அம்மாவை பைக்கில் ஹாஸ்பிட்டல் கூட்டி செல்லும்போது டிராபிக்கில் சிக்கி கொண்ட மகன்... அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்
உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயை இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது இளைஞர் ஒருவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். அதன்பின் என்ன நடந்தது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் அதற்கு ஏற்ப நகரங்களின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்னை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளும் அவல நிலை காணப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்களுக்கு சில நேரங்களில் போராட்டங்களும் ஒரு காரணமாக உள்ளன. டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தால், டெல்லி மற்றும் அதன் எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த் பாரத் பந்த்தின்போதும், போராட்ட குழுவினர் சாலைகளை அடைத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதில், ஐதராபாத் நகரும் ஒன்று. ஐதராபாத் நகரில் பாரத் பந்த்தின் போது, இளைஞர் ஒருவரின் தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆனால் அவரை மருத்துவமனைக்கு கூட்டி செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல், தனது இரு சக்கர வாகனத்திலேயே அந்த இளைஞர் தனது தாயை மருத்துவனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!
ஆனால் பாரத் பந்த் காரணமாக நடந்த போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதில், அந்த இளைஞரும், அவரது தாயும் சிக்கி கொண்டனர். அந்த இளைஞருடைய தாயின் உடல் நிலை மோசமாகி கொண்டே இருந்த நிலையில், காவல் துறையினர் தக்க நேரத்தில் உதவி செய்துள்ளனர்.

சாய் தேஜா என்ற இளைஞரின் தாயாரான பாரதி என்பவருக்கு பாரத் பந்த்தின்போது காலை 9 மணிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து சாய் தேஜா கூறுகையில், ''எனது தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதும், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையை பெற முயன்றேன். அருகில் இருந்த ஒரு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் சேவைக்கு நான் அழைத்தேன்.

ஆனால் நோயாளி ஒருவரை அழைத்து வர ஆம்புலன்ஸ் வெளியே சென்றிருப்பதாகவும், இன்னும் வரவில்லை எனவும் என்னிடம் சொன்னார்கள்'' என்றார். இதன் காரணமாக வேறு ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு சாய் தேஜா அழைத்தார். ஆனால் எந்த ஆம்புலன்ஸ் சேவையும் கிடைக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் இரு சக்கர வாகனத்தில் தனது தாயை அழைத்து கொண்டு அவர் மருத்துவமனைக்கு கிளம்பினார்.

ஆனால் போராட்டம் காரணமாக சாலையில் அப்போது இருந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழலை அவர் அறிந்திருக்கவில்லை. எனவே நெரிசலில் சிக்கி கொண்டார். இதுகுறித்து சாய் தேஜா கூறுகையில், ''ஆரம்பத்தில் சாலை விபத்து காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது என்றுதான் நினைத்தேன்.

ஆனால் பந்த் காரணமாக நடைபெற்ற போராட்டத்தில் சிலர் சாலையை அடைத்து விட்டனர் என்பது பிறகுதான் எனக்கு தெரியவந்தது. இதன் காரணமாக வாகனங்களால் செல்ல முடியவில்லை'' என்றார். இதற்கிடையே சாய் தேஜாவின் தாயாருடைய உடல் நிலை மோசமாகி கொண்டே இருந்தது. எனவே போக்குவரத்து காவல் துறையினரின் உதவியை சாய் தேஜா நாடினார்.

இதன் பேரில் உடனடியாக களமிறங்கிய காவல் துறையினர், சாய் தேஜாவின் தாயார் மருத்துவமனைக்கு செல்ல உதவியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ''போராட்டத்தின்போது சாலை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பெண் ஒருவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது என கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர தகவல் கிடைத்தது.

எனவே நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, சாய் தேஜாவையும், அவரது தாயாரையும் சாலையின் எதிர் பக்கத்திற்கு மாற்றினோம். பின்னர் அங்கு போக்குவரத்தை சரி செய்து அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல ஏற்பாடு செய்தோம். அதாவது ராங் சைடில் அவர்கள் பயணிக்க வழி ஏற்படுத்தி கொடுத்தோம்'' என்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் கவலையளிப்பதாக சமூக வலை தளங்களில் பலர் கவலை தெரிவித்துள்ளனர். ''இந்த வலியை புரிந்து கொள்ள முடிகிறது சகோதரா. எனது தாயை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றும்போது கிடைத்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வது மோசமான விஷயம்'' என ஒருவர் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Traffic images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








