ஜிஎஸ்டி அமலாக்கத்தால் நாடு முழுவதும் பேருந்து கட்டணம் உயருமா..?? முழுத் தகவல்கள்..!!
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் நாடு முழுவதும் பேருந்து கட்டணம் உயருமா..?? முழுத் தகவல்கள்..!!
நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பொது போக்குவரத்து துறையில் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை தரும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு நாள் முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடிப்படையில் சரக்குகள் மற்றும் சேவைக்களுக்கான வரி விதிப்பு இந்தியாவில் அமலில் இருக்கும்.

இதில் கார்கள், பைக்குகள், கமர்ஷியல் வாகனங்கள், ஆடம்பர படகுகள் உட்பட அனைத்து மோட்டார் வாகனங்கள் மற்றும் அதற்கான உதிரிபாகங்கள் ஜி.எஸ்.டி-யில் 28 சதவீத அடிப்படை வரி விதிப்பை பெறுகின்றன.

இவை தவிர, விவசாயிகளுக்கான டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு 12 சதவீத வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டிக்காக உருவாக்கப்பட்டுள்ள கவுன்சில் கூறியுள்ளது.

அன்றும் இன்றும் என்றும் பேருந்துகள் தான் பொது போக்குவரத்து துறையில் முக்கிய வாகனமாக இருக்கின்றன. ஜி.எஸ்.டி-க்கு கீழ் இதற்கு 43 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.

அதாவது அடிப்படை வரியான 28 சதவீதத்துடன், செஸ் வரி 15 சதவீதம் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தமாக பேருந்துகளுக்கு ஜி.எஸ்.டியில் 43 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

பேருந்துகள் மட்டுமில்லாமல், 10 பேருக்கு மேல் அமர்ந்து செல்லும் திறன் பெற்ற அனைத்து ரக வாகனங்களும் இதே நடைமுறை தான் ஜி.எஸ்.டியின் கீழ் பின்பற்றப்பட உள்ளது.

தற்போதுள்ள நடைமுறையில், பொது போக்குவரத்து வாகனங்களுக்கு 27.8 சதவீத வரி தமிழகத்தில் வசூலிக்கப்பட்டுகிறது. மேலும் இந்த வரி மாநிலங்கள் வாரியாக மாறுபடும் தன்மை கொண்டது.

பேருந்துகளுக்கு 43 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்க நினைக்கும் அரசின் முயற்சி தோல்வியை பெறும் என இந்திய வாகன உற்பத்தியாளர் சம்மேளனம் கூறுகிறது.

மேலும், இதனால் பேருந்து கட்டணங்கள் உயர்ந்து பொது போக்குவரத்தை யாரும் பயன்படுத்தாத நிலை ஏற்படும். மீண்டும் வாகன நெரிசல் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாகும் என அச்சங்கத்தின் நிர்வாக இயக்குநர் விஷ்னு மாத்தூர் தெரிவித்துள்ளார்

இதுப்பற்றி பேசிய அசோக் லெலேண்ட் செய்தி தொடர்பாளர், வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பொதுமக்கள் மட்டுமில்லாமல், வாகன உரிமையாளர்களும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

ஆடம்பர கார்களுக்கு இணையாக பொது போக்குவரத்து ஊர்திகளுக்கும் ஜிஎஸ்டி-யில் வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பேருந்து கட்டணங்கள் மிகப்பெரிய அளவில் உயரும் வாய்ப்புகள் உள்ளது.

சமீபமாக மத்தியரசு மேற்கொண்டு வரும் அரசியல் மாற்றங்கள் பல இந்தியாவில் நடுத்தர வர்கத்தையும் அவர்களது தேவைகளையும் குறிவைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதோ என ஒரு கவனம் எழுகிறது.


Click it and Unblock the Notifications