ரோட்டில் சென்றவர்களுக்கு கொஞ்ச நேரத்தில் பயம் தொண்டையை கவ்விடுச்சு!! இன்னோவாவில் வந்த குட்டி எமன்!
டொயோட்டா இன்னோவா (Toyota Innova) காரை 14 வயது சிறுவன் ஓட்டியதில், 63 வயதான பெரியவர் ஒருவர் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் படுத்த படுக்கையாக உள்ளார். எங்கு இந்த சம்பவம் நடந்துள்ளது? எவ்வாறு 14 வயது மட்டுமே ஆன சிறுவனை இவ்வளவு பெரிய காரை ஓட்ட அனுமதித்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
மோட்டார் வாகன சட்டத்திலேயே மிக ஆபத்தான குற்றமாக பார்க்கப்படுவது, அண்டர் ஏஜ் டிரைவிங் ஆகும். அதாவது, வாகனம் ஓட்டுவதற்கு போதிய வயது எட்டாத, முறையான டிரைவிங் லைசன்ஸ் இல்லாதவர் வாகனம் ஓட்டுவதாகும். ஆனால், நம் இந்தியாவில் அவ்வாறான அண்டர் ஏஜ் டிரைவிங்குகளை பரவலாக பார்க்க முடியும்.

குறிப்பாக, சிறுவர், சிறுமியர்கள் 2-வீலர்களை ஓட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதன் விளைவாக, விபத்துகள் பல நடந்துள்ளன. ஆனால், இங்கு ஒருவர் ஒருபடி மேலே போய், டொயோட்டா இன்னோவா என்ற அளவில் பெரியதான எம்பிவி காரை இயக்கி, விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது மும்பையில் ஆகும்.
14 வயது மட்டுமே ஆன ஒரு சிறுவன் தனது வீட்டின் வளாகத்திற்குள் இருந்து காரை ஓட்டி வந்து, சாலையில் ஓர் ஆட்டோவை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல், ஓரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்த முதியவர் மீதும் மோதி, அவரை மருத்துவமனையில் படுத்த படுக்கையாக்கி உள்ளார். இதுகுறித்து, அருகில் உள்ள சிசிடிவி-இல் பதிவாகியுள்ள காட்சிகளை கீழே காணலாம்.
சாண்டிவாலி குடிமக்கள் நல சங்கத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்தியவர் இந்த சங்கத்தின் வளாகத்திற்குள் குடியிருப்பவர் ஆவார். விபத்தில் காயமடைந்த முதியவரும் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் இருந்தே வெளிவருவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆதலால், இருவருக்கும் ஒருவரையொரு தெரிந்திருக்கலாம் என்பதால், பலி வாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த முதியவர் 3 மாதங்களுக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். சேதம் ஏற்படுத்திய சிறுவனின் பெற்றோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தை சிசிடிவி காட்சிகளுடன் போலீஸாருக்கு சாண்டிவாலி குடியிருப்பு சங்கம் தெரியப்படுத்தி உள்ளது. டொயோட்டா இன்னோவா காரை உங்களில் பலர் நேரில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அளவில் நன்கு பெரியதாக இருப்பதினாலேயே, இந்த காரை இந்தியர்கள் பலருக்கு பிடித்துள்ளது. ஆனால், கார் எவ்வளவு பெரியதாக உள்ளதோ அந்த அளவிற்கு அதனை கண்ட்ரோல் செய்வது சிரமமான விஷயமாக இருக்கும். நிறைய கார்களை ஓட்டிய அனுபவமிக்கவர்கள், இன்னோவாவை எளிதாக ஹேண்டில் செய்துவிடுவர். ஆனால், முதல்முறையாக கார் ஓட்டுபவர்களுக்கு இன்னோவா முற்றிலுமாக சரியான வாகனம் அல்ல. அதிலிலும், 14 வயது மட்டுமே ஆன சிறுவனால் இந்த காரை கண்ட்ரோல் செய்யவே முடியாது.
டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.24.39 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. சமீபத்தில்தான் இன்னோவாவின் விலைகளை ரூ.35,000 வரையில் டொயோட்டா உயர்த்தியது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவில் 2.4 லிட்டர், டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 145 பிஎச்பி மற்றும் 343 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 14 வயதான சிறுவனை எந்தவொரு பெற்றொரு கார் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், சிறுவர், சிறுமியர் முன் கார் சாவியை வைப்பது, கார் ஓட்டும் ஆசையை அவர்களுக்குள் ஏற்படுத்துவது போன்ற தவறுகளை இன்றைய காலத்தில் பல பெற்றோர்கள் செய்கிறார்கள். சிறுவர்களுக்கு தானாக கார் ஓட்டும் ஆசை வந்தாலும், பெற்றோர்கள் தான் அதனை கண்டிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications









