கட்டிமுடிக்கப்படாத 30 அடி உயர பாலத்தில் இருந்து தலைக்குப்புற கீழே விழுந்த இன்னோவா கார்: 3 பேர் பலி
கட்டிமுடிக்கப்படாத 30 அடி உயர பாலத்தில் இருந்து தலைக்குப்புற கீழே விழுந்த இன்னோவா கார்..!! 3 பேர் பலி..!!
திரைப்படங்களில் காட்டப்படும் கார் விபத்துக்களை போன்று சென்னை அருகே ஏற்பட்ட விபத்து ஒன்று பரபரப்பையும், சோகத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் அருகே கட்டிமுடிக்கப்படாத பாலம் ஒன்றில் சென்ற டொயோட்டோ இன்னோவா கார் 30 அடி உயரத்தில் இருந்து தலைக்குப்புற கீழே விழுந்து நொறுங்கியது.

கடந்த வியாழன் அன்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் பழனி, மனைவி நவநீதம் மற்றும் அவர்களது மகள் பவித்ரா ஆகியோர் பலியாயினர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்த இவர்கள் மீஞ்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பாதை மாறி வந்த கார், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இருந்த மேம்பாலத்தில் ஏறி சென்றது.

பாதி கட்டி முடிக்கப்படாமல் இருந்த அந்த பாலத்தின் கட்டுமான பணிகள் குறித்து எந்த தகவலும் இல்லை. அதனால் ஓட்டுநர் எப்போதும் போல நேராக காரை பாலத்தின் மீது ஓட்டி சென்றார்.

அப்போது பாலத்தில் இருந்து சுமார் 30 அடி உயரத்தில் டொயோட்டா இன்னோவோ கார் கீழே இருந்த பள்ளத்திற்குள் தலைகுப்புற விழுந்தது.

பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்ததால், அதில் விழுந்த கார் மூழ்க தொடங்கியது. மேலும் காரில் பாதுகாப்பிற்காக இருந்த ஏர்பேகுகள் விரிவடைந்ததால் உள்ளே இருந்த பழனி, நவநீதம் மற்றும் பவித்ரா ஆகியோரால் வெளியே வர முடியவில்லை.

இதனால் அவர்கள் மூவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் கந்தவேல் மற்றும் பவித்ராவின் கணவர் அய்யப்பன் உயிர்பிழைத்தனர்.

பழனி மற்றும் அவர் குடும்பத்தினர் சென்ற இன்னோவோ காரை பின் தொடர்ந்து வந்த உறவினர்கள் மூலம் இந்த விபத்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இரவு நேரம் என்பதாலும், பாலம் கட்டும் பணி குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்பதாலும், இந்த விபத்து நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் சாலையில் பேரிகேடுகள் போடப்படாமல் இருந்துள்ளது. கட்டுமானம் குறித்த எந்த குறியீடுகளும் விபத்து நடந்த பகுதியில் தென்படவில்லை. இவை அனைத்தும் கிரிமனல் குற்றங்கள்.

இதன் காரணமாகதற்போது விபத்து நடந்து உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளதால், இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








