அரசோட தலையீடு இம்முறை மிக அதிகம்! அவ்ளோ சீக்கிரம் எத்தன விதிகளை கொண்டாந்துட்டாங்க! 2022ன் டாப்5 புதிய விதிகள்!
ஒவ்வொரு ஆண்டும் வாகன உலகம் சார்ந்து ஏதாவது ஓர் புதிய விதி அமலுக்குக் கொண்டு வரப்படும். இல்லை எனில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதியை மிகக் கடுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். அந்தவகையில், 2022 லும் இந்தியாவில் வாகன உலகம் சார்ந்து பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், பாதுகாப்பு கருதியும் பல புதிய சட்டங்களும், விதிகளும் நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த முறைக் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அரசின் தலையீடு சற்று அதிகம் என்றே கூறலாம். அந்தளவிற்கு வாகன துறை விஷயத்தில் அதிகளவு தலையிட்டு பல்வேறு மாற்றங்களை அரசு நடப்பு 2022 ஆம் ஆண்டில் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றில் டாப் 5 மாற்றங்களைப் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, விரைவில் முடிவடைய இருக்கும் இந்த 2022 ஆம் ஆண்டில் வாகன போக்குவரத்து சார்ந்து அரசு அறிவித்த மிக முக்கியமான ஐந்து விதிகள் பற்றியே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பின் பக்க சீட் பெல்ட் அலாரம்:
சமீபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்து காரணமாக பரிதாபமாக பலியாகினார். அவர் பயணித்தது விலையுயர்ந்த மற்றும் பாதுகாப்பான சொகுசு காராகும். இருப்பினும், அவர் விபத்தில் இறந்துபோனார். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் உயிர் தப்பிக்க பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே முக்கிய காரணமாக இருந்தது. கார் அதிக வேபத்தில் சென்று விபத்தைச் சந்தித்திருந்தாலும், அவர் சீட் பெல்ட் போட்டிருந்தால் தப்பித்திருப்பார்.
இதன் காரணமாகவே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பின் இருக்கை பயணிகளும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்கியது. பல ஆண்டுகளாக இந்த விதி அமலில் இருக்கின்றது. ஆனால், சைரஸ் மிஸ்த்ரியின் விபத்திற்கு பின்னரே இந்த விதியை அதிரடியாக அரசு அமலுக்குக் கொண்டு வந்து, தீவிர கண்கானிக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்துடன், சீட் பெல்ட் ரிமைண்டர்களை தடைச் செய்யும் கருவியை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டது. பயணிகள் இருக்கையில் அமர்ந்த பின்னர் கட்டாயம் சீட் பெல்டை அணிய வேண்டும். அப்படி இல்லை என்றால் அதை ரிமைண்ட் செய்யும் விதமாக காருக்குள் ஓர் ஒலிப்பான் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதை தடை செய்யும் வகையிலேயே அந்த கருவி இருப்பதனால் அதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதைப் பயன்படுத்துவது தெரிந்தாலும் அபராதம் போன்றவை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஏர் பேக்குகள் கட்டாயம்:
கார்கள் விபத்தைச் சந்திக்கும்போது பயணிகளைக் காக்கும் முதன்மையான கருவியாக ஏர் பேக்குகள் இருக்கின்றன. பட்ஜெட்டில் கார்களை விற்பனைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக சில வாகன உற்பத்தியாளர்கள் முன் பக்கத்தில் மட்டும் இரு ஏர் பேக்குகள் உடன் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே அனைத்து கார் மாடல்களிலும் ஆறு ஏற் பேக்குகள் கட்டாயம் என புதிய சட்டத்தை அரசு நாட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த விதி நாட்டில் 2023 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இது விபத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவும்.
பாரத் என்சிஏபி கிராஷ்ட் டெஸ்ட்:
இந்தியாவில் விற்கப்படும் வாகனங்கள் பாதுகாப்பானது தானா என்பதை ஆராய்வதற்காக கார்கள் குளோபல் என்சிஏபி-க்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இனி இந்த நிலை இருக்காது. ஆம், இந்தியா விரைவில் தனது சொந்த வாகன பாதுகாப்பு சோதனை நிறுவனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது. இந்த நிறுவனம் இந்தியாவிற்கான பாதுகாப்பு தரத்தை நட்சத்திர மதிப்பீட்டின்கீழ் வழங்கும். இந்தியாவே உருவாக்கி இருக்கும் விதி என்பதால் அது மிக எளிதாக இருக்கும் என எண்ணி விட வேண்டாம். மிகக் கடுமையான விதிகளின்கீழே வாகனங்கள் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட இருக்கின்றன. பயணிகளுக்கு பாதுகாப்பான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இதனை அரசு மேற்கொள்ள இருக்கின்றது.
பிஎஸ் 6 கட்டம் 2 உமிழ்வு விதிகள்:
இந்தியாவில் ஏற்படும் சுற்று சூழல் மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக அரசு பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியை அறிமுகப்படுத்தியது. இதன் 2 ஆம் கட்ட விதியே விரைவில் அமலுக்கு வர உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதலே அது அமலுக்கு வர இருக்கின்றது. தற்போது நடைமுறையில் இருக்கும் பிஎஸ்6 விதியைக் காட்டிலும் இதில் கெடுபிடி அதிகம் இருக்கும். இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் மாசைக் கட்டுக்குள் கொண்டு வருவதே இந்த விதியின் நோக்கமாகும். யூரோ 5 மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமானதாக இது இருக்கும். மாசைக் குறைக்கும் சாதனத்தையும், மாசை அந்த வாகனம் எந்தளவு வெளிப்படுத்துகின்றது என்கிற கருவியும் அதில் இருக்க வேண்டும் என்பதையே இந்த விதியின் முக்கிய சாராம்சமாகும்.
மின் வாகனங்களுக்கான ஸ்வாப்பிங் பேட்டரிக்கான பாலிசி:
2020 மற்றும் 2021 இல் விற்பனையாகியதைக் காட்டிலும் தற்போது மின்சார வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இந்த நிலையை போக்கி மின் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மின்சார வாகனத்திற்கான பேட்டரி ஸ்வாப் கொள்கையையே அரசு அண்மையில் அறிவித்தது. இந்த கொள்கையின் முக்கி நோக்கமே நாடு முழுவதும் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதாகும். இந்த நிலையங்கள் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரியை முழு சார்ஜ் திறனில் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








