காரில் டேஷ்கேம் இருந்தா நீங்கதான் கில்லி... இந்த விஷயங்கள் தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க... ரேட்டும் ரொம்ப கம்மி
உங்கள் காரில் டேஷ்போர்டு கேமரா இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டேஷ்போர்டு கேமராக்கள் நீண்ட காலமாக சந்தையில் இருந்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு சமீப காலமாகதான் டேஷ்போர்டு கேமராவின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியுள்ளது. டேஷ்போர்டு கேமரா என்பது காரின் டேஷ்போர்டு அல்லது ரியர் வியூ மிரரில் பொருத்தப்படும் கேமரா ஆகும்.

இந்திய சந்தையில் தற்போது வெவ்வேறு வசதிகள் மற்றும் திறன்களுடன், பல்வேறு வகையான டேஷ்போர்டு கேமராக்கள் கிடைக்கின்றன. 2 ஆயிரம் ரூபாய் என்ற குறைவான விலையில் கூட தற்போது டேஷ்போர்டு கேமராக்களை நீங்கள் வாங்க முடியும். 60 ஆயிரம் ரூபாய்க்கும் கூட டேஷ்போர்டு கேமராக்கள் கிடைக்கின்றன. வசதிகள் மற்றும் திறன்களை பொறுத்து விலை வேறுபடும்.

காரில் உங்களது தினசரி பயணங்களின்போது, டேஷ்போர்டு கேமராக்களை நீங்கள் பயன்படுத்தலாம். இதன் மூலமாக உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பல்வேறு பிரச்னைகளில் இருந்தும் கூட நீங்கள் தப்பிக்கலாம். டேஷ்போர்டு கேமராக்கள் உங்களுக்கு எந்தெந்த வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்? என்பதைதான் இந்த செய்தியில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆதாரம்
இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள் காரணமாகவும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறுவதாலும் இங்கு ஏகப்பட்ட விபத்துக்கள் நடைபெறுகின்றன. ஒரு சாலை விபத்து நடைபெற்று விட்டால், எதையும் விசாரிக்காமல் உடனடியாக பெரிய வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது குற்றம் சாட்டும் அவலமும் இங்கு உள்ளது என்பது வருத்தமான ஒரு விஷயம்.

உதாரணத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் செய்த தவறு காரணமாக சாலை விபத்து நடைபெற்றிருந்தால், காரில் வந்த உங்கள் மீது பழி போடுவதற்கு அவர் எந்தவிதமான தயக்கமும் காட்ட மாட்டார். இதுபோன்ற சூழ்நிலைகளில் கார் டேஷ்போர்டு கேமரா உங்களை காப்பாற்றும். ஆம், நடைபெற்ற சம்பவத்தின் முழுமையான வீடியோ ஆதாரம் உங்களிடம் இருக்கும்.

எனவே உங்கள் மீது தவறு இல்லை என்றால், உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. டேஷ்போர்டு கேமரா உங்களுக்கு மட்டும் உதவி செய்யும் என நினைத்து விட வேண்டாம். உங்கள் காரின் முன்னால் வேறு ஏதாவது விபத்து நடைபெற்றால், அந்த வீடியோ ஆதாரமும் உங்களிடம் இருக்கும். எனவே நீங்கள் மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடியும்.

போலீஸ் தொல்லையில்லை
இந்தியாவில் நேர்மையான போலீஸ்காரர்கள் பலர் தங்களது பணியை பெருமையுடன் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் வாகன தணிக்கை என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கும் எண்ணமுடைய ஒரு சில மோசமான போலீஸ்காரர்களும் இங்கு இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. அத்தகைய போலீஸ்காரர்களால் நம்மில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிந்திருந்தாலும் கூட, சீட் பெல்ட் அணியவில்லை என்ற குற்றச்சாட்டை ஒரு சில போலீஸ்காரர்கள் வேண்டுமென்றே உங்கள் மீது சுமத்தலாம். ஆனால் உங்கள் காரில் டேஷ்போர்டு கேமரா இருந்தால், நான் எந்தவிதமான விதிமுறை மீறிலிலும் ஈடுபடவில்லை என்ற வலுவான ஆதாரத்தை உங்களால் சமர்ப்பிக்க முடியும்.

மோசமான ஓட்டுனர்களை களையலாம்
நீங்கள் வீட்டில் இருந்து சிறிது தூரம் வெளியே சென்றாலும் கூட, மோசமான ஒரு வாகன ஓட்டுனரையாவது நிச்சயமாக நீங்கள் பார்க்க முடியும். விதிமுறைகளை பின்பற்றாமல் தாறுமாறாக வாகன ஓட்டக்கூடியவர்கள், உங்களுக்கு மட்டுமல்லாது, அவர்களுக்கும், சாலையில் பயணிக்கும் மற்ற அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.

அத்தகைய ஓட்டுனர்கள் இந்த சமுதாயத்திற்கே ஒரு அச்சுறுத்தல் என்றால் மிகையல்ல. அவர்களது செயல்பாடுகளுக்கு அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதுபோன்ற ஓட்டுனர்களின் செயல்பாடுகளை அவர்களின் வாகனத்தின் பதிவு எண்ணுடன் நீங்கள் பதிவு செய்ய முடியும். இதன்பின் அந்த ஓட்டுனரிடம் நீங்கள் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களின் தவறை சுட்டிக்காட்டி திருத்தலாம்.

அல்லது காவல் துறையினரிடம் உரிய ஆதாரத்துடன் அவர்களின் செயல்பாடுகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த இரண்டில் எதை செய்வது என்பது உங்கள் விருப்பம். ஆனால் இத்தகைய ஓட்டுனர்களிடம், அவர்களின் தவறை சுட்டிக்காட்டி நீங்கள் பேசும்போது அவர்கள் உங்களை தாக்குவதற்கான அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.


Click it and Unblock the Notifications








