ரயில் ஏசி பெட்டியில வெயில் காலத்தை விட குளிர் காலத்துல தான் அதிகமா குளிர் வைப்பாங்க ஏன் தெரியுமா?
ரயில்களில் ஏசி பெட்டியில் பயணம் செய்யும்போது கோடைகாலமாக இருந்தால் குளுகுளுவென சொகுசாக இருக்கும். இதுவே மழைக்காலங்களில் ஏசி பெட்டியில் பயணம் செய்யும்போது அதிகமான குளிர் இருக்கும் பொதுவாக கோடை காலங்களை விட மழைக்காலங்களில் தான் ஏசி பெட்டிகளில் அதிக குளிர் இருக்கும் என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் உண்மை. ரயில்வே நிர்வாகமே இப்படியான ஒரு வழிமுறையை தான் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
சமீப காலமாக ரயிலில் பயணம் செய்யும் நபர்கள் ஏசி பெட்டியை தேர்வு செய்வது அதிகமாகிவிட்டது. பயணத்தின் போது சொகுசான அனுபவம் கிடைக்க ஏசி பெட்டிகளில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கிறார்கள். வெளியில் உள்ள வெப்பநிலையை விட ஏசி பெட்டிக்குள் குளிராக இருக்கும் என்பதால் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது அலுப்பு தெரியாமல் இருக்கும். அதே நேரம் தூங்க வேண்டும் என்றாலும் நிம்மதியாக தூங்கலாம் என்ற காரணத்திற்காக தேர்வு செய்கிறார்கள்.

இப்படியாக நீங்கள் ஏசி பட்டியலில் பயணம் செய்திருந்தால் நீங்கள் சில பயணிகள் ஏசி பெட்டியில் குளிர் போதவில்லை அல்லது குளிர் அதிகமாக இருக்கிறது என ஏதாவது புகார் சொல்லி ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். இப்படியான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் புதிய வழிமுறை ஒன்றை பின்பற்றி வருகிறது.
அதன்படி கோடை காலம் என்றால் ரயிலில் உள்ள ஏசி பெட்டிகளில் குளிரின் அளவு 23 முதல் 25 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டும் எனவும், அதே நேரம் மழைக்காலமாக இருந்தால் 19 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதனால் ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் பணியில் இருக்கும் ஊழியர்கள் இந்த குறிப்பிட்ட அளவிலான குளிர் நிலையை மட்டுமே செட் செய்வார்கள்.

இதை பார்க்கும் போது உங்களுக்கு விந்தையாக இருக்கலாம். வெயில் காலங்களில் 23-25 டிகிரி செல்சியஸ் வரை செட் செய்கிறார்கள். ஆனால் மழை காலங்களில் அதைவிட குளிரான நிலையான 19-21 டிகிரி செல்சியஸை செட் செய்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்? மழை காலங்களில் அதிகமாக குளிர் இருந்தால் பயணிப்பவர்களுக்கு அதிக குளிர் ஏற்படாதா? கோடைகாலங்களில் 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் குளிர் போதாமல் இருக்குமே என்ற எண்ணம் தோன்றலாம்.
இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. பொதுவாக ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்படும் போது பயணிகள் சொகுசான பயணம் செய்ய வேண்டும் என்றால் வெளியில் உள்ளதை விட வெப்பம் ரயில் பெட்டிக்குள் குறைவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சொகுசான பயணம் என்பது கிடைக்கும். அதிக குளிரிருந்தாலும் குறைவான குளிர் இருந்தாலும் இந்த சொகுசான பயணம் என்பது கிடைக்காமல் போய்விடும்.

பொதுவாக வெயில் காலங்களில் 26-30 டிகிரி செல்சியஸ் வரை வெளியில் இருக்கும். அதனால் ரயில் பெட்டிகளில் 23-25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பராமரித்தாலே அவர்களுக்கு போதுமான அளவு குளிரான சொகுசான பயணம் கிடைத்து விடும். அதைவிட வெப்பத்தை குறைத்தால் அவர்கள் அதிக குளிர் நிலையிலிருந்து, ரயிலை விட்டு வெளியேறி செல்லும் போது பயணிகள் அதிக வெப்பநிலைக்கு செல்வார்கள். இதனால் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல குளிர்காலங்களில் வெளியில் 22 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் அந்த காலங்களில் 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் வைத்தால் உள்ளேயும் வெளியேயும் ஒரே அளவிலான வெப்ப அளவு இருக்கும். இதனால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும். வெளியே இருப்பதைவிட உள்ளே குளிராக இருக்க வேண்டும் என்றால் 19 முதல் 21 டிகிரி செல்சியஸை பராமரிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் அவர்களுக்கு சொகுசான பயணம் கிடைக்கும். அதே நேரம் அவர்கள் ரயிலை விட்டு இறங்கி வெளியே செல்லும்போது ஏற்படும் வெப்பமாற்றத்தால் அவர்கள் உடலுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கும். இது தெரியாமல் சில பயணிகள் அதிக அளவிலான குளிர்ச்சி தேவை அல்லது குறைந்த அளவிலான குளிர்ச்சி வேண்டும் என ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வார்கள்.
ரயில்வே ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாகவோ குறைவாகவோ மாற்றுவதற்கு அனுமதி கிடையாது. மேற்குறிப்பிட்ட வெப்பநிலை இடைவெளியை கால சூழ்நிலையை பொறுத்து அவர்கள் முடிவு செய்து மாற்றிக் கொள்ள முடியும். கோடைகாலங்களில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பராமரிக்கவோ அதே நேரம் மழை காலங்களில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பராமரிக்கவோ அவர்களுக்கு அனுமதி கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் பயணிகள் தொடர்பு கொள்வதற்காக தற்போது ரயில்களில் புதிதாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போன் நம்பரை தொடர்பு கொண்டு இது குறித்த விளக்கங்களையும் பெற முடியும். அது மட்டுமல்லாமல் இந்த வெப்பநிலை விவகாரத்தில் பிரச்சனை ஏற்படும்போது அவர்கள் இவர்களிடம் புகார் அளித்தால் அதற்கான நடவடிக்கையையும் எடுப்பார்கள்.


Click it and Unblock the Notifications









