இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய அதிவேக ரயில்: நாளை முதல் சோதனை ஓட்டம்
சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் புதிய அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நாளை துவங்கப்பட இருக்கிறது. மணிக்கு 180 கிமீ வேகம் வரை இயக்கி சோதனை செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. டெல்லி - போபால் இடையிலான சதாப்த
சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் புதிய அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நாளை துவங்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்கள் மற்றும் ரயிலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் பெற்ற புதிய அதிவேக ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதுடன், சமீபத்தில் பொது பார்வைக்கும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. டிரெயின்- 18 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த ரயில் டெல்லி - போபால் இடையே பயணிகள் சேவைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், பயணிகள் சேவைக்கு தகுதியான அம்சங்களை இந்த ரயில் பெற்றிருக்கிறதா என்பதை சோதித்து பார்க்கும் விதத்தில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நாளை துவங்கப்பட இருக்கிறது. மொராதாபாத்- பெய்ரேலி இடையே வைத்து இந்த ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது.

இதற்காக, ரயில்வே துறையின் RDSO பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மொராதாபாத் வந்துள்ளனர். அடுத்த 4 நாட்களுக்கு இந்த ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றவுடன், அடுத்த கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும்.

புதிய டிரெயின்- 18 ரயில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வேகம் வரை இயக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த ரயிலை மேம்படுத்தும்போது மணிக்கு 200 கிமீ வேகத்தை தாண்டி செல்லும் வாய்ப்பும் இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயிலில் தனி எஞ்சினுக்கு பதிலாக பயணிகள் ரயில் பெட்டிகளின் கீழ்பகுதியில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் அதிவிரைவான பிக்கப்பையும், அதேபோன்று மிக விரைவாக நிறுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால், பயண நேரம் 15 சதவீதம் வரை குறையும்.

சதாப்தி ரயிலுக்கு மாற்றாக வரும் இந்த அதிவேக ரயில் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அறிவிப்புகள், விசேஷ விளக்குகளுடன், சுகாதாரமான கழிவறைகள் உள்ளிட்ட அம்சங்களுடன் பயணிகளுக்கு சிறந்த சேவையாற்ற உள்ளது.

இரண்டு உயர் வகுப்பு இருக்கைகள் கொண்ட பெட்டிகளும், 14 எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கிறது. உயர் வகுப்பு பெட்டிகளில் இருக்கைகளை 180 டிகிரி கோணத்தில் திருப்ப முடியும்.

ரூ.100 கோடி மதிப்பீட்டில் இந்த அதிவேக ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும்போது தயாரிப்பு செலவீனம் குறைய வாய்ப்புண்டு. இதுவே வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டுமெனில் ரூ.150 கோடி மதிப்பீடு கொண்டதாக இருக்கும்.

சோதனை ஓட்டங்கள் முடிந்து வரும் ஜனவரி மாதம் புத்தாண்டு பரிசாக டெல்லி - போபால் இடையிலான சதாப்தி ரயிலாக இயக்கப்பட இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேவைக்கு வரும்போது இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை இது பெறும்.
Source: The Financial Express


Click it and Unblock the Notifications








