கோவாவை 3 மணி நேரம் ஸ்தம்பிக்க வைத்த ஒற்றை டிரக்! விமானத்துடன் மேம்பாலத்துக்கு அடியில் சிக்கியதால் பரபரப்பு!
பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச் செல்வதில் லாரிகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இந்த லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்ல மட்டுமல்ல சில நேரங்களில் ஏர் கிராஃப்ட், பெரிய பெரிய மெஷின்கள் மற்றும் ரயில் போன்றவற்றை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில், ஏர்கிராஃப்டின் (போர் விமானத்தின்) முக்கிய பாகம் ஒன்றை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றே மேம்பாலத்தின் கீழ் சிக்கி இருக்கின்றது. இதனால், மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களிலும் இதேபோல் பெரிய உருவம் கொண்ட டிரக்குகள் மேம்பாலத்தின்கீழ் செல்லும்போது முன்னேறி செல்ல முடியாமல் சிக்கி இருக்கின்றன.

ஆனால், இந்த நிகழ்வு இணையத்தில் மிகப் பெரிய வைரலாகிக் கொண்டிருக்கின்றது. சம்பவம் நிகழ்ந்த இடம் மற்றும் சம்பவத்தை நிகழ்த்திய வாகனம் ஆகிய இரண்டும்தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. சம்பவம் நடைபெற்றது மர்கோவ்-கார்வார் நெடுஞ்சாலையில் ஆகும். வெளிநாட்டினர்-இந்தியர் என பலதரபட்டோர் புழங்கும் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக இந்த பகுதி உள்ளது.
மேலும், கோவாவின் பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும் அது இருக்கின்றது. இத்தகைய பகுதியில் இந்த சுவாரஷ்யமான சம்பவம் அரங்கேறியிருப்பதனாலேயே அதிகப்படியானோரை இந்த நிகழ்வுச் சென்றடைந்திருக்கின்றது. அதுதவிர, டிரக்கில் இருந்த விமானத்தின் முக்கிய பாகமும் சம்பவம் வைரலாவதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

டிரக்குகளில் பொருட்களை ஏற்றிச் செல்வது என்பது மிக சுலபமான செயல் அல்ல. அதிலும், விமானம் மற்றும் காற்றாலைகளின் பாகங்களை எடுத்துச் செல்லும்போது அதிகப்படியான சவால்களை டிரக்குகள் சந்திக்க நேரிடுகின்றன. குறிப்பாக, ரயில்வே பாலங்கள் மற்றும் மேம்பாலங்களே இந்த மாதிரியான டிரக்குகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றன.
நாட்டில் உள்ள பெரும்பாலான ரயில்வே பாலங்களின் உயரம் மற்றும் அகலம் மிகக் குறைவானதாக தென்படுகின்றன. இதுவே கனரக வாகனங்களுக்கு பெரும் சிரமத்தை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. பெரிய மெஷின் பாகங்களை ஏற்றி வரும் டிரக்குகளுக்கு மட்டுமல்ல பெரிய உருவம் கன்டெய்னர் லாரிகளுக்கும் இந்த மேம்பாலங்கள் தலைவலியை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.
எனவேதான் டிரக் டிரைவர்கள் ஒவ்வொரு பாலத்தையும் கடக்கும் போது அதிக கவனத்துடன் கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால், கோவாவில் அரங்கேறி இருக்கும் இந்த விஷயத்தில் டிரைவர் தவறான மதிப்பீட்டைப் போட்டிருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும். வாகனத்தின் பாதி பகுதி கடந்து விட்டநிலையில், மீதி பாதி பகுதியே முன்னேறி செல்ல முடியாமல் சிக்கி இருக்கின்றது.
இதற்கு ரயில்வே பாலத்தின் வளைவான அமைப்பே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. தவறாக கணக்கிட்ட லாரி செல்ல முயன்றதில் போர் விமானத்தின் குறிப்பிட்ட பகுதி பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது. இந்த நிகழ்வால் சுமார் மூன்று மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.
கோவாவின் வாஸ்கோவில் இருந்து கர்நாடகாவின் நிபானி செல்லும் முக்கிய பாதை இதுவாகும். ஆகையால், இரு மாநிலங்களுக்குமான தொடர்பு சில மணி நேரங்கள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில் எதிர் திசை பாதையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகையால், அந்த பாதையில் போக்குவரத்து வழக்கம்போல் காணப்பட்டது.
மூன்று மணி நேரத்திற்கு பின்னர் முழுமையாக போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் டிரக் டிரைவருக்கு ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதா என்பது தெரியவில்லை. இதேபோல், போர் விமானத்திற்கு எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கின்றது என்கிற விபரமும் வெளியிடப்படவில்லை. பொதுவாக பெரிய பொருட்களை லாரிகள் ஏற்றிச் செல்லும்போது அதற்கு முன்னரும், பின்னரும் கூடுதல் வேன் ரக வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
அவை பெரிய உருவம் கொண்ட டிரக்குகளால் பிற வாகனங்களுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துகளை தவிர்க்க உதவும். மேலும், பிரமாண்ட உருவம் கொண்ட வாகனம் சாலையில் ஊர்ந்துச் சென்றுக் கொண்டிருக்கின்றது என்பதை வெளிக்காட்டும் விதமாகவும் அந்த வாகனங்கள் முன்னாடி மற்றும் பின்னாடி பயணிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரக்குகள் வாயிலாகவே புதிய கார்கள் மற்றும் பைக்குகளும்கூட டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், பெரிய உருவம் கொண்ட கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் நகர்புற சாலைகளில் உலா வர அனுமதி இல்லை. இருப்பினும், சில நேரங்களில் இந்த வாகனங்கள் நகரங்களுக்கு நுழைய நேரிடுகின்றன. அதிகப்படியான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கனரக வாகனங்கள் பகலில் நகரங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








