ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சினை பைக்கில் துரத்திய டிரைவர்... சினிமா பாணியில் சம்பவம்!
ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சினை பைக்கில் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சினை, அதன் ஓட்டுனர் பைக்கில் துரத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் இருந்து மும்பைக்கு மெயில் ஒன்று நேற்று புறப்பட்டது. அந்த ரயில் மாலை 3 மணிக்கு கர்நாடக மாநிலம் வடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த ரயில் நிலையத்துடன் மின்சாரத் தடம் முடிவடைகிறது. வடி- சோலாப்பூர் இடையில் மின்மயமாக்கப்படவில்லை.

அங்கு மின்சார ரயில் எஞ்சின் கழற்றப்பட்டு, டீசல் எஞ்சின் இணைக்கப்பட்டு மும்பை மெயில் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், மும்பை மெயில் ரயிலிருந்து கழற்றப்பட்ட மின்சார ரயில் எஞ்சின் மற்றொரு தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாலை 3.30 மணியளவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த மின்சார ரயில் எஞ்சின் திடீரென தானாக ஓடத் துவங்கியது. இதனை பார்த்த ரயில் எஞ்சின் டிரைவரும், ரயில் நிலை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video


ரயில் எஞ்சினை நிறுத்துவதற்காக ரயில் டிரைவர் பைக்கில் துரத்தி சென்றார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்த ரயில் எஞ்சின் பயணித்த வழித்தடத்தில் இருந்த ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த ரயில் தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்:

ரயில் எஞ்சினை பைக்கில் துரத்திச் சென்ற டிரைவரால் உடனடியாக ரயில் எஞ்சினை நெருங்க முடியவில்லை. கிட்டத்தட்ட 13 கிமீ தூரம் அந்த ரயில் எஞ்சின் ஆளில்லாமல் ஓடியது. அதன்பிறகு தானாக அந்த ரயில் எஞ்சின் வேகம் குறைய துவங்கியது. அப்போது பாய்ந்து சென்ற ரயில் எஞ்சினில் ஏறிய அதன் டிரைவர் ஒருவழியாக எஞ்சினை நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டதால், அந்த வழியில் எதிர் திசையில் வந்த ரயில் வேறு தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இல்லையெனில் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். ரயில் எஞ்சின் தானாக ஓடியது குறித்து விசாரணை நடக்கிறது.

ரயில் எஞ்சின் இயக்குவதில் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரயில் எஞ்சின் டிரைவர் கட்டுப்பாட்டு இல்லாமல் ஓடியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

சினிமாவில் வருவது போன்ற இந்த சம்பவம் வடி ரயில் நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்:


Click it and Unblock the Notifications








