செம்ம... கோவை அரசு மருத்துவமனைக்கு புதியதாக 2 ‘ஆக்ஸிஜன்’ பேருந்துகள்!! 24 பேருக்கு சிகிச்சை தரலாம்...
கோவை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 2 பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவை சுற்று வட்டார மக்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இந்த பேருந்துகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தமிழகம் முழுவதுமே கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

எனவே படுக்கைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் திண்டாடிவரும் செய்திகளை சமீப நாட்களாக அதிகளவில் பார்த்தும், கேட்டும் வருகின்றோம்.

சிகிச்சைக்கு வரும் தொற்று நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதில் தொற்று முற்றியவர்கள் ஆம்புலன்ஸிலேயே உயிரிழக்கும் கொடுமையையும் அன்றாடம் பார்க்கின்றோம்.

தமிழகத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தகையவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள் என்பதால் மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதற்கு அரசும், சில தனியார் நிறுவனங்களும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் உள்ள கோவை மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகளை வழங்கியுள்ளன.

கேஜிஐஎஸ்எல் மற்றும் தொழில்முனைவோர் அமைப்பு, சேவா கேஸ் என்ற தனியார் நிறுவனங்கள் தான் இந்த ஆக்ஸிஜன் பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக அர்பணித்துள்ளன. ஆக்ஸிஜன் தேவையுடன் வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த பேருந்துகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளன.

இதற்காக இந்த பேருந்துகளில் தலா 12 இருக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் உள்ளன. 7 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த சிலிண்டர்கள் பேருந்திற்கு 6 என கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரு ஆக்ஸிஜன் பேருந்துகளின் மூலம் மொத்தம் 24 நோயாளிகள் பயன் பெற முடியும்.

24 நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு தேவையான ஆக்ஸிஜன் எப்போதும் இந்த பேருந்தில் இருப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பஸ்கள் கோவை அரசு மருத்துவமனையை நம்பியிருப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை தூண்களாக உருவெடுத்துள்ளன.


Click it and Unblock the Notifications








