அடல் சுரங்கப்பாதையில் சுற்றுலா பயணியை வெளுத்து வாங்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
அடல் சுரங்கப்பாதைக்கு உள்ளே சுற்றுலா பயணி ஒருவரை காவல் துறையினர் மிக கடுமையாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடல் சுரங்கப்பாதைக்கு உள்ளே ஒருவர் மிக கடுமையாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சென்ற ஒருவரால், இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் கேசரி ஹிமாச்சல் பிரதேஷ் யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நபர் சுற்றுலா பயணியாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அதே சமயம் அவரை தாக்கியவர்கள் ஹிமாச்சல பிரதேச காவல் துறை மற்றும் எல்லைப்புற சாலைகள் அமைப்பை சேர்ந்த அதிகாரிகளாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு உள்ளான நபர் என்ன தவறு செய்தார்? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் அவரை கால்களால் உதைப்பதையும், லத்தியால் தாக்குவதையும் இந்த காணொளியில் பார்க்க முடிகிறது.

அதிகாரிகள் என கூறப்படும் நபர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டனர்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த காணொளி வேகமாக பரவி வருவதால், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஹிமாச்சல பிரதேச காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தற்போது வரை எந்தவிதமான விளக்கத்தையும் வழங்கவில்லை.

இருந்தாலும் தாக்குதலுக்கு உள்ளான நபர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருக்கலாம் எனவும், இதன் காரணமாக அதிகாரிகள் அவரை தாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்து வைத்தார். தற்போது இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளை அடல் சுரங்கப்பாதை ஈர்த்து வருகிறது.

ஆனால் அடல் சுரங்கப்பாதைக்கு உள்ளே சுற்றுலா பயணிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறுகின்றனர். குறிப்பாக குடிபோதையிலும், வேக வரம்பை மீறியும் வாகனங்களை ஓட்டுவது அதிகமாக நடக்கிறது. அத்துடன் அடல் சுரங்கப்பாதையின் உள்ளே வாகனங்களை நிறுத்தி விட்டு நடனம் ஆடுவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில் கூட சுற்றுலா பயணிகள் சிலர் அடல் சுரங்கப்பாதையின் உள்ளே இவ்வாறான காரியத்தை செய்து போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினர். இந்த காணொளியும் வேகமாக பரவிய நிலையில், பலரை காவல் துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இப்படி நடனமாடுவது தவிர சுற்றுலா பயணிகள் சிலர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

அதாவது கார்களின் மேலே அமர்ந்து ஏறி அமர்ந்து கொண்டும், கதவுகளை திறந்து வைத்து கொண்டும் வேகமாக பயணிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக ஹிமாச்சல பிரதேச காவல் துறையினர் தற்போது வரை 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அடல் சுரங்கப்பாதைக்கு வாகனங்களில் சுற்றுலா செல்வதாக இருந்தால், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது அவசியம். இது உங்களை விபத்துக்களில் இருந்து மட்டுமல்லாது, காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்தும் காப்பாற்றும்.


Click it and Unblock the Notifications








