ரொம்ப ஃபேமஸா இருந்துச்சு... இந்திய மக்களின் கண்களை குளமாக்கி விட்டு பிரியாவிடை பெற்ற கார்கள்...
இந்திய சந்தையில் கடந்த 4 ஆண்டுகளில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட சில கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் புதிய கார்கள் வருவதும், சில கார்கள் விற்பனையில் இருந்து விலக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், சில புகழ்பெற்ற கார்களின் விற்பனை நிறுத்தப்படும்போது, நம் கண்கள் குளமாகி விடுகின்றன. கார்கள் விற்பனையில் இருந்து விலக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

மந்தமான விற்பனை, புதிய மாடல்களின் வருகை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் எடுக்கும் தொழில் ரீதியிலான முடிவு என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதன்படி இந்திய சந்தையில் கடந்த 4 ஆண்டு கால அளவில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட மூன்று கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டொயோட்டா கரோல்லா அல்டிஸ் (Toyota Corolla Altis)
இது உலகளவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இந்த காரின் விற்பனை பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்திய சந்தையில் டொயோட்டா கரோல்லா கார், கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது கரோல்லா அல்டிஸாக மாறியது.

எனினும் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் கரோல்லா அல்டிஸ் காரின் விற்பனையை டொயோட்டா நிறுவனம் நிறுத்தியது. இந்திய சந்தையில் கரோல்லா அல்டிஸ் காரின் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லாத காரணத்தால்தான், டொயோட்டா நிறுவனம் இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு ஆளானது.

மாருதி சுஸுகி ஜிப்ஸி (Maruti Suzuki Gypsy)
இந்திய சந்தையில் ஜிப்ஸி காரை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன்பின் ஆஃப் ரோடு ஆர்வலர்கள் மத்தியில் மாருதி சுஸுகி ஜிப்ஸி மிகவும் புகழ்பெற்ற காராக உருவெடுத்தது. எனினும் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஜிப்ஸி காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.

அப்போதைய பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாகதான் ஜிப்ஸி இந்திய சந்தையை விட்டு விலக நேரிட்டது. எனினும் ஜிப்ஸி வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இந்திய ராணுவம் ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்தது. இதன்பேரில் இந்திய ராணுவத்திற்கு தேவையான ஜிப்ஸிக்களை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு மீண்டும் அனுப்ப தொடங்கியது.

மாருதி சுஸுகி ரிட்ஜ் (Maruti Suzuki Ritz)
மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்திய வாடிக்கையாளர்களின் மனங்களை வெல்வதில்லை. இதற்கு ரிட்ஜ் ஒரு சிறந்த உதாரணம். கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி ரிட்ஜ் அறிமுகம் செய்யப்பட்டது மாருதி சுஸுகி ரிட்ஜ் விசாலமான அதே சமயம் விலை குறைவான கார்களில் ஒன்றாகும்.

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு ரிட்ஜ் கார் விற்பனையாகவில்லை. இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க மாருதி சுஸுகி ரிட்ஜ் தவறி விட்டது. இதன் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிட்ஜ் காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி கொண்டது.


Click it and Unblock the Notifications








