ஓவர்லோடு லாரிகளை இனி வளைச்சு வளைச்சு பிடிக்க போறாங்க!! அபராதம் அதிகமாகுதாம்...
நிர்ணயித்த அளவுக்கு மேல் சுமைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது கடுமையான அபாரதங்கள் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வருடந்தோறும் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்பது ஓர் கசப்பான உண்மை. இதனை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு பல ஆண்டுகளாக ஈடுப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியே நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் ஆகும்.

அதேநேரம் வாகன ஓட்டிகளை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்தியில் ஆளும் அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, நிர்ணயித்த அளவுக்கு மேல் சுமைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது பெரிய அளவிலான அபராதங்கள் விதிக்கப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஹைட்ராலிக் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் (HTOA) சார்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது இவரிடம் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர், அதிக சுமையை ஏற்றி செல்வதற்காக சரக்கை பெறுபவரையே தண்டிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். ஆனால் இதற்கு அமைச்சர், அதிக சுமையை ஏற்றி வருவதற்காக உங்கள் மீதே அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலந்துரையாடலின்போது மேலும் பேசிய அமைச்சர், "நீங்கள் பேராசைப்பட்டு, சரக்கு பெறுபவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறீர்கள். இது சரியாக இருக்காது. உங்களது (ஹைட்ராலிக் லாரி உரிமையாளர்கள்) பேராசை இல்லையென்றால், இத்தகைய அதிக சுமை வாகனங்கள் இந்திய சாலைகளில் இருந்திருக்காது. நாங்கள் உங்களிடம் தான் கட்டணம் வசூலிப்போம் மற்றும் நாங்கள் உங்களை தான் தண்டிப்போம்.

அதிக சுமை ஏற்றப்பட்ட லாரிகளை ஏன் இயக்க அனுமதிக்கிறீர்கள்? நாங்கள் உங்களிடம் தொடர்ந்து கட்டணம் வசூலிப்போம். அது இல்லாமல், சீர்திருத்தம் இல்லை. சட்டத்தின் மீது பயமோ மரியாதையோ இல்லை" என காட்டமாக கூறியவர், போக்குவரத்து துறைக்கு இணக்கமாக பேசுகையில், "அனுமதியை பெறுவதில், இங்கு ஏகப்பட்ட சட்ட மீறல்கள் உள்ளன.

டிஜிட்டல் செயல்முறைகள் இத்தகைய மீறல்களை குறைக்கும் என்பது எங்களது எண்ணம். இந்த சீர்திருந்தங்களை மேற்கொள்வதற்கு எங்களுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் தேவை" என்றார். பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் போக்குவரத்து துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளும் தனக்கு தெரியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "ஆர்டிஓ அலுவலகங்களில் ஆய்வுகள் மற்றும் அனுமதிகளை பெறுவது மிகவும் சிக்கலானது மற்றும் அதிக ஊழலை உருவாக்குகிறது. அதனால்தான் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அமைப்பு தேவை" என கூறியுள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

இதற்காக சில இலக்குகளை நிர்ணயித்து கொண்டுள்ள மத்திய அரசு நாட்டின் அனைத்து துறைமுகங்கள் மற்றும் மாவட்டங்களையும் குறைந்தப்பட்சம் 4-வழி நெடுஞ்சாலைகளின் மூலமாவது இணைக்க வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். குறிப்பாக தலைநகர் டெல்லி-குருகிராம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுவரும் துவாரகா விரைவு சாலை வருகிற 2023இல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications








