இந்தியாவில் தான் இது நடந்ததா...? கொரோனாவினால் ஏற்படும் சில நன்மைகள்...
பாக்கு போட்டு கொண்டு பொது சாலையில் எச்சில் துப்பியவரையே அதனை சுத்தம் செய்ய வைத்த போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் பாக்கு போட்டு அதனை பொது இடங்களில் துப்புவது மிக சர்வ சாதாரணமானது ஆகும். இந்த செயல்பாடுகளுக்கு மற்ற நாடுகளில் கடுமையான தண்டனை உள்ளது. ஆனால் நம் நாட்டில் அவ்வாறான தண்டனைகள் எதுவும் பெரிய அளவில் இல்லை.

இருக்கும் சில தண்டனைகளுக்கும் பயப்படுபவர்கள் என்று பார்த்தால் மிக சிலரே. இந்தியாவின் வட மாநிலங்களிலேயே அதிகளவில் இருக்கும், பொது இடத்தில் எச்சில் துப்பும் கலாச்சாரத்தை தடுக்க அரசாங்கமும் பல விதங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இத்தகைய செயல்கள் குறைந்த பாடில்லை.

ஆனால் இதனை கொரோனா வைரஸ் சிறிது சிறிதாக மாற்றி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கொரோனாவில் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பது மட்டுமில்லாமல், பாக்கு போடாமல் சிலர் கட்டாய சுய கட்டுப்பாட்டு உடன் இருந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையை எதிர்காலத்திற்கும் கொண்டு செல்லும் விதமாக போலீசாரும் இவ்வாறான செயல்களில் தற்போதும் ஈடுபடும் சிலரின் மீது அப்போதே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் சண்டிகரில் சாலையில் எச்சில் துப்பிவிட்டு செல்ல முயன்றவரை அப்போது அந்த இடத்தில் போக்குவரத்து பணியில் இருந்த போலீசார் ஒருவர் தடுத்து நிறுத்தி அவரையே அந்த இடத்தை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

தனது மகனுடன் பைக்கில் வந்து கொண்டிருந்த அவர் சாலையை எச்சில் துப்புவதை போக்குவரத்து போலீசார் பல்தேவ் சிங் சற்று தொலைவில் இருந்து பார்த்துள்ளார். இதனால் தன்னை கடக்கும்போது அந்த பைக்கை நிறுத்தியுள்ளார்.

பிறகு பைக்கில் இருந்த சிறுவரை இறக்கிவிடும்படி கூறிய பல்தேவ் சிங், அந்த நபர் எச்சில் துப்பிய இடத்தை சுட்டி காட்டி நீங்களே சுத்தம் செய்துவிட்டு செல்லும்படி கூறியுள்ளார். தனது தவறை உணர்ந்த அவர் உடனே தனது கையையும், அருகில் இருந்த புற்களை பிடிங்கியும் சுத்தம் செய்ய முயற்சித்துள்ளார்.

அதற்குள்ளாக அவரை தடுத்த பல்தேவ் சிங், தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்து சுத்தம் செய்ய வைத்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்தது மட்டுமில்லாமல், எச்சில் துப்பியவருடன் வந்த அவரது மகனிடம், உனது அப்பாவிற்கு அறிவுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொடு என கூறிவிட்டு அவர்களை அனுப்பியுள்ளார்.

சண்டிகரில் ஊரடங்கு உத்தரவினால் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டார் சைக்கிளில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் ஊரடங்கு உத்தரவிற்கு முன்பிருந்தே உள்ளது. ஆனால் இந்த வீடியோவில் அந்த குழந்தை ஹெல்மெட் அணியவில்லை. இதற்கு அந்த போக்குவரத்து போலீசார் எதாவது அபாரதத்தை விதித்தாரா என்பது தெரியவில்லை.
எச்சில் துப்புவது மட்டுமில்லாமல் தற்சமயம் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பதும் சட்டப்படி குற்றமாகும். ஆனால் ஊரடங்கில் சிறிய தளர்வு சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதால் சில புகையிலை பொருட்களை விற்கும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications