தேசிய தின விடுமுறையால் ஸ்தம்பித்த பீஜிங் நெடுஞ்சாலைகள்!
நம்மூரில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10 நிமிடங்கள் நிற்பதற்கே நமக்கு டென்ஷன் எகிறுகிறது. ஆனால், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை பார்த்தால், நம்மூர் சுங்கச்சாவடியில் வரிசையில் நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஜுஜுபி என்று சொல்ல வைத்துவிடும்.
சீனாவின், தேசிய தினத்தையொட்டி அங்கு ஒருவார காலம் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், விடுமுறை முடிந்து, ஒரே நேரத்தில் தலைநகர் பீஜிங் நோக்கி மக்கள் வாகனங்களில் திரும்பியதால் அங்குள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் குவிந்தன.
இதனால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும், வாகனங்களில் வந்தோர் பல மணிநேரம் வாகனத்திலேயே முடங்கினர்.

சீன தேசிய தினம்
1949ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி மக்கள் குடியரசு நாடாக உருவானது சீனா. அன்றைய தினத்தை தேசிய தினமாக சீனா கொண்டாடி வருகிறது.

தொடர் விடுமுறை
சீன தேசிய தினத்தையொட்டி, கடந்த 1ந் தேதி முதல் நேற்று வரை ஒரு வார காலம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனை கோல்டன் வீக் என்று அழைக்கின்றனர்.

பயணம்
இந்த நீண்ட விடுமுறை காலத்தையொட்டி, பலர் தங்களது வாகனங்களில் சொந்த ஊருக்கும், சுற்றுலாவும் சென்றிருந்தனர். இதனால், சீனாவின் தலைநகர் பீஜிங் வெறிச்சோடியிருந்தது.

ஸ்தம்பித்த சாலைகள்
விடுமுறை நேற்று முடிந்தது. இந்த நிலையில், விடுமுறையை கழித்துவிட்டு, பலரும் பீஜிங் நகரத்தை நோக்கி திரும்பினர். இதனால், கடந்த செவ்வாய்கிழமை மதியம் முதல் பீஜிங் எல்லைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் வரிசை கட்டின. இதனால், பீஜிங்- ஹாங்காங்- மக்காவோ விரைவு சாலையில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது.

பாதி பேர் பயணத்தில்...
சீன மக்கள் தொகையில் பாதி பேர் இந்த விடுமுறைக்காக பயணத்தில் இருந்ததாக புள்ளிவிபர அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதாவது, 750 மில்லியன் மக்கள் இந்த விடுமுறையின்போது பயணங்களில் இருந்தனராம்.
Source: CCTV News


Click it and Unblock the Notifications