முதுமலைல புலிகள பாக்க கார்ல போகலாம்னு இருக்கீங்களா? இப்போ இல்ல, எப்போ போனாலும் இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க!
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyoya Fortuner) எஸ்யூவி காரில் முதுமலை புலிகள் காப்பகத்துக்குச் சென்ற இளைஞர்களுக்கு மசினகுடி வனத்துறை அதிகாரிகள் பெரும் தொகையை அபராதமாக விதித்திருக்கும் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. ரூ. 15 ஆயிரத்திற்கான அபராதமே அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர்களுக்கு எதன் அடிப்படையில் இவ்வளவு அதிக அபராதத்தை அதிகாரிகள் விதித்தனர் என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சமீபத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கருப்பு நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சுற்றுலா சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படக் கூடிய இடத்தில் காரை நிறுத்தி விட்டு வெளியே வந்ததாகக் கூறப்படுகின்றது.

இதுதவிர, சாலை ஓரத்தில் இருந்த வனவிலங்குகள் சிலவற்றை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் நடந்துக் கொண்டதும் தெரிகின்றது. குறிப்பாக, கூட்டமாக காட்டில் மேய்ந்துக் கொண்டிருந்த மான்களையும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் வந்த அந்த இளைஞர்கள் அச்சுறுத்தி விரட்டியடித்து இருக்கின்றனர். இளைஞர்களின் இந்த வேண்டத்தகாத செயலைக் கண்டித்தே ரூ. 15 ஆயிரத்திற்கான அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.
இளைஞர்கள் வனவிலங்குகளை அச்சுறுத்தும் விதமாக நடந்துக் கொள்ளும் வீடியோ வெளியான நிலையிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. வனவிலங்கு-மனிதர்கள் இடையேயான மோதல் இப்போதும் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இப்போதே அது பன்மடங்காக அதிகரித்து காணப்படுகின்றது.
இதற்கு அவர்களின் அஜாக்ரதையான செயலே முக்கிய காரணம். இன்றைய இளைஞர்கள் பலர் இணையத்தின் மீதுள்ள மோகம் காரணமாக, காட்டில் சுந்திரமாக வலம் வரும் வனவிலங்குகளை வீடியோ எடுத்து வருகின்றனர். குறிப்பாக, அவற்றை அச்சுறுத்தும் விதமாக விலங்குகளின் அருகில் சென்று வீடியோ மட்டுமின்றி செல்ஃபியும் எடுத்து வருகின்றனர்.
இதுபோன்று செயலில் ஈடுபடும்போதே விலங்குகளிடம் அதிகம் அவர்கள் அடிப்படுகின்றனர். இதைத் தவிர்க்கவே முதுமலை போன்ற காட்டுப் பகுதியில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் வாகனங்களில் இருந்து இறங்க வேண்டாம் என்கிற எச்சரிக்கையை வழங்கப்படுகின்றது. குறிப்பாக, வனவிலங்குகளின் அருகில் சென்று படமோ அல்லது வீடியோவோ எடுக்க வேண்டாம் என்றும் கூறப்படுகின்றது.
இருப்பினும், இந்த அறிவுறுத்தலை பெரும்பாலானோர் காதிலேயே வாங்குவதில்லை. வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே வருவதோடு, நடமாடிக் கொண்டிருக்கும் வனவிலங்குகளை வீடியோ மற்றும் செல்ஃபியும் எடுத்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரங்களிலே சிலர் தங்களின் உயிரை, கை, கால்களை இழக்கின்றனர். இதுமட்டுமல்ல பலர் தங்களின் விலையுயர்ந்த வாகனங்களையும் விலங்குகளின் தாக்குதலால் இழக்கின்றனர்.
இந்த மாதிரியான காரணங்களினாலேயே வனப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவோர் மற்றும் படமெடுப்போர் மீது சிறிதும் கரிசனம் இன்றி வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையிலேயே முதுமலை புலிகள் காப்பத்தில் அஜாக்ரதையுடன் செயல்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மீதும், இளைஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அபராதமானது வனவிலங்குகளை அச்சுறுத்தியதற்காக மட்டுமல்ல, அந்த வாகனம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதற்காகவும் விதிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் வெளியாகவில்லை. அதேவேளையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பயன்படுத்தப்பட்டு இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தைக் கொண்டவையாகவும், நம்பர் பிளேட் ஃபேன்சி எழுத்துக்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே ரூ. 15 ஆயிரத்திற்கான அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காடுகளில் வழக்கம்போல் சென்றுக் கொண்டிருக்கும் வாகனங்களையே மிருகங்கள் சில தாக்கும் சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். இந்த மாதிரியான சூழலிலேயே சில இளைஞர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் அஜாக்ரதையாக நடந்துக் கொண்டதோடு, விலங்குகளையும் அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொண்டனர். இது கண்டிக்கத்தக்க செயல் ஆகும்.


Click it and Unblock the Notifications








