இந்த சேலம் ரோபோ லஞ்சம் வாங்குமா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கிளம்பியது புது சர்ச்சை...
சேலத்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோபோ ஒன்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து கொண்டுள்ளது. முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு கார் அல்லது பைக் என்ற நிலைதான் காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி வருகிறது.

ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு கார் அல்லது பைக் என்ற நிலை தற்போது வந்து விட்டது. இதனால் இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை சமாளிக்க முடியாமல் அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

இருந்தபோதும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பல அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் தற்போது ரோபோ ஒன்றும் இணைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில்தான் முதல் முறையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2வது முறையாக தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஊரான சேலத்தில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரோபோ ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன ரோபோவிற்கு ரோடியோ என பெயரிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் பத்திரமாக சாலையை கடக்க இந்த ரோபோ உதவி செய்யும். அத்துடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் இந்த டிராபிக் ரோபோ ஈடுபடும்.

இதுதவிர போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் வாகன ஓட்டிகளை கண்டறியும் பணியிலும் ரோடியோ ரோபோ ஈடுபடும். கிட்டத்தட்ட ஒரு போக்குவரத்து காவலர் செய்ய வேண்டிய பணிகளை இந்த ரோபோவே செய்து விடும்.

ரோடியோ ரோபோவை கட்டுப்படுத்துவதற்கு என தனியாக செல்போன் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் ஆப் மூலமாக போக்குவரத்து காவலர்கள் ரோபோவை இயக்குவார்கள். சென்னையில் பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, தற்போது சேலத்திலும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகர மக்கள் மத்தியிலும் இந்த ரோபோவிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த ரோபோவின் உருவ அமைப்பு பார்ப்பதற்கு மனிதர்களை போலவே இருப்பதால், இது குழந்தைகளை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

சேலம் மாநகரின் மையப்பகுதியாக விளங்கும் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில், நேற்று (ஜனவரி 30ம் தேதி) நடைபெற்ற விழாவில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சியமளா தேவி, இந்த ரோபோவை பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்து வைத்தார்.

ரோடியோ ரோபோ குறித்து சேலம் மாநகர போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ''எம் பரிவாகன் போன்ற மொபைல் ஆப்களுடனும் இந்த ரோபோவை இணைத்து செயல்படுத்த முடியும். இதன்மூலம் திருட்டு வாகனங்களை எளிதாக கண்டறியவும் இந்த ரோபோ காவலர்களுக்கு உதவி செய்யும்.

இதுதவிர இயற்கை பேரிடர் சமயங்களில், மீட்பு பணிகளுக்கு உதவி செய்யும் வகையிலும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரோடியோ ரோபோவின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்'' என்றனர். சேலம் மாநகர வாகன ஓட்டிகள் தற்போது இந்த ரோபோவை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதனிடையே சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிராபிக் ரோபோ குறித்து பாலிமர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சூழலில் இந்த ரோபோவாவது வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்காமல் இருக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அல்லது கிரெடிட்/டெபிட் கார்டுகளை ஏற்று கொள்ளும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதா? எனவும் அவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஊர் என்பதால், சேலத்திற்கே பெரும்பாலான திட்டங்கள் ஒதுக்கப்படுகின்றன என்ற குரல்களையும் சமூக வலை தளங்களில் காண முடிகிறது. ஆக மொத்தத்தில் வரவேற்பை பெற்றுள்ள போதிலும், சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது இந்த ரோபோ.


Click it and Unblock the Notifications








