பணியாளர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பத்திற்கும் இலவச வைரஸ் எதிர்ப்பு மருந்து... டிவிஎஸ்-இன் தரமான அறிவிப்பு!
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் இலவச கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தை அதன் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும் செலுத்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழகத்தை மையமாகக் கொண்டு இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ் நிறுவனம், அதன் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம், தன்னுடைய பணியாளர்களுக்கு மட்டுமின்றி பணியாளர்களின் குடும்பத்தார்களுக்கும் வைரஸ் தடுப்பு மருந்தை வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது.

நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்து போடப்பட்டு வருகின்றது. அண்மையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி பிரதமர் மோடி வரையிலான பல தலைவர்கள் தடுப்பூசியைக் கொண்டனர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மாநிலங்களின் முதலமைச்சர்கள் சிலரும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.

இந்த நிலையிலேயே தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. முதல்கட்டமாக 60க்கும் மேற்பட்ட வயதுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்த இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

அரசு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. நாடு முழுவதும், டிவிஎஸ் மோட்டார், சுந்தரம் கிளேடன், டிவிஎஸ் நிதி சேவை, சுந்தரம் ஆட்டோ உதிரிபாகங்கள் மற்றும் எமரால்ட் ஹெவன் ரியால்டி ஆகிய நிறுவனங்களை டிவிஎஸ் நடத்தி வருகின்றது.

இந்த நிறுவனங்களில் நேர் மற்றும் மறைமுக சுமார் 35ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்குமே சிறப்பு நில திட்டத்தின் வாயிலாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து போடப்பட இருக்கின்றது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எச்ஆர் பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் ஆர். ஆனந்தகிருஷ்ணன் கூறியதாவது, "பணியாளர்களின் முழுமையான நல்வாழ்வுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இதனடிப்படையிலேயே வைரஸ் எதிர்ப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவசரகால தேவை, மருத்துவ உதவி, கோவிட்-19 வைரஸ் விழிப்புணர்வு மற்றும் மன நல ஆலோசானை என பல்வேறு சேவைகளை பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றோம்" என்றார்.

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு நிறுவன ஊழியர்களிடத்தில் மட்டுமின்றி நாட்டு மக்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் பாதிப்புக்குள்ளான ஏழை, எளிய மக்களுக்கு தங்கள் சார்பாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் உதவியை வழங்கின.

குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், வைரஸ் எதிர்ப்பு உபகரணங்களான மாஸ்க், சானிட்டைசர் மற்றும் மருந்துகளை வழங்குதல் என பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டன. இந்த நிலையிலேயே தன்னுடைய பணியாளர்களைப் பாதுகாக்கும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் வைரஸ் எதிர்ப்பு மருந்தை செலுத்த முன் வந்திருக்கின்றது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








