விளம்பரத்துல சொன்னது எல்லாம் பொய்யா!.. ஆறு உசுரு போயிருச்சு.. பணக்கார குடும்பம் நம்பி போனாங்க..
பாதுகாப்பிற்கு பெயர்போன வாகனம் என கூறப்படும் கார் ஒன்று சாலை விபத்தில் ஆறு உயிர்களை பரிதாபமாக இறக்க விட்டிருக்கின்றது. சமீபத்தில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு நீலமங்களா பகுதியில் அரங்கேறிய வால்வோ கார் விபத்தை பற்றிதான் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றோம். மற்ற வாகன விபத்துகளைப் போலவே இதையும் பார்த்துவிட்டு அவ்வளவு சுலபமாகக் கடந்துச் சென்றுவிட முடியாது. அந்த மாதிரியான ஓர் விபத்து சம்பவமே இதுவாகும். பாதுகாப்பிற்கு பெயர்போன வாகனமாக வால்வோ (Volvo) கார்கள் அறியப்படுகின்றன. இத்தகைய காரே விபத்தில் பயணிகளை பாதுகாக்க தவறியிருக்கின்றது.
ஓர் டிரக் மேலே சாய்ந்ததில் காருக்குள் இருந்த அனைவரும் பரிதாபமாக இறந்திருக்கின்றனர். டிரக் விழுந்தால் கார் எப்படிங்க காப்பாற்றும் என நீங்கள் கேட்கலாம். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான வீடியோ ஒன்று இந்த கார் லோடு நிறைந்த லாரியே மேலே சாய்ந்தாலும் காருக்கும் சரி, காருக்குள் இருப்பவர்களுக்கும் சரி எதுவும் ஆகாது என்றே தெரிவிக்கின்றது.

இதற்காக, அந்த வால்வோ கார் மீது கற்கள் நிரப்பட்ட டிரக் ஒன்று சாய்த்தும் பார்க்கப்பட்டது. ததும்ப ததும்ப கற்கள் நிறைந்து காணப்பட்ட போதிலும், அந்த டிரக் சாய்ந்ததனால் காருக்கு ஒன்றுமே ஆகவில்லை. குறிப்பாக, அந்த டிரக்கை அப்படியே ஸ்டாண்டு போட்டு சாய்த்து நிறுத்தியதை போல், தன்மீது சாய்த்து அந்த டிரக்கை கார் நிறுத்தியது.
இது பார்ப்போரை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், பணக்கார வாடிக்கயைாளர்களையும் அந்த கார் கவர்ந்தது. இந்த நிலையிலேயே வால்வோ எக்ஸ்சி 90 (XC90) கார் மாடல் கோர விபத்தில் சிக்கிய சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. இந்த நிகழ்வில் குடும்பத்துடன் சென்ற ஐஏஎஸ்டி சாஃப்ட்வேர் நிறுவனத்தின் எம்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஒட்டுமொத்தமாக இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட ஆறு பேர் வரை இறந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நீளமான மற்றும் பெரிய உருவம் கொண்ட கன்டெய்னர் அந்த கார் மீது அப்படியே சாய்ந்துவிட்டதாலேயே இத்தகைய மிகப் பெரிய எண்ணிக்கையில் உயிர் பலி ஏற்பட்டு இருக்கின்றது.
இந்த காரை ஐஏஎஸ்டி சாஃப்ட்வேர் நிறுவன எம்டி சந்திரம் யகபகோல், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே வாங்கியதாக தெரிகின்றது. அவரின் சமூக வலைதள பதிவுகளும் இதையே கூறுகின்றன. இந்த தொழிலதிபர், குடும்பத்தினர் இணைந்து காரை கேக் வெட்டி வீட்டிற்கு எடுத்து வந்த வீடியோ இப்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் உள்ளது.
இந்த வீடியோவில் பலரும் தொழிலதிபரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வால்வோ எக்ஸ்சி 90 சமீபத்தில்கூட பாதுகாப்பிற்காக ஓர் உயரிய விருதை வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம் (Insurance Institute for Highway Safety) இந்த காருக்கு சிறந்த பாதுகாப்புத் தேர்வு+ (TOP SAFETY PICK+) எனும் விருதையே இந்த கார் பெற்றது. இத்தகைய கார்தான் விபத்தில் ஆறு பேரை காக்க தவறியிருக்கின்றது.
இந்தியாவில் இந்த கார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை, ஏர் பேக் கட்-ஆஃப் சுவிட்ச், எமர்ஜென்சி பிரேக் லைட், பலதரப்பட்ட ஏர்பேக் என ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ எக்ஸ்சி 90 ஓர் பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. மிக அதிக எடைக் கொண்ட கன்டெய்னர் மிக வேகமாக சாய்ந்ததனாலேயே இந்த காரின் மேற்கூரை முழுமையாக நசுங்கி இருக்கின்றது. இந்த கார் நேருக்கு நேர் மோதலைச் சந்தித்து இருந்திருந்தால் கட்டாயம் அத்தனை உயிர்களையும் பாதுகாத்திருக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








