இன்ஸ்பெக்டர் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா இனிமேல் போலீஸ்காரங்களை தப்பா நினைக்கவே மாட்டீங்க!
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் செய்துள்ள நல்ல காரியத்திற்காக, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

காவல் துறையினர் என்றாலே, பொதுமக்கள் பலருக்கு அதிருப்திதான் நிலவுகிறது. ஆனால் அனைத்து காவலர்களும் தவறானவர்கள் அல்ல. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் காவல் துறையினர் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. காவல் துறையில் நல்ல உள்ளம் படைத்த பலர் இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ஒருவர் பிரதாப் சிங்.

இவர் கோவையில் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் செய்துள்ள காரியம் ஒன்று தற்போது பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், சாலை விபத்தில் இருந்து மீண்டு வந்த சிறுவனுக்கு இவர் தனது சொந்த செலவில் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கோவை தடாகம் சாலையில் பால் கம்பெனி பகுதி இருக்கிறது. இங்கு சுபாஷ் சந்திர போஸ் என்ற சிறுவன் வசித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுவன் சுபாஷ் சந்திர போஸ், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த வயதிலேயே அவர் குடும்ப பாரத்தையும் தனது தோளில் சுமந்து கொண்டுள்ளார்.

சிறுவன் சுபாஷ் சந்திர போஸின் தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். தாய் கூலி வேலைக்கு சென்று கொண்டுள்ளார். எனவே குடும்பத்தின் நலனுக்காக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பானிபூரி கடை ஒன்றில், சிறுவன் சுபாஷ் சந்திர போஸ் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு தினமும் 100 ரூபாய் கிடைக்கிறது.

இந்த சூழலில், சிறுவன் சுபாஷ் சந்திர போஸ் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார். இரவு நேரத்தில் வேலையை முடித்த பின்னர் அவர் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். இது அவரது நண்பனின் சைக்கிள் ஆகும். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சுபாஷ் சந்திர போஸ் ஓட்டி வந்த சைக்கிள் மீது கார் மோதியது.

இந்த விபத்தில் காயம் அடைந்த சிறுவன் சுபாஷ் சந்திர போஸ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில் அவர் ஓட்டி வந்த சைக்கிள் சேதமடைந்து விட்டது. இந்த சூழலில், சிறுவன் சுபாஷ் சந்திர போஸ் சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் பிரதாப் சிங் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் பிரதாப் சிங்தான் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அப்போது அவருக்கு ஒரு சில விஷயங்கள் தெரியவந்தன. இதில், சிறுவன் சுபாஷ் சந்திர போஸ் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர் என்பது முக்கியமானது. சிறுவன் சுபாஷ் சந்திர போஸ் மீது அப்பகுதி மக்கள் பாசத்துடன் இருந்து வந்தனர்.

அவர்கள் சைக்கிள் ஒன்றை வாங்கி, சிறுவன் சுபாஷ் சந்திர போஸூக்கு பரிசாக வழங்க திட்டமிட்டிருந்தனர். இதை தெரிந்து கொண்ட போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் பிரதாப் சிங், தனது சொந்த பணம் 4,800 ரூபாயில், சிறுவன் சுபாஷ் சந்திர போஸூக்கு புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கும் புத்தம் புதிய வாகனங்களை பரிசாக வழங்கியது குறித்த பல்வேறு செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடந்த காலங்களில் நமது வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆனால் உண்மையிலேயே போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ஒருவர் விபத்தில் இருந்து மீண்டு வந்த சிறுவனுக்கு சைக்கிளை பரிசாக வழங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இங்கே மற்றொரு விஷயத்தையும் நாம் குறிப்பிட வேண்டும். சிறுவன் சுபாஷ் சந்திர போஸை போல் பலர் பலரும் தற்போது சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எனவே அருகில் உள்ள அலுவலகம் மற்றும் கடைகளுக்கு செல்வது போன்றவற்றுக்கு சைக்கிளை பயன்படுத்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுதவிர உடற்பயிற்சிக்காகவும் பலர் சைக்கிளை ஓட்டி வருகின்றனர். சைக்கிள் பயன்பாடு அதிகரித்தால், மக்களின் உடல் நலன் ஆரோக்கியமாக மாறுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பெட்ரோல், டீசல் வாகனங்களால் இந்தியாவில் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications