3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...
வித்தியாசமான காரணத்திற்காக போலீசார் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால், டிராக்டர் டிரைவர் ஒருவர் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளார்.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

எனவே அதிகப்படியான அபராத தொகைகளை செலுத்த பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என மத்திய அரசு நம்புகிறது. தற்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர். உயர்த்தப்பட்ட அபராத தொகைகள்தான் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படுகிறது.

எனவே ஒரு சில சமயங்களில், வாகன ஓட்டிகளுக்கு லட்சக்கணக்கில் கூட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கெடுபிடி காரணமாக வாகன ஓட்டிகள் மத்தியில் போலீசார் மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இது போதாதென்று செய்யாத தவறுகளுக்கும் கூட வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தவறு செய்ததற்கு அபராதம் விதிப்பது என்பது நியாயமானது. அதை வாகன ஓட்டிகள் அனைவரும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் செய்யாத தவறுக்கு அபராதம் விதித்தால் என்ன செய்வது? போலீசாரின் இந்த விசித்திரமான நடவடிக்கையால் டிராக்டர் டிரைவர் ஒருவர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூர் பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் தேவேந்திர குமார். கர் முக்தேஷ்வர் எனும் பகுதியில், டிராக்டர் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதது மற்றும் லைசென்ஸ் இல்லாதது ஆகிய காரணங்களுக்காக தேவேந்திர குமாருக்கு போலீசார் 3,000 ரூபாய் அபராதம் விதித்து, செல்லான் வழங்கியுள்ளனர்.

இது குறித்து டிராக்டர் டிரைவர் தேவேந்திர குமார் கூறுகையில், ''எனது டிராக்டரின் பதிவு எண்ணிற்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்து செல்லான் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரித்தேன். அப்போது அந்த செல்லான் ஒரு இரு சக்கர வாகனத்திற்கானது என்பது தெரியவந்தது'' என்றார்.

அத்துடன் ஹெல்மெட் அணியாமல் டிராக்டர் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதால், தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தேவேந்திர குமார் தெரிவித்துள்ளார். அதேசமயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்து விட்டதாக போலீசார் கூறியுள்ளார். இதுகுறித்து டிராபிக் இன்சார்ஜ் அஜய் வீர் சிங் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளிடம் பேசினேன்.

அப்போது தற்செயலாக இந்த இ-செல்லானை வழங்கி விட்டதாக அவர் என்னிடம் கூறினார்'' என்றார். மேலும் இந்த செல்லான் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே செல்லான் இலக்கை எட்ட வேண்டும் என்பதற்கான முயற்சிகளின் விளைவாக இதுபோன்று செல்லான்கள் வழங்கப்படுகிறதா? என அவரிடம் கேட்கப்பட்டது.

ஆனால் அப்பாவி டிரைவர்களுக்கு செல்லான் வழங்க வேண்டும் என அதிகாரிகளை கட்டாயப்படுத்தும் வகையிலான இலக்குகள் எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார். வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இதுபோன்று தவறாக அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ஹெல்மெட் அணியவில்லை என கார் டிரைவர்களுக்கும், சீட் பெல்ட் அணியவில்லை என இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் பல முறை அபராதம் விதித்துள்ளனர். இ-செல்லானை மட்டும் போலீசார் தவறான காரணங்களுடன் வழங்குவதில்லை. கைகளால் எழுதி கொடுக்கப்படும் ரசீதுகளிலும் கூட சில சமயங்களில் காரணங்களை தவறாக குறிப்பிட்டு விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications