காஷ்மீரின் லே-மணாலி நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் பயணிக்க திடீர் முட்டுக்கட்டை..!!
காஷ்மீரின் லே-மணாலி நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் பயணிக்க திடீர் முட்டுக்கட்டை..!!
இமயமலையின் ரம்மியமான இயற்கை எழில்கொஞ்சும் உயரமான சிகரங்கள் பல உள்ளன. இதனை கண்டுகளிக்க பலர் மோட்டார்சைக்கிள்களில் விரும்பி பயணம் மேற்கொள்கின்றனர். இதில் முக்கியமான இடம் காஷ்மீரில் உள்ள லே - லடாக்.

உலகிலேயே உயரமான சாலை என்ற சிறப்பு கொண்டது காஷ்மீரில் உள்ள லே. லே பயணம் மேற்கொள்பவர்களுக்காகவே ஹிமாச்சலப் பிரதேசத்தின் மணாலியிலும், காஷ்மீரின் லே-லடாக் பகுதிகளிலும் மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு தருகின்றனர்.

சாலை மார்க்கமாக லே பயணம் மேற்கொள்பவர்கள் லே - மணாலி நெடுஞ்சாலையைத்தான் பயன்படுத்த முடியும்.

இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நெடுஞ்சாலை ஆண்டில் நான்கரை மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். கோடை காலமான மே - ஜூன் - அக்டோபர் ஆகிய மாதங்களில் பணி விலகியிருக்கும் பட்சத்தில் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.

மக்கள் நடமாட்டம் காண இயலாத இந்த நெடுஞ்சாலையில் முக்கிய நகரமாக சர்ச்சூ விளங்குகிறது. இந்த சாலையில் பயணம் மேற்கொள்பவகளுக்காகவே இந்த பகுதி இயங்குகிறது.

அவர்களுக்கு தேவையான டெண்ட்கள், உணவு விடுதிகள் இயங்குகின்றன. பைக் ரைடர்கள் இரவு தங்கிச் செல்ல இந்த பகுதியை பயன்படுத்துகின்றனர்.

சாலைப் பயணத்தின் மகுடமாக கருதப்படும் இந்த மோட்டார்சைக்கிள் பயணத்தில் தற்போது ஒரு புதிய முட்டுக்கட்டை உருவாகியுள்ளது.

மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த சுற்றுலா பயணிகள் சிலரின் வண்டிகள் லே - மணாலி நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய நகரமான சர்ச்சூ பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றின் சாவிகளும் மணாலி பைக்கர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களால் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் மணாலி மற்றும் காஷ்மீரின் லே - லடாக் பகுதிகளை சேர்ந்த பைக்கர்கள் அசோசியேசன்களுக்கு இடையில் திடீரென புகைச்சல் கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக லடாக் பைக்கர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களால் ஒரு அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஜூன்3 மற்றும் 5ம் தேதிகளில் மணாலி சங்கத்தினர் 40 மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் லே பதிவு எண் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் மணாலி பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதால் இனி லே செல்பவர்கள் சர்ச்சூ பகுதி வரை தான் செல்ல முடியும்.

இதே போல ஹிமாச்சல பிரதேச பதிவு எண் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் லடாக் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லே-லடாக் பகுதியைச் சேர்ந்த சங்கத்தினரால் வாடகைக்கு விடப்படும் மோட்டார்சைக்கிள்களால் தங்கள் பகுதியில் தொழில் பாதிக்கப்படுவதாக மணாலி பைக்கர்கள் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

தொழிற்போட்டி காரணமாக இரண்டு மாநில பைக்கர்கள் சங்கத்தினருக்கு இடையேயான போட்டி சுற்றுலா பயணிகளையும், மோட்டார்சைக்கிள் ரைடர்களையும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








