பல கோடி விலை... 2 புதிய சொகுசு படகுகளை வாங்கிய தமிழ்நாடு அரசு... எதுக்குனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க
பல கோடி ரூபாய் மதிப்புடைய 2 புதிய சொகுசு படகுகளை, தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வாங்கியுள்ளது.

Image Courtesy: Naren2910/Wiki Commons
கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள துறைகளில், சுற்றுலா மிகவும் முக்கியமானது. ஊரடங்கு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். ஆனால் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் தற்போது வெகுவாக தளர்த்தப்பட்டு விட்டன.

Image Courtesy: Uthraa.p/Wiki Commons
எனவே சுற்றுலா தலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக களை கட்ட தொடங்கியுள்ளன. ஆனால் கன்னியாகுமரி இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகிய இடங்களை கண்டு ரசிக்க இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

Image Courtesy: Ravivg5/Wiki Commons
கோடை விடுமுறை, தொடர் பண்டிகை விடுமுறைகள் மற்றும் சபரிமலை சீஸன் காலங்களில் இங்கு தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிவார்கள். அவர்கள் படகுகளில் சென்று திருவள்ளுவர் சிலை மற்று விவேகானந்தர் பாறைகளை கண்டுகளிக்கின்றனர். இந்த படகுகளை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இயக்குகிறது.

Image Courtesy: Coolgama/Wiki Commons
தற்போதைய நிலையில் விவேகானந்தா, பொதிகை மற்றும் குகன் என மொத்தம் 3 படங்குகளை மட்டும்தான் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. எனவே தினமும் அதிகபட்சமாக 16,000 பேரால் மட்டுமே படகு சவாரி சென்று, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றை காண முடியும்.

Image Courtesy: Sugeesh/Wiki Commons
இதன் காரணமாக கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலமாக கூடுதலாக 2 அதிநவீன சொகுசு படகுகளை இயக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 2 நவீன படகுகள் கோவாவில் தயாரிக்கப்பட்டுள்ளன.

Image Courtesy: Gan13166/Wiki Commons
அவற்றுக்கு தாமிரபரணி மற்றும் திருவள்ளுவர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படகுகள் ஒவ்வொன்றின் மதிப்பும் தலா 4.25 கோடி ரூபாய் ஆகும். இதில், தாமிரபரணி சொகுசு படகு ஏற்கனவே கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அங்கு உள்ள படகு இல்லத்தில், தாமிரபரணி சொகுசு படகு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

2வது சொகுசு படகான திருவள்ளுவரும் தற்போது கன்னியாகுமரி வந்தடைந்துள்ளது. இந்த சொகுசு படகின் சோதனை ஓட்டம் விடுமுறை தினமான நேற்று (செப்டம்பர் 27ம் தேதி) நடைபெற்றது. புதிய சொகுசு படகின் வருகையால், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த படகில் பல்வேறு சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் 138 சாதாரண இருக்கைகளை இந்த படகு பெற்றுள்ளது. இதுதவிர குளிர்சாதன வசதியுடன் கூடிய 12 இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அலங்கார தரைவிரிப்புகள், பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் நவீன மிதவைகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஆனால் கன்னியாகுமரியில் இன்னும் படகு சேவை தொடங்கப்படவில்லை.

இதை பயன்படுத்தி கொண்டு படகு இல்லத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு அனுமதி வழங்கியவுடன் 5 படகுகளும் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றுக்கு, சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.

அரசு அனுமதி கிடைத்தவுடன், தாமிரபரணி மற்றும் திருவள்ளுவர் ஆகிய இரண்டு புதிய சொகுசு படகுகளின் சேவையும் தொடங்கப்படும். எனவே சீஸன் காலகட்டங்களில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கைவசம் உள்ள 5 படகுகளும் இயக்கப்படும்'' என்றனர். இது தொடர்பாக இந்து தமிழ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








