ரயில் தாமதம் ஆனதால் 400 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்
ரயில் தாமதம் ஆனதால் 400 இளைஞர்கள் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றது. அப்போது நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார். இதில், ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படும் என்பதும் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று.

இந்தியாவில் முந்தைய ஆட்சி காலங்களிலும், ரயில்கள் தாமதமாக வருவது என்பது வாடிக்கையான ஒரு நிகழ்வாகவே இருந்து வந்தது. இதனால் பயணிகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதால், இனிமேல் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் மற்ற வெற்று வாக்குறுதிகளை போல், சரியான நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறந்துள்ளது. இந்தியாவில் ரயில்கள் தாமதமாக வருவது முன்பை காட்டிலும் தற்போது அதிகமாகி கொண்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின், கடந்த 2015-16ம் நிதியாண்டில் மொத்தம் 77.44 சதவீத ரயில்கள் மட்டுமே குறித்த நேரத்தில் இயங்கியிருந்தன. இதன்பின் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க மத்திய அரசு நடவடிக்கை என்பது போன்ற செய்திகள் மட்டும் வெளியாகி கொண்டிருந்தன.

ஆனால் நடந்தது வேறு. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, 2016-17ம் நிதியாண்டில் வெறும் 76.69 சதவீத ரயில்கள் மட்டுமே சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டிருந்தன. இது அடுத்து வந்த 2017-18ம் நிதியாண்டில் இன்னும் சரிவடைந்தது.

அதாவது 2017-18ம் நிதியாண்டில் 71.39 சதவீத ரயில்கள் மட்டுமே குறித்த நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கு ரயிலை மட்டுமே நம்பி கொண்டுள்ள பல லட்சக்கணக்கான பயணிகளை, பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றமடைய செய்திருப்பது இதன்மூலம் உறுதியாகிறது.

ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படாததால், பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பயணிகளுக்கு இந்த வேதனை தெளிவாக புரியும். இந்த சூழலில் ஒரு ரயில் தாமதம் ஆனதால் 400 இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

ரயில்வே தேர்வு வாரியம் சார்பில், உதவி லோகோ பைலட்களுக்கான (Assistant Loco Pilot) தேர்வு, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில், கடந்த 23ம் தேதி (நேற்று முன் தினம்) நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயிலில் வந்து கொண்டிருந்தனர்.

உதவி லோகோ பைலட் தேர்வில் பங்கேற்பதற்காக இளைஞர்கள் வந்த ரயில், கடந்த 22ம் தேதி காலை 10 மணிக்கே புவனேஸ்வர் நகரை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மறுநாள், அதாவது 23ம் தேதி காலை 9.30 மணிக்குதான் ரயில் புவனேஸ்வர் நகரை வந்தடைந்தது.

அதாவது ரயில் சுமார் 24 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. ஆனால் உதவி லோகோ பைலட் தேர்வு 23ம் தேதி காலை 7.30 மணிக்கே தொடங்கி விட்டது. ஆனால் ரயில் வந்ததோ அன்றைய தினம் காலை 9.30 மணிக்குதான். இதனால் இளைஞர்களால் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்ற இளைஞர்கள், உடனடியாக ரயில்வே தேர்வு வாரிய உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். ''நாங்கள் என்ன தவறு செய்தோம். ஒரு நாள் முன் கூட்டியே புவனேஸ்வர் வந்து விட வேண்டும் என திட்டமிட்டுதான் கிளம்பினோம்.

ஆனால் ரயில் 24 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. 24 மணி நேரம் என்பது ஒரு நாள். ரயில் இவ்வளவு நேரம் தாமதமாக வந்தது எங்கள் தவறா? எனவே நாங்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என அவர்கள் மன்றாடினர்.

இதன் காரணமாக இளைஞர்கள் விடுத்த கோரிக்கையை ரயில்வே தேர்வு வாரிய உயர் அதிகாரிகள் பரிசீலித்தனர். இதன்பின் தேர்வின் இரண்டாம் ஷிப்டில் (Second Shift) மட்டும் கலந்து கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ரயில்கள் தாமதம் ஆவதால், ஒருவர் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகிறார் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே. ரயில்களை உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெற்று அறிவிப்புகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டு கொண்டுள்ளது.

ஆனால் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் பெரிய அளவில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நிமிட கணக்கில் தாமதமாகி வந்த ரயில்கள் மணி கணக்கில் தாமதமாக வர தொடங்கியது. தற்போது இது நாள் கணக்காக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புல்லட் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள ரயில்களை முறையாக பராமரிப்பதுடன், குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கை.

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்றாக இந்திய ரயில்வே திகழ்கிறது. மொத்தம் 1,21,407 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்களை அமைத்து, இந்திய ரயில்வே துறை ரயில்களை இயக்கி வருகிறது.

நீண்ட தூர மற்றும் புறநகர் தடங்களில், ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பயணிகள் ரயில்களை (Passenger Trains) இந்திய ரயில்வே இயக்கி கொண்டுள்ளது. இந்திய ரயில்வே இயக்கும் ரயில்களில், தினசரி சுமார் 3 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்கள் தாமதம் ஆனால் இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் ரயில்கள் தாமதம் ஆவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், சிக்னல் கோளாறு மற்றும் இன்ஜின் பழுது ஆகியவை முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

இதுதவிர போதிய அளவிலான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் இந்தியாவில் ரயில்கள் தாமதம் ஆகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு கொண்டே வந்தாலும், அதற்கு இணையாக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

அதாவது ரயில்களை இயக்குவதற்கான தண்டவாளம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆர்வம் காட்டப்படவில்லை. இதன் காரணமாக ஒரே தண்டவாளத்தில் அளவுக்கு அதிகமான ரயில்களை இயக்க வேண்டிய நெருக்கடியான நிலை காணப்படுகிறது.

உதாரணமாக வட இந்தியாவில் உள்ள முஹால்சராய்-புது டெல்லி வழித்தடம், ஒரு நாளைக்கு 75 பயணிகள் ரயில்களை மட்டுமே இயக்குவதற்கான திறனை பெற்றுள்ளது. ஆனால் இந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு சுமார் 160 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முஹால்சராய்-புது டெல்லி வழித்தடம் ஒரு உதாரணம் மட்டுமே. புது டெல்லி-சென்னை, ஹவுரா-மும்பை உள்பட நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இதே நிலைதான் காணப்படுகிறது.

இதுதவிர இந்தியாவில் சரக்கு மற்றும் பயணிகள் ரயிலுக்கு என தனித்தனி தண்டவாளங்கள் இல்லை. இதன் காரணமாகவும் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்பட்டு ரயில்கள் தாமதம் ஆகின்றன. ஆனால் ஒரு சில வெளிநாடுகளில் சரக்கு, பயணிகள் ரயிலுக்கு தனித்தனி தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் அந்த நாடுகளில் குறித்த நேரத்திற்கு ரயில்களை இயக்க முடிகிறது. இந்த சூழலில் பல்வேறு போராட்டங்களும் ரயில்கள் தாமதம் ஆக ஒரு காரணமாக உள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

அத்தகைய சமயங்களில் மிக நீண்ட நேரம் ரயில்கள் சிறைபிடிக்கப்பட்டு விடுவதால், தாமதம் ஏற்படுகிறது. இவை அனைத்தையும் கடந்து, ரயில்கள் தாமதம் ஆவதற்கு இயற்கையும் ஒரு காரணம். அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாகவும் சில சமயங்களில் ரயில்கள் தாமதம் ஆகின்றன.

இத்தகைய சூழலை புரிந்து கொண்டு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ரயில்களை உரிய நேரத்தில் இயக்க முடியும். இதற்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற தொலைநோக்கு பார்வையிலான திட்டங்கள் தேவை. அதை விடுத்து விட்டு வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி கொண்டிருந்தால் மட்டும் இந்தியா முன்னேறி விடாது.


Click it and Unblock the Notifications








