சாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா?
சாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளனர்.

விலை உயர்ந்த கார்களை வாங்குபவர்களுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதில், திருட்டு அச்சம் மிக முக்கியமானது. விலை உயர்ந்த கார்களை முறையாக பராமரிப்பதோடு, திருடர்களிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் காரில் முதலீடு செய்த பணம் கோவிந்தாதான். ஒரு விலை உயர்ந்த காரை வைத்திருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், டீலர்களின் நிலைமை யோசித்து பாருங்கள்.

ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டீலர்ஷிப்களில் என்னதான் பாதுகாப்பு வசதிகள் நிறைய இருந்தாலும் கூட, அங்கும் திருட்டு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. இந்த வகையில் டீலர்ஷிப் ஒன்றில் இருந்து விலை உயர்ந்த கார்கள் தற்போது திருடப்பட்டுள்ளன. அந்த கார்களை திருடிய கொள்ளையர்கள் நூதனமான முறையில் போலீசிடம் சிக்கி கொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாஸ்டன் நகரில் உள்ள ஒரு லக்ஸரி கார் ஷோரூமில் இருந்து, அன்றைய தினம் 3 கார்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில், 2 லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார்களும், 1 செவர்லே க்ரூஸ் (Chevrolet Cruze) காரும் அடக்கம்.

கொள்ளையடிக்கப்பட்ட லம்போர்கினி உருஸ் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார் ஆகும். அதே சமயத்தில் செவர்லே க்ரூஸ் காரானது, செடான் மாடல் ஆகும். இதில், ஒரு லம்போர்கினி உருஸ் காரின் விலை மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய கல் மூலமாக ஷோரூமின் கண்ணாடிகளை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் மூன்று கார்களையும் திருடி கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர். ஆனால் அந்த மூன்று கார்களுமே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. கொள்ளையர்கள் எப்படி சிக்கினர்? என்பதில்தான் சுவாரஸ்யமே உள்ளது. கொள்ளையர்கள் 3 கார்களையும் திருடிய பின் ரேஸில் பறப்பது போன்று பயணித்துள்ளனர்.

இதனை போலீஸ் அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார். இதன்பின்பாக போலீசார் அந்த கார்களை சேஸ் செய்தனர். இதில், செவர்லே க்ரூஸ் காரை போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நிறுத்தி விட்டனர். அத்துடன் அந்த காரை ஓட்டி வந்த நபரையும் போலீசார் பிடித்தனர். ஆனால் இரண்டு லம்போர்கினி கார்களையும் போலீசாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எனினும் அந்த இரண்டு கார்களையும் போலீசார் விடாமல் துரத்தி சென்றனர். அப்போது இரண்டு கார்களும் விபத்தில் சிக்கின. எனவே இரு கார்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே ஒருவரை போலீசார் பிடித்து விட்டனர். ஆனால் மற்றொருவர் எப்படியோ அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
ஆக மொத்தத்தில் மூன்று பேரில் இருவரை போலீசார் பிடித்து விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட உருஸ் கார் இந்தியாவிலும் மிகவும் பிரபலமான லம்போர்கினி மாடல்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரிடம் லம்போர்கினி உருஸ் கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: Michael Henrich/Twitter


Click it and Unblock the Notifications








