ஹாலிவுட் படங்களை மிஞ்சும் சம்பவம்... பறந்து சென்ற டொயோட்டா பார்ச்சூனர் கார்... அதிர வைக்கும் வீடியோ
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் பறந்து சென்ற டொயோட்டா பார்ச்சூனர் காரின் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது.

தாறுமாறாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் நிறைய பேர் இருப்பதால், இந்தியாவில் சாலை விபத்துக்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை. இந்திய சாலைகள் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் உயிர்களை காவு வாங்கி வருகிறது. அத்துடன் பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைவதற்கும் சாலை விபத்துக்கள் காரணமாக உள்ளன.

குடிபோதை அளிக்கும் கிறக்கத்தில் தாறுமாறாக வாகனங்களை இயக்குவது மற்றும் பொது சாலைகளை ரேஸ் டிராக் என கருதி அதிவேகமாக பறப்பது ஆகியவைதான் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன.

எனவே போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிக கடுமையாக உயர்த்தியது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

எனினும் இந்தியாவில் நடைபெறும் அதிர்ச்சிகரமான சாலை விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தற்போதும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. மற்ற விபத்துக்களை நாம் எளிதாக கடந்து சென்று விட்டாலும் கூட, இந்த விபத்தை மறப்பது கடினமான ஒரு காரியம்தான்.

அந்த அளவிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் சண்டிகரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி கார் ஒன்று ஓரளவிற்கு மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு டி ஜங்ஷன் (T junction) ஒன்று வந்தது. ஆனால் டொயோட்டா பார்ச்சூனரின் டிரைவர் வேகத்தை குறைக்கவில்லை.

அந்த சமயத்தில் அவ்வழியாக வந்து கொண்டிருந்த செடான் ரக கார் ஒன்று டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரின் மீது மோதியது. இதனால் ஹாலிவுட் பட பாணியில் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி அப்படியே பறந்து சென்று, சாலையோரமாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்த 2 கார்களின் மீது விழுந்தது.

பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களின் மீது டொயோட்டா பார்ச்சூனர் விழுந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்தபோது 23 வயது மட்டுமே நிரம்பிய இளைஞர் ஒருவர்தான் டொயோட்டா பார்ச்சூனர் காரை ஓட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் அவருக்கு காயம் ஏற்பட்டது.

அவருக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனவேதான் அவரால் வேகத்தை குறைக்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரின் மீது மோதிய செடான் கார் இந்த விபத்தால் பெரிய அளவில் சேதம் அடையவில்லை. அதிர்ச்சிகரமான அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த விபத்து நிகழ்ந்தவுடன் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரின் டிரைவர் சுய நினைவை இழந்து விட்டதாகவும், அவ்வழியாக வந்தவர்கள் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் வேகத்தை குறைக்க வேண்டும். ஆனால் உடல் நல பாதிப்புடன் காரை ஓட்டும்போது விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இந்த விபத்தால் ஏற்பட்ட காயத்தில் இருந்து டொயோட்டா பார்ச்சூனர் காரின் டிரைவர் முழுமையாக மீண்டு வருவார் என நாங்கள் நம்புகிறோம். பொதுவாக எப்போதும் அதிவேகத்தில் வாகனங்களை இயக்காதீர்கள். இது விபத்துக்கு வழி வகுத்து விடும். அத்துடன் உடல் நல பாதிப்பு இருக்கும் சமயங்களிலும் வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பதும் நலம்.


Click it and Unblock the Notifications








