தமிழகத்தில் இன்னொரு டிடிஎஃப் வாசன் உருவாக கூடாது! சாட்டையை சுழற்றிய போலீஸ்! இதைதான் இவ்ளோ நாளா எதிர்பாத்தோம்!
சமீபத்தில் பைக்கில் வீலிங் செய்யும் போது விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தற்போது தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் மோட்டோ விலாக் செய்யும் யூடியூபர்களில் பிரபலமாக இருப்பவர் டிடிஎஃப் வாசன். இவருக்கு தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரசிகர் படையே இருக்கிறது. இவர் யூட்யூபில் வெளியிடும் மோட்டோ விலாக் வீடியோக்கள் எல்லாம் ஏகப்பட்ட வியூஸ்களை அள்ளி வருகிறது. அதே நேரத்தில் இவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் இருக்கிறது.

இவர் அதிக வேகமாக பைக் ஓட்டி இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து வருகிறார் என இவர் மீது பலர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். மேலும் இவர் அதிக வேகத்தில் பைக் ஓட்டியதற்காக இதற்கு முன்னர் இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் கோர்ட் வழக்குகளை எல்லாம் சந்தித்து வந்துள்ளார்.
இதன் மூலம் அவர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இன்று தமிழகத்தில் டிடிஎஃப் வாசனை தெரியாத நபர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். இந்த பிரபலத்தை வைத்து இவர் சினிமாவில் நடிக்கும் ஒரு வாய்ப்பையும் பெற்றார் தற்போது "மஞ்சள் வீரன்" என்ற பெயரில் இவர் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த திரைப்பட பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர் சொந்தமாக சுஸூகி நிறுவனத்தின் ஹயபுஸா என்ற சூப்பர் பைக் ஒன்றை சொந்தமாக வாங்கினார். இது ஒரு சூப்பர் பைக் ஆகும். அந்த பைக்கில் தான் தற்போது தமிழக முழுவதும் டூர் சென்று வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் சென்னையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பைக் மூலம் டூர் செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி சென்னையில் இருந்து கிளம்பி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இவர் தனது சுஸூகி ஹயபுஸா பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தார். இவருடன் மற்ற பைக்கில் இவரது நண்பர்களும் பயணித்து கொண்டு இருந்தார்கள்.
இவரது பைக் சரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் வீலிங் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பைக் ஸ்லிப் ஆகி பெரும் விபத்து நடந்தது. இதில் டிடிஎஃப் வாசல் பைக்கில் இருந்து பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. பலர் இவர் மீது விமர்சனங்களை வைத்தனர். பொது சாலையில் வீலிங் செய்தது இவர் தவறு என குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
இந்நிலையில் பாலுசெட்டி சமுத்திரம் போலீசார் இவர் மீது பிணையில் வெளியில் வராதபடி வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை ஆணையம் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தது. இந்நிலையில் இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இவர் இருக்கும் இடத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் டிடிஎஃப் வாசன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட போலீசார் இன்று அவரை கைது செய்துள்ளனர். பிணையில் வெளியே வர முடியாத வழக்கின் கீழ் தற்போது டிடிஎஃப் வாசல் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதி இவர் மீதான வழக்கை விசாரித்து அதற்கான தண்டனையை வழங்கும் நிலையில் அதன் பின்னர் இவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறாரா அல்லது விடுதலை செய்யப்படுகிறாரா என்ற தகவல் தெரிய வரும். டிடிஎஃப் வாசன் தொடர்ந்து சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருவதால் இவருக்கு சிறை தண்டனை வழங்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக் ரைடிங் என்பது மனதிற்கு இதமான ரிலாக்ஸ் தரும் ஒரு விஷயம்தான். ஆனால் அதே நேரம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டியது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதை மீறினால் பைக் ஓட்டுனர்களுக்கும் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். சாலை செல்லும் போது பைக்கில் சாகசத்தில் ஈடுபடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








