டிச.31ஆம் தேதி இரவு பைக்கில் வெளியே செல்லலாமா? ஒமிக்ரான் வேற பரவுது... தமிழக அரசின் பதில் இதுதான்!!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மற்றும் பெருகி வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பண்டிகை தினங்களில் வழக்கத்தை காட்டிலும் நோய் தொற்றுப்பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்றுக் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்கும்படி தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆங்கில புத்தாண்டினை மக்கள் வருட இறுதி நாளான டிச.31ஆம் தேதி அன்று இரவு அந்தந்த பகுதியில் உள்ள முக்கியமான மற்றும் பொதுவான ஒரு இடத்தில் கூடி கொண்டாடுவர். தலைநகர் சென்னையில் டிச.31ஆம் தேதி இரவு ஆயிரக்கணக்கில் மக்கள் மெரீனா கடற்கரையில் கூடி பைக் பந்தயங்களை மேற்கொண்டும், பட்டாசுகளை வெடித்து, கேக்களை வெட்டி புத்தாண்டு நல்வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டும் கொண்டாடுவர்.

போலீஸார் அனுமதிப்பது இல்லை என்றாலும், சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தில் ஆங்காங்கே பைக் ரேஸ்களை இளைஞர்கள் மேற்கொள்வவது உண்டு. இவை அனைத்தையும் இம்முறை முற்றிலுமாக தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், புத்தாண்டு தினத்திற்கு முன்னாள் இரவும், புத்தாண்டு தினத்திலும் சாலை ஓரங்களில் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்குமாறு இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்கிற விதி வழக்கம்போல் அமலில் இருக்கும். அதிலும் குறிப்பாக, டிச.31 அன்று இரவு காவல் துறையினர் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளனர்.

மது அருந்திய வாகன ஓட்டிகள் அதிரடியாக கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுமாம். சொந்த ஊருக்கு செல்லுதல் போன்ற முக்கிய காரணங்களாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து, இரயிலும், பேருந்திலும் பயணிக்க வழிக்காட்டப்பட்டுள்ளனர். முடிந்தவரை டிச.31 இரவு கார்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது கூட நல்லது.

கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பயணங்களில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வழக்கத்தை காட்டிலும் டிச.31ஆம் தேதி இரவும், ஜன.1ஆம் தேதி அதிகாலையிலும் தான் சாலை விபத்துகள் அதிகளவில் பதிவாகுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசின் இந்த உத்தரவுகள் இத்தகைய சாலை விபத்துகளையும் பெரிய அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர தேவைகளுக்காக கார்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான இடங்களில் காரை நிறுத்தி முகத்தை கழுவி உடலை புத்துணர்ச்சியாக்கி கொண்டு பயணத்தை தொடர போலீஸாரால் அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், ரோந்து காவலர்களின் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்படும்.

பொது சாலைகளில் ஆபத்தான முறையில் வாகன ஓட்டுதல், பைக் ரேஸ் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பர். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, 112 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும், KAVALAN - SOS (காவலன் எஸ்.ஒ.எஸ்) செயலியை பயன்படுத்துமாறும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டிலும் கொரோனா வைரஸ் பரவலால் இத்தகைய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் புத்தாண்டிற்கு முந்தைய நாளிலும், அடுத்த நாளிலும் கொண்டுவரப்பட்டன. மருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சட்ட விரோதமானதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் புத்தாண்டு சமயத்தில் சாலை விதிகளை மீறி, சில வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் அபராதம் செலுத்துவது தொடர் கதையாகவே உள்ளது.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185இன் கீழ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அதேநபர் மீண்டும் ட்ரங்க் & ட்ரைவ் வழக்கில் சிக்கினால் அதிரடியாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக சென்றால் ரூ.1,000இல் இருந்து ரூ.4,000 வரையில் அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்தியாவில் இன்னமும் சாலை விதிகளை முறையாக மதிக்காத சிலர் இருக்கதான் செய்கின்றனர். இத்தகைய குற்றத்தினை போலீஸார் ஆபத்தான முறையில் பயணம் செய்தல் என்ற பிரிவில் சேர்க்கின்றனர். இது ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ளும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், சாலை விதிகளை மீறுதல்/ ஆபத்தான முறையில் பயணம் செய்தல் குற்றத்திற்கு ரூ.2,000 அபராதம் அல்லது 3 மாத சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








