போக்குவரத்து விதியை மீறினால் நேரடி ஜெயில்: கோர்ட் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!
அதிகரித்து வரும் விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக, போக்குவரத்து விதியை இருவருக்கு நான்கு நாள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மதிக்காமல், அவற்றை அலட்சியமாக மிதிப்பதன் காரணமாக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் வாகனங்களை ஓட்டுகிற எத்தனை பேருக்கு சாலை விதிகளைப் பற்றி தெரியும் என சோதித்துப் பார்த்தால், நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

டிரைவிங் லைசென்ஸ் வாங்கும் அந்த ஒருநாள் மட்டும் ஞாபகம் வைத்துக்கொண்டு, அன்றோடு அனைத்தையும் மறந்துவிடுவதுதான் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போவதற்கான முக்கியக் காரணம்.

வளர்ந்த, வளரும் நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெறுவதில், மிகக் கடுமையாக நடைமுறைகள் இருக்கின்றன. அதை நம் நாட்டுடன் ஒப்பிட்டு பார்த்தால், நம்முடைய சட்ட திட்டங்களும் கடுமையாகத்தான் இருக்கின்றன. ஆனால், நடைமுறையில்தான் சிலபல ஓட்டைகள் இருக்கின்றன. இதன்காரணமாக தான் சாலையில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்று வருகிறது.

சாலை விதிகளைக் கடைப்பிடிக்க அரசு கூறுவது அரசின் நன்மைக்கோ அல்லது மற்றவர்களின் நன்மைக்காகவோ அல்ல, அது முழுக்க முழுக்க நம்முடைய பாதுகாப்புக்காகத்தான். ஆனால், இதை பலர் அறியாமல் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குகின்றனர்.

இவ்வாறு சாலை விதிகளைக் கடைபிடிக்காமல் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 821 பேர் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது வருடத்துக்கு சுமார் 3 லட்சம் என்றும் ஒரு மணி நேரத்துக்கு 34 பேர் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலைத் தவிர்க்கும் விதமாக அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதனை வாகன ஓட்டிகள் சற்றும் மதிக்காமல் செயல்படுகின்றனர். மேலும், அதற்கான பின்விளைவுகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி நீதிமன்றம், சமீபத்தில் போக்குவரத்து விதிகளை மீறியக் குற்றத்துக்காக வாகன ஓட்டிகள் சிலருக்கு நான்கு நாட்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் உதவி ஆணையாளர் சந்திரசேகர் கூறியதாவது,

"போக்குவரத்து விதிகளை மீறும் விதமாக செயல்பட்ட வாகன ஓட்டிகள் இருவருக்கு, நான்கு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதன்முறையாக வீதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கும் இத்தகைய தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் விதமாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்தாவது மற்ற வாகன ஓட்டிகள் சாலை விதிகள் மதிப்பார்கள் என நம்பப்படுகிறது" என்றார்.

இதில், தண்டனைப் பெற்றவர்களில் ஒருவர் காலவதியான லைசென்ஸை வைத்துப் வாகனைத்தை இயக்கியதுக்காகவும், அதேபோல மது அருந்தி வாகனத்தை ஓட்டியக் குற்றத்துக்காக ஐடி ஊழியர் ஒருவரும் தண்டனை அனுபவித்து உள்ளனர்.

இவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாங்கள் நான்கு நாட்கள் தான் ஜெயிலில் இருந்தோம். ஆனால், இந்த நான்கு நாட்கள் எங்கள் வாழ்க்கையை பெரிய அளவில் மாற்றிவிட்டது. சமூகத்தில் எங்கள் மீது இருந்த பார்வை அனைத்தும் மாறிவிட்டது. ஜெயில் வாழ்க்கையைக் கண்டு நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம். இனி இதுபோன்று தவற்றில் ஈடுபடவே மாட்டோம்" என அவர்களது தவற்றை உணர்ந்து வருந்தினார்கள்.

என்ன செய்வது ஒருமுறை தவறு செய்து தண்டனையை அனுபவித்த பின்னர் தான் இதுபோன்று ஞானம் எல்லாம் நம் மக்களுக்கு வருகின்றது.


Click it and Unblock the Notifications