சென்னையில் தயாரான அதிவேக ரயிலின் புதிய பெயர் 'வந்தே பாரத்'!
டிரெயின்-18 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த ரயில் தற்போது தீவிரமான சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டு அசத்தியது.
சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக டிரெயின்-18 ரயிலுக்கு வந்தே பாரத் என்று புதிய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் வெறும் 8 மணிநேரத்தில் டெல்லியிலிருந்து வாரணாசியை இணைக்க இருக்கிறது.

இந்தியாவின் அதிவேகமான செமி புல்லட் ரயிலை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை உருவாக்கியது. சுமார் 18 மாதங்களுக்குள் இந்த நவீன அம்சங்கள் கொண்ட அதிவேக ரயிலை சென்னை ஐசிஎஃப் தயாரித்து சாதித்துள்ளது.

டிரெயின்-18 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த ரயில் தற்போது தீவிரமான சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டு அசத்தியது.

இந்த நிலையில், இந்த ரயிலுக்கு வந்தே பாரத் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதனை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் வந்தே பாரத் அதிவேக ரயில் டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது டெல்லி- வாரணாசி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு நகரங்களையும் இணைப்பதற்கு 13 மணிநேரம் முதல் 17 மணிநேரம் வரை எடுத்துக் கொள்கின்றன. ஆனால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செமி புல்லட் ரயில் வெறும் 8 மணிநேரத்தில் இரு நகரங்களையும் இணைக்க இருக்கிறது.

ஆம். காலை 6.30 மணிக்கு டெல்லியில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.30 மணிக்கு வாரணாசி சென்றடையும். அங்கிருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு டெல்லியை வந்தடையும். வழியில் கான்பூர் மற்றும் அலகாபாத் ஆகிய இரு ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உலகத் தரம் வாய்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த ரயிலில் தனி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்காது என்பது மிக முக்கிய விஷயம்.

மின்சார ரயில்கள் போன்று, ரயில் பெட்டிகளிலேயே மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு ரயிலுக்கு உந்துசக்தி கொடுக்கப்படுகிறது. இதனால், தனி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்களை விட இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பிக்கப் மிக சிறப்பாக இருக்கும். அதேபோன்று, ரயிலை மிக விரைவாக நிறுத்த முடியும். இதனால், பயண நேரம் மிச்சப்படுகிறது.

இந்த ரயிலில் சொகுசான இருக்கைகள், சிசிடிவி கேமரா, பொழுதுபோக்கு திரைகள், ஜிபிஎஸ் மூலமாக அறிவிப்புகள், குளிர்சாதன வசதி என பயணிகளுக்கு ஏராளமான பொழுதுபோக்கு மற்றும் பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. வீல் சேரில் வரும் பயணிகளுக்கும் தனி இடவசதி உள்ளது.

இது சென்னைக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்றாக கூறப்பட்டாலும், தென் இந்தியாவில் இந்த புதிய ரயில் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்பது ஏமாற்றமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








