விரலை சொடுக்குனா ஆயிரம் சொகுசு கார் வரும்... ரஷ்ய அதிபரை அழைத்து சென்ற காரை கவனீத்தீர்களா?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) அவர்களை வரவேற்பதில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள், வழக்கமான மரபுகளைத் தாண்டி, இருவருக்கும் இடையேயான நட்பை வெளிக்காட்டும் வகையில் புதுமையான விஷயங்களை செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, விலை குறைவான டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரில் இருநாட்டு தலைவர்களும் பயணித்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிசம்பர் 4ஆம் தேதியான இன்று மாலை டெல்லியில் உள்ள பலாம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய புதினை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்று, தனது பாரம்பரிய ரேஞ்ச் ரோவர் (Range Rover) வாகனத்தைத் தவிர்த்து, அவருடன் ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தனது இல்லத்திற்குப் பயணித்தார். இந்த திடீர் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற ஃபார்ச்சூனர் கார், MH01EN5795 என்ற பதிவு எண்ணைக் கொண்டிருந்தது.

மஹாராஷ்டிரா பதிவு எண் கொண்ட இந்த வாகனம், டொயோட்டா ஃபார்ச்சூனரின் 'சிக்மா 4 மேனுவல்' ரகத்தைச் சார்ந்தது ஆகும். அதாவது, இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. டீசலில் இயங்கும் பிஎஸ்-6 தரக் கட்டுப்பாட்டுடன் கூடிய இந்தக் கார், இந்திய பிரதமரின் விஐபி போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் சிறப்பு வாகனங்களில் இடம் பெற்றுள்ளது.
காரின் ஆர்டிஓ (RTO) பதிவுத் தரவுகளின்படி, இந்தக் ஃபார்ச்சூனர் கார் 2024 ஏப்ரல் 24 அன்று பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இதன் வயது ஒரு வருடம் ஏழு மாதங்கள் ஆகும். இந்த குறிப்பிட்ட ஃபார்ச்சூனர் கார், மும்பையின் கூடுதல் காவல் ஆணையாளருக்குச் சொந்தமானது ஆகும். காரின் உடற்தகுதிச் சான்றிதழ் 2039 ஏப்ரல் 23 வரையிலும், மாசு உமிழ்வு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUCC) 2026 ஜூன் 25 வரையிலும் செல்லுபடியாகும்.

இந்த விவரங்கள் அனைத்தும், பாதுகாப்பு மற்றும் உமிழ்வுச் சோதனைகளில் தேர்ச்சி பெற்ற பிரதமரின் பாதுகாப்பு வாகனக் குழுவில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட கார் இது என்பதைக் காட்டுகிறது. ரஷ்ய அதிபரின் இந்த இரண்டு நாள் பயணத்தின்போது, இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. புதின் வருகையை முன்னிட்டு, டெல்லியின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சாலைகளில் வாகன நிறுத்தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, பிரதிநிதிகள் குழு தடையின்றிப் பயணிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்திலிருந்து பிரதமர் இல்லம் வரையிலான இந்த ஃபார்ச்சூனர் கார் பயணம், ஏற்கனவே திட்டமிடப்பட்ட விரிவான அட்டவணையின் ஒரு பகுதியாகும். இதில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் உரையாடல்கள் நடைபெற உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே சமீப காலங்களில் உறவு நன்கு மேம்பட்டுள்ளது. முன்னதாக, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போதும் இதேபோன்று பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் இந்த இரு நாட்டின் முக்கிய தலைவர்கள் பயணம் செய்துள்ளதால், நிச்சயமாக இந்த கார் புல்லட் ஃப்ரூஃப் (Bullet Proof) செய்யப்பட்டதாகவே இருக்கும்.
இருப்பினும், வழக்கமான விலையுயர்ந்த லிமௌசைன் (Limousine) கார்களை விடுத்து டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற அதிக விலைமிக்க சொகுசு-அல்லாத காரை தலைவர்களின் இந்த பயணத்திற்கு தேர்வு செய்ததற்கான காரணம் என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. இது திடீரென எடுக்கப்பட்ட முடிவாக இல்லாமல், நிச்சயம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகவே இருக்கும் என கருதுகிறோம்.

அதேநேரம், ஃபார்ச்சூனர் காரையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில், இந்தியாவில் பெரும் பணக்காரர்களும் விரும்பக்கூடிய காராக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது. இந்தியாவில் தற்சமயம் பெட்ரோல், டீசல் மற்றும் மைல்ட்-ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் ஃபார்ச்சூனர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.33.65 லட்சத்தில் இருந்து ரூ.48.85 லட்சம் வரையில் உள்ளன.


Click it and Unblock the Notifications









