அவசர ஊர்தி செல்ல, ஜனாதிபதி காருக்கு தடை...! நிஜலிங்கப்பா... இன்று இந்தியாவின் ஹீரோ..!!
அவசர ஊர்தி செல்ல ஜனாதிபாதி காருக்கு தடை போட்ட பெங்களூர் போக்குவரத்து காவலர் இன்று இந்தியளவில் ஹீரோவாகி உள்ளார்.
நியாயத்திற்கு குரல் கொடுத்து நேர்மையாக வாழும் அரசியல் தலைவர்கள், போலீஸ்காரகள் ஆகியோரை பெரும்பாலும் சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம்.

சினிமாவில் மட்டும் தான் இப்படிப்பட்டவர்களா? என்று நினைக்கும் நேரங்களில் சில சம்பவங்களின் மூலம் நிஜ வாழ்க்கையிலும் நேர்மையான பலர் காணப்படுவது உண்டு.

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் தன்னோட கடமையில் இருந்து தவறாத போக்குவரத்து காவலரை இன்று இந்தியாவே கொண்டாடி வருகிறது.
வேலைக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக நடந்துக்கொண்ட அந்த காவல் துறை அதிகாரி இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளார்.

கடந்த சனிக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்க இந்திய ஜானதிபதி பிரணாப் முகர்ஜி கான்வாய் வாகனங்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் ராஜ்பவனுக்கு சென்று கொண்டு இருந்தார்.

பெங்களூரின் டிரினிட்டி சர்க்கிளை அந்த கான்வாய் வாகனங்கள் கடக்க வேண்டி இருந்ததால், அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர் அதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர்.

டிரினிட்டி சர்க்கிள் நான்குமுனை சந்திப்பை கொண்டது. பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அது கடுமையாக இருக்கும். 2 கிலோ மீட்டரை கடக்க சுமார் 1 மணிநேரம் கூட ஆகும்.

டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் நடைபெற்று வந்த முன்னேற்பாடுகளால் உருவான போக்குவரத்து நெரிசலில் ஒரு தனியார் மருத்துவமனையின் அவசர ஊர்தி மாட்டிக்கொண்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அதில் நோயாளி இருந்ததால் அந்த அவசர ஊர்தி, போக்குவரத்து நெரிசலில் சைரன் ஒலித்தபடி சிக்கிக்கொண்டு தவித்தது.
ஜனாதிபதி கான்வாய் செல்வதற்கான முன்னேற்பாடுகளில் இருந்த போக்குவரத்து துணை ஆய்வாளரான நிஜலிங்கப்பா கவனித்தார்.

ஜனாதிபதியின் கான்வாய் வாகனங்கள் செல்ல சில நிமிடங்களே இருந்த நிலையில், நெரிசலில் சிக்கிக்கொண்ட அவசர ஊர்தி குறித்து உயர் அதிகாரிகளிடம் வாக்கி-டாக்கியில் நிஜலிங்கப்பா தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, ஜனாதிபதியின் கான்வாய் வாகனங்கள் டிரினிட்டி சர்கிளை கடப்பதற்கு முன் போக்குவரத்து நெரிசலில் இருந்த அவசர ஊர்திக்கு வழி ஏற்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடுமையான அந்த நெரிசலில் வழி கிடைத்ததை அடுத்து அந்த தனியார் அவசர ஊர்தி, பாதுகாப்பாக டிரினிட்டி சர்க்கிளை கடந்து சைரனை ஒலித்தபடியே மருத்துவமனைக்கு விரைந்தது.

ஜனாதிபாதி கான்வாய் வாகன வழியில் வருவதை தெரிந்தும், காவலர் நிஜலிங்கப்பா துரிதமாக செயல்பட்டு அவசர ஊர்திக்கு வழி ஏற்படுத்தி பாதுகாப்பாக அனுப்பியதை பார்த்த பலர், அவருக்கு மனமார பாராட்டு தெரிவித்தனர்

மேலும் பெங்களூருவின் போக்குவரத்து காவல் துறைக்கான இணையதளத்தில் கர்நாடக மக்கள் மட்டுமின்றி, தேசியளவில் இருந்து நிஜலிங்கப்பாவிற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
தனது பணியை சமூக உணர்வுடன் பொறுப்பாக செய்து முடித்த நிஜலிங்கப்பாவிற்கு கர்நாடக காவல்துறை சார்பில் வெகுமதி வழங்கப்படும் என பெங்களூர் காவல்துறை ஆணையர் பிரவின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நாட்டிற்கு சமூகத்திற்கும் பொறுப்புடன் செயல்படுபவர்கள் வாழ்ந்து தான் வருகிறார்கள் என்பதை நிஜலிங்கப்பா நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








