34 வருட உழைப்பு!! இராஜ மரியாதை கொடுத்தாலும், கொண்டாடுற மனநிலைல அவர் இல்ல!
இந்தியன் இரயில்வே (Indian Railway)-இல் சுமார் 34 வருடங்களாக இரயில் ஓட்டுனராக பணியாற்றியவர் பிரிய மனமில்லாமல், உணர்ச்சிவசத்துடன் தனது ஓய்வை ஏற்றுக் கொண்டுள்ளார். கடைசி பயணத்திற்கு பிறகு அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பலத்த மரியாதை உடன் பணி நிறைவு அளிக்கப்பட்டுள்ளது. யார் இந்த இரயில் ஓட்டுனர்? எங்கு இவர் 34 வருடங்களாக இரயில் ஓட்டுனராக பணியாற்றினார்? என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
விமான பைலட் ஆக வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு சின்ன வயதில் ஆசையாக இருந்திருக்கும். ஆனால், அதனை நிறைவேற்றியவர்கள் என்று பார்த்தால் குறைவானவர்களே. அதேபோல், இரயில் ஓட்டுனராக பணியாற்ற வேண்டும் என விரும்புவோரும் இருக்கின்றனர். ஆக மொத்தத்தில், அளவில் பெரியதான வாகனங்களை ஓட்ட வேண்டும் என நம்மில் நிறைய பேர் ஆசைப்படுகிறோம்.

சாதாரணமாகவே, வேலையில் இருந்து ஓய்வு பெறுவது என்பது எவரொருவருக்கும் கொஞ்சம் கடினமான விஷயமே. அதிலிலும், நீண்ட வருடங்களாக ஒரே வேலையில் பணியாற்றியவர்களுக்கு கண்ணீரே வந்துவிடும். அவ்வாறுதான், பெங்களூரில் இரயில் ஓட்டுனராக சுமார் 34 வருடங்களாக பணியாற்றிய நபர் கனத்த இதயத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பெங்களூரில் லோகோ பைலட்டாக கடந்த 34 வருடங்களாக பணியாற்றியவர் கிஷன் லால். இவர் கடந்த மார்ச் 31ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த 34 வருடங்களில், பல்வேறு இரயில்களை ஓட்டியுள்ள கிஷன் லால் தனது கடைசி காலக்கட்டத்தில் இந்தியாவின் மாடர்ன் இரயிலான வந்தே பாரத்தையும் ஓட்டியுள்ளார்.

இன்னும் சொல்ல போனால், கிஷன் லாலின் கடைசி இரயில் பயணம் வந்தே பாரத் இரயிலில் தான் நடந்தது. மார்ச் 31ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூருக்கு கடைசியாக கிஷன் லால் வந்தே பாரத் இரயிலை ஓட்டினார். கிஷன் லால் இயக்கிய கடைசி இரயில் சென்னையில் இருந்து பெங்களூர் இரயில் நிலையத்தை வந்தடைந்த உடன், கிஷன் லாலுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிஷன் லால் கடைசியாக ஓட்டியது வந்தே பாரத் இரயில் என்பதால், பணியை முடித்துக் கொண்டு கிஷன் லால் இரயிலில் இருந்து கீழிறங்குவதை ஜன்னல் கண்ணாடிகள் வாயிலாக தெளிவாக காண முடிந்தது. பொதுவாக, இரயில் ஓட்டுனர்கள் பணியை முடிந்து இரயிலை விட்டு வெளியேறுவதற்கு முன், அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்து பணிக்கு வரும் ஓட்டுனரிடம் தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில், கிஷன் லால் தனது கடைசி பயணத்திலும் இரயிலை விட்டு வெளியேறும் முன் மற்ற பணியாளர்களுடன் பேசி விட்டு இரயிலை விட்டு கீழிறங்குவதை இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். இரயிலை விட்டு இறங்கியதும் கிஷன் லாலுக்கு மாலை அணிவிக்கப்பட்டது; மேள, தாளங்களுக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், திட்டமிட்டப்படி மெத்தளம் கொட்ட ஆரம்பித்தது.
கிஷன் லாலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் நடைமேடைக்கு வந்திருந்தனர். ஒருத்தர் பின் ஒருத்தராக பலரும் கிஷன் லாலுக்கு வாழ்த்து தெரிவிக்க, அந்த நடைமேடையே சிறிது நேரத்தில் விழா கோலம் பூண்டது. இதனை பலரும் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தினர். அவற்றை ஒன்றாக தொகுத்து பவன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் 34 வருடங்களாக இரயில் டிரைவர் பணி என்பது உண்மையில் ஆச்சிரியமளிக்கும் விஷயம் ஆகும். இந்த 34 வருடங்களில் இரயில் ஓட்டுனராக எத்தனை அனுபவங்களை பெற்றுள்ளார் என்பது கிஷன் லாலுக்கு மட்டுமே தெரியும். 34 வருடங்களுக்கு முன்பு சாதாரண டீசல் என்ஜின் இரயிலில் கிஷன் லாலின் பயணம் துவங்கி இருக்கலாம். ஆனால், கடைசியாக முடிந்தது வந்தே பாரத் இரயிலில் ஆகும்.


Click it and Unblock the Notifications









