அதிகபட்ச அபராதத்திற்கு பதிலாக லஞ்சம் பெறும் நீதிமன்ற அலுவலக அதிகாரி... பரபரப்பு வீடியோ வெளியீடு...
உச்சபட்ச அபராதத்திற்கு பதிலாக லஞ்சம் வசூலிக்கும் நீதிமன்ற அதிகாரிகளின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிலான அபராதத்தை வசூலிக்கின்ற வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில், தலைக் கவசம் அணியாமல் பைக்கை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் ரூ. 100 என்ற அபராதத் தொகை, புதிய சட்டத்தின்மூலம் ஆயிரம் ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மற்ற போக்குவரத்து விதிமீறல்களும் அபராதத் தொகை பத்து உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய அபராத கொள்கை இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு காரணம் கூறுகின்றது. மேலும், தங்களின் நோக்கம் மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பது இல்லை, போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகளை குறைப்பதே எங்களின் குறிக்கோள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்.

ஆனால், மத்திய அரசின் இந்த திட்டம் பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்மூலம் ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களே பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், உச்சபட்ச அபராதத்தைக் காரணம் காட்டி நீதிமன்ற அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் அதிர்ச்சியான வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக, புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டபோது, உச்சபட்ச அபராதம் என்பது பொதுமக்களிடம் அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட வழிவகுக்கும் எனகூறி எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அதனை உறுதிப்படுத்தும் வகையிலும், நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், அதிகபட்ச அபராத்திற்கு பதிலாக அதிகாரி ஒருவர் கையூட்டு பெறும் காட்சி இணையத்தில் காட்டுத் தீயாய் வைரலாகி வருகின்றது.
இந்த சம்பவம் சிஎன்என் நியூஸ் 18 மூலம் செய்யப்பட்ட ஆபரேஷன் ஆகும். இதுகுறித்த முழுமையான தகவலை கீழே காணலாம்...

சிஎன்என் நியூஸ் 18 நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் சாஹில் மெங்கானி, அரசு அதிகாரிகளின் லஞ்சம் காலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை முயற்சி மேற்கொண்டார். இதில், சட்டத்தில் இருக்கும் ஓட்டையை வைத்து அரசு அதிகாரிகள் எவ்வாறு குற்றவாளிகளை தப்பிக்க வைக்கின்றனர் என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஸ்பை கேமிரா எனப்படும் கண்ணுக்கு புலப்படாத சிறிய ரக கேமிராவின் உதவியுடன் அவர் பயணத்தைத் தொடர்கின்றார். ரூ. 15 ஆயிரத்திற்கான அபராத செல்லாணை எப்படி செலுத்த வேண்டும் என்ற வழிமுறையை அறிந்து கொள்வதற்காக போக்குவரத்து போலீஸாரை அவர் நாடுகின்றார். இங்கிருந்துதான் அனைத்து வேலைகளும் ஆரம்பிக்கின்றது.
வந்திருப்பது நியூஸ் 18 நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் என்பதை உணராத அந்த காவலர், அவருக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் பணி புரியும் ஓர் நபரை சந்திக்குமாறு அறிவுறுத்துகின்றார். தொடர்ந்து, அவருக்கு நீதிமன்றத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவரின் அறிமுகத்தையும் அவர் கொடுக்கின்றார்.

போலீஸாரின் வழிகாட்டுதலின்படி, நீதிமன்றத்திற்கு சென்ற பத்திரிக்கையாளர், அங்கு பணி புரியும் அதிகாரியைச் சந்திக்கின்றார். போக்குவரத்து காவலர் அனுப்பி வைத்ததை உணர்ந்த அந்த அதிகாரி, நீங்கள் அபராதத்திற்கான தொகை ரூ. 15 ஆயிரம் செலுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக ரூ. 5000 மட்டும் செலுத்தினால் போதும் அதற்கான வழியை நான் கூறுகின்றேன் என கூறி மூத்த வழக்குரைஞர் ஒருவரை அவர் அறிமுகம் செய்கின்றார்.

பின்னர், வழக்குரைஞரின் சந்திப்பு நிகழ்கின்றது. இவரும், நீங்கள் வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் எங்களுக்கு கொடுத்தால் போதும் உங்கள் அபராத தொகை நிபந்தனையின்றி விளக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவம் அனைத்தும் காஸியாபாத் நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறுகின்றது.
இது எப்படி சாத்தியம் என்றுதானே கேட்கிறீர்கள்... அதற்கான வழியையும் அந்த மூத்த வழக்குரைஞரே வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியாதவது, "அபராத தொகையை உடனே செலுத்த வேண்டாம். இரண்டு மாதங்கள் காத்திருக்கவும், உங்களுக்கு சட்டரீதியலான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். அதையும் வாங்காமல் நிராகரித்து விடுங்கள். பின்னர், உங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் வழங்கப்பட செல்லாண் நீதிமன்ற அதிகாரிகளின் பார்வைக்கு வரும். அதனை நாங்களே எந்தவொரு தங்குதடையுமின்றி அழித்து விடுவோம். இதற்காகதான் நீங்கள் எனக்கு ரூ. 5 ஆயிரம் கையூட்டாக வழங்க வேண்டும்" என தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பத்திரிக்கையாளரின் ஸ்பை கேமிராவில் பதிவாகியுள்ளது. இது, அரசாங்கத்தின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் எவ்வாறெல்லாம் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








