பைக்கில் வந்த வாலிபர்களை கொடூரமாக தாக்கிய போலீஸ்காரர்!
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த இளைஞர்களை போலீஸ்காரர் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்கள் மீது போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே கல்லுப்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 வாலிபர்கள் பைக்கில் வந்துள்ளனர். பைக்கில் வந்த இருவருமே ஹெல்மெட் அணியவில்லை.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் பைக்கில் வந்த இளைஞர்கள் ஹெல்மெட் அணியாததை கண்டு ஆத்திரத்தில், தனது இரண்டு கைகளாலும் லத்தியை பிடித்துக் கொண்டு பைக்கில் வந்த வாலிபர்களை கொடூரமாக தாக்கினார்.
இதில், பைக்கை ஓட்டி வந்தவர் குனிந்து கொண்டதால், பின்னால் அமர்ந்திருந்தவர் மீது லத்தியடி இடி என தலையில் விழுந்தது. போலீஸ்காரர் தாக்கியதால், நிலைகுலைந்த இருவரும் பைக்குடன் கீழே விழுந்தனர்.

லத்தியடி தாக்குதலால் மண்டை உடைந்த வாலிபர் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தாக்கிய வாகன தணிக்கையில் இருந்தபோலீசாரை சூழ்ந்து கொண்டு கண்டனம் தெரிவித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர்கள், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி வீடியோ பதிவுகளும், அந்த போலீஸ்காரர் கொடூரமாக தாக்கும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியானதால், பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவிய இந்த அதிர்ச்சிகரமான வீடியோ குறித்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள், பைக்கில் வந்த வாலிபர் மீது லத்தியால் தாக்கியது திருவட்டார் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மரிய ஆக்ரோஸ் என்பது தெரிய வந்தது.
Recommended Video


அவரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். விசாரணையில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்த வாலிபர் மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜேஷ்[24] என்பதும் தெரிய வந்தது. அவர் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஹெல்மெட் அணிந்து வருவது கட்டாயம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஹெல்மெட் அணியாமல் வந்தது தவறானதுதான்.
ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக இத்தகைய கொடூர தாக்குதலில் போலீஸ்காரர் ஈடுபட்ட சம்பவத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications








