்க முடியாத அனுபவத்தையும் தரும். அந்த அட்டகாசமான இடங்களை பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. வர்கலா பீச்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து 54 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது வர்கலா பீச். அரபிக் கடலின் அழகையும், சூரிய அஸ்தமனத்தை ரசித்தவாறே இந்த பீச்சில் உங்களது காரில் ஓர் அட்டகாசமான பயணத்தை மேற்கொள்ளலாம். அக்டோபரிலிருந்து முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இந்த பீச்சிற்கு செல்வது ஏற்றதாக கூறலாம். சென்னையிலிருந்து 750 கிமீ தூரத்தில் இந்த பீச் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 45 வழியாக இந்த பீச்சிற்கு செல்வதற்கு குறைந்தது 12 மணிநேரம் பிடிக்கும்.

02. கோகர்ணா பீச்
கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த கடற்கரை பிரதேசத்தின் வெள்ளை மணலில் ஒரு ட்ரிப் செல்வது உங்களது மனதில் இருக்கும் பாரங்களை ஒரு நொடியில் இறக்கிவிடும். சிறந்த உணவு, இயற்கை அழகை நேசிப்பவர்களுக்கு இந்த இடம் மிகச்சிறந்தது. சென்னையிலிருந்து 875 கிமீ தூரத்தில் கோகர்ணா பீச் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக சென்றால் 13 மணிநேரம் பிடிக்கும். செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த இடத்திலுள்ள கடற்கரையில் உங்களது காரை ஓட்டிப் பார்த்து பரவசமைடயலாம்.

03. முழப்பிளாங்காட் பீச்
கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் ஓர் சிறந்த டிரைவ் இன் பீச். இதுதான் ஆசியாவின் மிக நீளமான டிரைவ் இன் பீச் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 4 கிமீ தூரத்துக்கு கடற்கரையிலேயே நீங்கள் கார் ஓட்டிச் செல்ல முடியும். கண்ணூர் மற்றும் தலசேரி இடையில் இந்த இடம் உள்ளது. சென்னையிலிருந்து 650 கிமீ தூரத்தில் இந்த பீச் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 46 வழியாக சென்றால் 11 மணி 46 நிமிடங்களாகும். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் இங்கு பீச் திருவிழா நடக்கிறது.

04. தர்கார்லி பீச்
இந்த பீச்சில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜன நடமாட்டம் அதிகமிருக்காது. மஹாராஷ்டிர மாநிலம் கொங்கன் கடற்கரை பகுதியில் இந்த பீச் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து 1,000 கிமீ தூரத்தில் உள்ளது. குறைந்தது 18 மணிநேரம் பிடிக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை செல்வது ஏற்றது. இந்த பீச்சிற்கு நேரடியாக செல்வதைவிட, கோவா செல்பவர்கள் இந்த பீச்சிற்கும் ஒரு ட்ரிப் அடித்து விட்டு வர மறக்காதீர்கள்.

05. லைட்ஹவுஸ் பீச்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது இந்த லைட்ஹவுஸ் பீச். இரவில் பல்வண்ண விளக்கு அலங்காரத்தில் இந்த லைட்ஹவுஸ் ஜொலிப்பதை காண ஏராளமானோர் கூடுகின்றனர். இந்த பீச்சிலும் உங்களது காரை ஓட்டிப் பார்த்து சிலிர்ப்பான அனுபவத்தை பெறலாம். சென்னையிலிருந்து 770 கிமீ தூரத்தில் இந்த பீச் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் 45 வழியாக இந்த இடத்தை 11 மணி 40 நிமிடங்களில் அடையலாம். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டம் செல்வதற்கு ஏற்றது.

06. பாரடைஸ் பீச்
சென்னையிலிருந்து ஒரே நாளில் ஒரு ட்ரிப் சென்று வர விரும்புபவர்களுக்கு பாண்டிச்சேரி பாரடைஸ் பீச் சிறந்த தேர்வாக இருக்கும். பாண்டிச்சேரி தெற்காக, 8 கிமீ தொலைவில் உள்ள சுண்ணாம்பார் ரெசார்ட் அருகில், தேசிய நெடுஞ்சாலை 45ஏ ஒட்டியே இந்த பீச் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து 175 கிமீ தொலைவில் உள்ளது. குறைந்தது மூன்றரை மணி நேரம் பிடிக்கும். கடற்கரையை ஒட்டியே செல்லும் ஈசிஆர் சாலையில் காரை ஓட்டிச் செல்வதே பெரும் ஆனந்தம் தரும் விஷயம். அத்துடன் பாரடைஸ் பீச்சும் உங்கள் மனதுக்கு உற்சாகம் தரும்.

07. தனுஷ்கோடி
இருபுறமும் கடல் சூழ ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும் அனுபவத்தை தனுஷ்கோடி கடற்கரை தரும். ராமேஸ்வரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரை காரில் செல்ல முடியும். அங்கிருந்து ஜீப்பில் வங்காள விரிகுடாவின் சீற்றத்தை அருகாமையிலேயே கண்டு ரசிக்க முடியும். இதுவும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். சென்னையிலிருந்து 575 கிமீ தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. குறைந்தது 9 மணிநேரமாகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சிறந்த பருவமாக இருக்கும்.

08. மராரி பீச்
இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆழப்புழா படகு இல்லங்களுக்கு பிரசித்தி பெற்றது. அழப்புழாவிலிருந்து 11 கிமீ தூரத்தில் உள்ள மரரா பீச்சும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக இருக்கிறது. கடற்கரைக்கு அருகில் காரில் செல்ல முடியும் என்பதுடன், படகு இல்லங்களில் ஒரு ரவுண்டு போய்விட்டு வருவது கூடுதல் சுகத்தை தரும் விஷயமாக அமையும். சென்னையிலிருந்து 730 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 47 வழியாக 12 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடைய முடியும். மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டம் செல்வதற்கு சிறந்தது.

09. பட்டர்ஃப்ளை பீச்
கோவாவில் உள்ள ஒரு ரகசிய கடற்கரை பிரதேசம் இது. தெற்கு கோவாவின் பலோலெம் பீச்சிற்கு வடக்கு திசையில் இந்த பீச் அமைந்துள்ளது. படகு மூலமாகவே இந்த பீச்சிற்கு செல்ல முடியும். சென்னையிலிருந்து 920 கிமீ தூரத்தி்ல இந்த பீச் அமைந்திருக்கிறது. குறைந்தது 14 மணி நேரத்திலிருந்து 19 மணிநேரம் வரை பிடிக்கும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை சிறந்த காலக்கட்டமாக இருக்கும்.

10. கல்ஜிபாகா பீச்
கோவாவில் இருக்கும் மற்றொரு கடற்கரை. கூட்ட நெரிசல் இல்லாமல் கடற்கரை அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடம். கர்நாடக மாநில எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து 900 கிமீ தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக குறைந்தது 14 மணி நேரம் பிடிக்கும். ஜூலையிலிருந்து பிப்ரவரி மாதம் வரை செல்ல ஏற்றது.

11. போகேவ் பீச்
இயற்கை விரும்பிகளுக்கும், புராதன இடங்களை போற்றுபவர்களுக்கும் சிறந்த கடற்கரை. மிகவும் விச்சியாசமான பயண அனுபவத்தை கொடுக்கும். சென்னையிலிருந்து 1,000 கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக 15 முதல் 19 மணி நேர பயண தூரத்தில் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டம் செல்வதற்கு ஏற்றது.

12. பொலேம் பீச்
இதுவும் கோவாவில் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை. கடற்கரைக்கு மிக அருகாமையில் ரசிப்பதற்கான ஏற்ற இடம். சென்னையிலிருந்து 900 கிமீ தூரத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக 15 மணிநேரத்தில் அடையலாம். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டம் ஏற்றது.

13. திருச்சோபுரம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சோபுர கடற்கரையும் கூட்ட நெரிசல் இல்லாமல் கடல் அழகை ரசிப்பதற்கான இடமாக கூறலாம். சென்னையிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. மழைக்காலத்தை தவிர்த்து பிற எல்லா நாட்களிலும் செல்லலாம்.

14. கிழுன்னா எழரா பீச்
கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கடற்கரை அழகுடன் சேர்த்து கதகளி நடனத்தையும் கண்டு ரசிக்க முடியும். சென்னையிலிருந்து 650 கிமீ தொலைவில் உள்ளது. குறைந்தது 11 மணிநேரத்திலிருந்து 15 மணி நேரம் பிடிக்கும். செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான பருவம் செல்வதற்கு ஏற்றது.

15. கப்பில் பீச்
இதுவும் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கடற்கரை. பேகல் கோட்டை மற்றும் பள்ளிக்குன்னம் கோயில்களுக்கு அருகாமையில் உள்ளது. சென்னையிலிருந்து 730 கிமீ தூரத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 வழியாக குறைந்தது 12 மணி நேர பயணத்தில் அடையலாம். செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டம் ஏற்றது.

வாசகர்கள் கவனத்திற்கு...
கடல் அலைகளுக்கு மிக அருகாமையிலும், மணல் அதிகமுள்ள இடங்களிலும் கார்களை ஓட்டுவது சில சமயம் ஆபத்தில் முடியும். கடற்கரையில் கார் ஓட்டுவதை தவிர்ப்பது நலம்.


Click it and Unblock the Notifications








