ஆம்புலன்ஸை சுமார் 5 கிமீ தொலைவிற்கு மறித்தப்படி சென்ற இன்னோவா கார்!! நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்!
இதய நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை கிட்டத்தட்ட 5 கிமீ தூரத்திற்கு வழி மறித்தவாறு கார் ஓட்டிய இன்னோவா கார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசரகால ஊர்த்திகளை வழி மறித்தல் எப்போதுமே குற்ற சம்பவமாகவே இந்தியாவில் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உயிருக்கு போராடுபவரை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸை வழி மறித்து வாகனம் ஓட்டியவர்கள் மீது போலீஸார் எடுத்த நடவடிக்கைகளை இதற்கு முன் பல முறை பார்த்துள்ளோம்.

ஆனால் கேரளா, கொல்லம் மாவட்டத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் அவசர அவசரமாக இயங்கி கொண்டிருந்த ஆம்புலன்ஸை வழி மறித்து வாகனம் ஓட்டியுள்ளார், அவர் மீது தற்போது வரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசியாநெட்நியுஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவில் இந்த கார் ஓட்டுநர் ஆம்புலன்ஸை மறித்தவாறு செல்வதை காணலாம்.
Image Courtesy: asianetnews
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்களின்படி பார்க்கும்போது, இந்த ஆம்புலன்ஸில் இதய நோயாளி ஒருவரை மிக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று அழைத்து சென்றுக் கொண்டிருந்தனர். இந்த வீடியோவில் இந்த ஒற்றை வெள்ளை நிற டொயோட்டா இன்னோவா காரை தவிர்த்து மற்ற வாகனங்கள் அனைத்தும் ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பதை காணலாம்.

ஆனால் இந்த ஒரு கார் மட்டும் ஆம்புலன்ஸிற்கு கிடைக்கும் இடைவெளியை பயன்படுத்தி முன்னேறி சென்று கொண்டே இருக்கிறது. இவ்வாறு கிட்டத்தட்ட 5 கிமீ தொலைவிற்கு இந்த இன்னோவா கார் ஓட்டுனர், உள்ளே இருக்கும் நோயாளியின் நிலைமை தெரியாமல் ஆம்புலன்ஸை வழி மறித்தவாறு பயணித்துள்ளார்.

ஆம்புலன்ஸை மறித்து வாகனத்தை ஓட்டினால் நிச்சயமாக தண்டணை உண்டு. அதுமட்டுமில்லாமல் வீடியோவில், உள்ளே யார் யார் உள்ளனர் என்பதை பார்க்க முடியாத அளவிற்கு காரின் பின் ஜன்னல் கண்ணாடி திரையால் மறைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். இவ்வாறு கண்ணாடிகளை திரையினாலோ அல்லது கருப்பு நிற மென் படலத்தினாலோ மறைப்பது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும்.

மேலும் இந்த இன்னோவா கார் சாலை விதிகளையும் முறையாக பின்பற்றவில்லை. அதாவது, அவ்வப்போது மாற்று பாதையில் சென்று எதிரில் வரும் வாகனங்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கியுள்ளது. இதனால் இவற்றிற்கும் சேர்த்து இந்த கார் ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கலாம். இந்த இன்னோவா கார் ஓட்டுநர் இந்த சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் வசிப்பவர் தானாம்.

இவரை பற்றி அந்த ஏரியா மக்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர். இந்த இன்னோவா கார் எப்போதுமே இப்படி தான் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செல்லுமாம். சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலத்தில் இந்த இன்னோவா கார் ப்ளாக் லிஸ்ட்டில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகளோ அல்லது போலீஸாரோ இந்த காரின் மீது எந்தவொரு வழக்கையும் பதிவு செய்ததாக செய்திகள் இல்லை.

இதை பற்றி பேசவே அவர்கள் மறுப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்தப்பட்சம் தற்போது நடைபெற்றுள்ள இந்த ஆம்புலன்ஸ் வழி மறிப்பு செயலிற்காகவாவது இந்த இன்னோவா கார் ஓட்டுநருக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்க மாட்டார்களா என்பது தான் தற்போது அந்த பகுதி மக்களின் கவலையாக உள்ளது.

அதேநேரம் இந்த இன்னோவா கார் உரிமையாளர் யார் என்பதையும் அந்த மக்களால் கூற முடியவில்லை. ஏனெனில் பலருக்கு அந்த கார் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. இவ்வாறான சம்பவங்கள் நம் நாட்டில் அவ்வப்போது நடைபெறக்கூடிய ஒன்றே. அதற்காக நாம் இத்தகைய செயல்களை பார்த்து கொண்டு சும்மா இருந்துவிடக்கூடாது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரையில் அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.

கேரள போலீஸார் இவ்வாறான சம்பவங்களை துளியும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த இன்னோவா கார் எப்படி சுதந்திரமாக வெளியே சுற்றுகிறது என்பது தெரியவில்லை. இதற்குமுன் சில மாதங்களுக்கு முன்பு கூட கர்நாடகா மாநிலத்தில் ஒருவர் தனது மாருதி சுஸுகி எர்டிகா காரில் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸிற்கு முன்பாக கிடைக்கும் வழியினை பயன்படுத்தி சென்றார்.

ஆனால் இந்த விஷயத்தில் கர்நாடக மாநில டக்ஷினா மாவட்ட போலீஸார் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்திய மோட்டார் வாகன சட்டம் என்ன சொல்கிறது என்றால், அவசர ஊர்திகளை மறித்தப்படி பயணம் செய்தால் ரூ.10,000ஐ அபராதமாக செலுத்த வேண்டும். எங்களை கேட்டால் இந்த தொகை எல்லாம் போதாது. கடுமையான சட்டங்கள் மட்டுமே இவ்வாறான செயல்பாடுகளை குறைக்கும்.


Click it and Unblock the Notifications








