2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி... டெல்லியில் பயங்கரம்!
டெல்லியில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அதிவேகமே இந்த விபத்துக்கு காரணமாக தெரிய வந்துள்ளது.
சூப்பர் பைக்குகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் இந்த வேளையில், அதற்கு இணையாக விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சக்திவாயந்த பைக்குகளை ஓட்டும் இளைஞர்கள் கண்மூடித்தனமாக கையாள்வதே இந்த விபத்துக்களுக்கு காரணமாக அமைந்து வருகிறது. அதுபோன்றே இப்போது ஒரு கோர விபத்து டெல்லியில் நடந்துள்ளது.

தெற்கு டெல்லியின் குதூப் இன்ஸ்டிடியூட் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் பஜாஜ் டோமினார் 400 பைக் ஒன்றும், ஹயோசங் 650 பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஜாஜ் டோமினார் 400 பைக்கில் வந்த ராமன் என்ற இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

ஹயோசங் 650 பைக்கில் வந்த இருவர் இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹயோசங் பைக்கை ஓட்டி வந்த சார்லஸ் பிரையன்[27] என்ற இளைஞர் குர்கானில் உள்ள தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

ஹயோசங் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த மற்றொருவரும் படுகாயமடைந்தார். முதலில் இந்த இரு பைக்குகளும் ரேஸ் நடத்தியபோது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது ஹயோசங் பைக்கை ஓட்டி வந்தவரே விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பஜாஜ் டோமினார் பைக்கை ஓட்டிச் சென்றவர் மிதமான வேகத்தில் சென்றதாகவும், ஆனால், எதிர் திசையில் ஹயோசங் பைக்கை ஓட்டி வந்த சார்லஸ் தாறுமாறாகவும், அதிவேகத்திலும் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஹயோசங் பைக் எதிரே வந்த பஜாஜ் டோமினார் பைக்கில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது. இதில், பஜாஜ் டோமினார் பைக்கில் வந்த ராமன் படுகாயங்களுடன் உயிரிழந்துவிட்டார்.

ஐஐஎஃப்டி தாபா லேன் என்ற 10 அடி அகலமுடைய மிக குறுகலான அந்த சாலையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஹயோசங் பைக்கை சார்லஸ் ஓட்டி வந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஜாஜ் டோமினார் பைக்கில் வந்த ராமன் என்ற இளைஞர் ஹெல்மெட்டில் இருக்கும் பெல்ட்டை இறுக்கமாக அணியாமல் வந்துள்ளார். இதனால், மோதிய வேகத்தில் ஹெல்மெட் தனியாக கழன்று விட்டது. இதனால், அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்துவிட்டார்.

அதேநேரத்தில், விபத்துக்கு வழிவகுத்த ஹயோசங் பைக்கை ஓட்டி வந்தவர் பாதுகாப்பு கவசங்களை அணிந்து வந்ததாக தெரிகிறது. இதனால், அவர் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்று தொடர்ந்து சூப்பர் பைக்குகள் விபத்தில் சிக்கி வருவதற்கு ஓட்டுபவரின் தவறே முக்கிய காரணமாக அமைகிறது. இதுபோன்ற பைக்குகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, ஓட்டுபவர்கள் நிதானமாகவும், விவேகமாகவும் செயல்படுவது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications








