மரம் ஏறும் பைக்கை உருவாக்கிய முதியவர்! இவ்ளோ கம்மி விலையில் குடுக்கறாரா! விவசாயிகளுக்கு கடவுளா மாறீட்டாரு!
கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா பகுதியை சேர்ந்தவர் கோமலே கணபதி பாட். இவருக்கு 51 வயதாகிறது. கடந்த 2019ம் ஆண்டு இவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கியிருந்தார். மரங்களை வேகமாக ஏறுவதற்கு இந்த கருவி உதவி செய்யும். எனவே பலரின் கவனத்தையும் இந்த கருவி ஈர்த்தது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) கூட, இந்த கருவியால் ஈர்க்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து இந்த கருவியை இன்னும் நன்றாக மேம்படுத்தும்படி, கோமலே கணபதி பாட்டிற்கு நிறைய பேர் ஆலோசனைகளை வழங்கினர். இதன் பேரில், தனது கண்டுபிடிப்பை அவர் மெருகேற்றியுள்ளார்.

கோமலே கணபதி பாட் நினைத்திருந்தால், ஆரம்பத்திலேயே அந்த கருவியை விற்பனை செய்து விட்டு, வேறு வேலையை பார்த்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தனது கண்டுபிடிப்பை எப்படி மேம்படுத்தலாம்? என பல விதங்களிலும் அவர் யோசனை செய்தார். அத்துடன் நிபுணர்கள் பலரிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதன் விளைவாக 2019ம் ஆண்டு தான் உருவாக்கிய கருவியின் புதிய வெர்ஷனை கோமலே கணபதி பாட் தற்போது அறிமுகம் செய்துள்ளார். மரங்களை ஏற உதவுவதால், இதனை 'ட்ரீ பைக்' (Tree Bike) என அழைப்பது பொருத்தமாக இருக்கும். விவசாயிகளுக்கு இந்த மரம் ஏறும் பைக் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்த மரம் ஏறும் பைக்கின் எடை 45 கிலோ ஆகும். எனினும் ட்ராலி மூலம் இதனை மிக எளிதாக இடம் மாற்றலாம். இந்த மரம் ஏறும் பைக், பெட்ரோல் (Petrol) மூலம் இயங்குகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில், 70 முதல் 80 மரங்கள் வரை ஏற முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இங்கே மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
இந்த மரம் ஏறும் பைக், 360 டிகிரி கோணத்தில் சுழலும் என்பதுதான் அது. இந்த மரம் ஏறும் பைக்கை, பாக்கு மரம் மற்றும் தென்னை மரங்களில் பயன்படுத்த முடியும். அத்துடன் மாம்பழம் மற்றும் பலாப்பழங்களை பறிக்கவும், இந்த மரம் ஏறும் பைக் விவசாயிகளுக்கு உதவி செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது பெரும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.
அதிலும் குறிப்பாக மரம் ஏறுவது போன்ற வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதே இல்லை. எனவேதான் இந்த மரம் ஏறும் பைக் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட இந்த மரம் ஏறும் பைக்கை தனியாகவே பயன்படுத்த முடியும் எனவும் கோமலே கணபதி பாட் தெரிவித்துள்ளார்.
இந்த மரம் ஏறும் பைக்கிற்கு கர்நாடக மாநில அரசு 43 ஆயிரம் ரூபாயை மானியமாக (Subsidy) வழங்குகிறது. எனவே வாங்குபவர்களுக்கு இதன் ஒட்டுமொத்த விலை (Price) வெறும் 1.12 லட்ச ரூபாயாக குறைந்து விடுகிறது. இந்த மரம் ஏறும் பைக்கை உருவாக்கியுள்ள கோமலே கணபதி பாட்டிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








