ரயிலில் எந்த பெட்டியிலிருந்து செயினை இழுத்தார்கள் என எப்படி தெரிந்து கொள்வார்கள்?
ரயில்களில் பயணிக்கும் போது அவசர காலத்துக்கு ரயிலை நிறுத்துவதற்கு ரயில் பெட்டியில் இருக்கும் செயினை இழுத்தால் ரயில் நிற்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் இப்படி ரயில் நின்ற பிறகு எந்த பெட்டியில் இருந்து செயினை இழுத்தார்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பார்கள் தெரியுமா? இதைப் பற்றிய விரிவான தகவல்களை தான் இங்கே காண போகிறோம்.
இந்த உலகிலேயே மக்கள் மிக ரசனையுடன் பயணம் செய்யும் ஒரு வாகனம் என்றால் ரயில் தான். விமானத்தில் பறக்கும் போது மேலிருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. பஸ்களில் பள்ளமேடுகளில் சென்றால் மிக அசௌகரியமாக இருக்கும். சௌகரியமான நிம்மதியான இயற்கை சூழலை ரசித்துக் கொண்டே பயணம் செய்யக்கூடிய ஒரே வாகனம் ரயில் தான்.

ரயில் எந்த அளவிற்கு அழகானதோ அந்த அளவிற்கு ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. ஒரே ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிப்பதால் அந்த ரயில் விபத்திற்கு உள்ளானால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாக வாய்ப்புள்ளது. அதனால் ரயில் என்பது மிக பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டிய ஒரு வாகனமாக இருக்கிறது.
பஸ்களில் உள்ளே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பயணி சத்தம் போட்டால் போதும் டிரைவருக்கு உடனடியாக கேட்டுவிடும். அவர் உடனடியாக பஸ்சை நிறுத்த முடியும். ஆனால் ரயில்களில் அப்படி அல்ல. ரயில் பெட்டிக்குள் என்ன நடக்கிறது என்பது ரயிலை ஓட்டும் ஓட்டுநருக்கு தெரியாது. இதனால் ஆபத்தான நேரங்களில் ரயில் பயணித்தால் அதனால் கூட உயிர் போக வாய்ப்புள்ளது. இதை தவிர்ப்பதற்காகவே செயினை வைத்திருக்கிறார்கள்.

ஆபத்து நேரங்களில் பயணிகள் அந்த செயினை இழுத்தால் உடனடியாக ரயில் என்பது நின்று விடும். இதனால் பயணிகள் பிரச்சனை இல்லாமல் தவிர்க்க முடியும். தீ விபத்து ,கொள்ளை, உயிருக்கு ஆபத்தான நேரங்களில் இந்த செயினை பிடித்து பயணிகள் இழுக்கலாம். செயினை பிடித்து இழுக்கும்போது ரயிலில் உள்ள போலீசாருக்கு எந்த பெட்டியில் இருந்து சென்னை இழுத்தார்கள் என்று எப்படி தெரியும் தெரியுமா?
தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த செயின் எப்படியான தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ரயிலின் ஒட்டுமொத்த ரயில் பெட்டிகளுக்கும் இணைப்பாக பைப் லைன் என்பது இருக்கும். அந்த பைப் லைனில் ஒரு சென்டிமீட்டருக்கு 5 கிலோ என்ற வகையில் ஏர் பிரஷர் என்பது வழங்கப்பட்டிருக்கும். இந்த ஏர் பிரஷர் குறைந்தாலும், கூடினாலும் தானாக பிரேக் பிடிக்கும்படி தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கும்.

ரயில் பெட்டிகளுக்கு வெளியே 2பெட்டிகளை இணைக்கும் இடத்திற்கு மேல் பகுதியில் இந்த பைப்பில் ஒரு வால்வு இருக்கும். இந்த வால்வு வழியாக தான் செயின் இணைக்கப்பட்டிருக்கும். ரயில் பெட்டிக்குள்ளே இருந்து யாராவது சென்னை இழுத்தால் இந்த வால்வு ரிலீசாகி பிரஷர் என்பது குறைந்து விடும். இதனால் ரயில் தானாக நின்று விடும். உடனடியாக அந்த வால்வு இருக்கும் பகுதிக்கு அருகே ஒரு விசில் தொடர்ந்து சத்தம் எழுப்பி கொண்டே இருக்கும்.
அந்த சத்தத்தை வைத்து குறிப்பிட்ட பெட்டியில் தான் செயின் இழுக்கப்பட்டுள்ளது என்பது ரயில்வே ஊழியர்களுக்கு தெரிந்து விடும். மேலும் போலீசாரும் உடனடியாக அந்த பெட்டியில் ஏறி ஏன்? எதற்காக? செயின் இழுக்கப்பட்டது என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.
அதன் பின் ரயில்வே ஊழியர் வந்து குறிப்பிட்ட விசில் சத்தத்தை மேனுலாக நிறுத்தினால் மட்டுமே சத்தம் நிற்கும் அதுவரை ரயில் நகராமல் தான் இருக்கும். அவர் அந்த சத்தத்தை நிறுத்தி மீண்டும் அந்த பைப்பில் உள்ள பிரஷரை ஒரு சென்டிமீட்டருக்கு 5 கிலோ என்ற ரீதியில் கொண்டு வர வேண்டும் கொண்டு வந்தால் மட்டுமே ரயிலால் மீண்டும் கிளம்பி செல்ல முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் பயணம் என்பது மிகவும் பாதுகாப்பு நிறைந்த பயணமாக இருக்கிறது. இதில் பல்வேறு அறிவியல் விஷயங்கள் இருக்கிறது. பலருக்கும் இப்படியான விஷயம் இருப்பதை தெரியவில்லை. பலர் செயினை இழுத்தால் நேரடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிந்து, அவர் பிரேக் போடுகிறார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. செயினை இழுத்தால் ரயில் ஓட்டுனர் நினைத்தாலும் கூட ரயிலை தொடர்ந்து ஒட்ட முடியாது.


Click it and Unblock the Notifications









