பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
பாதுகாப்பு படை வீரர்களுக்காக பைக் ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆகியவை சார்பில், சிறப்பு பைக் ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ அல்லது போர்கள், தீவிரவாத தாக்குதல்களில் அவர்கள் காயம் அடைந்தாலோ இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களின் அடிப்படையில் இந்த சிறப்பு பைக் ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களை மாடிஃபிகேஷன் செய்து, பைக் ஆம்புலன்ஸ்களை உருவாக்கியுள்ளனர். இந்த பைக் ஆம்புலன்ஸ்களுக்கு 'ரக்ஷிதா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழில் இதற்கு 'மீட்பர்' என பொருள். இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் டெல்லியில் இன்று (ஜனவரி 18) அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பைக் ஆம்புலன்ஸ்களின் முன் பகுதியில் ஓட்டுபவருக்கு ஒரு இருக்கை உள்ளது. அதே சமயம் பின் பகுதியில் நோயாளிகளுக்கு சாய்வு இருக்கை வழங்கப்பட்டுள்ளது. காயம் அல்லது நோயின் தீவிரத்தை பொறுத்து நோயாளிகள் இதில் அமர்ந்து கொள்ளலாம்.

அல்லது உறங்கும் நிலையில் பயணிக்கலாம். அத்துடன் ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற அவசர கால மருத்துவ உபகரணங்களும் இந்த பைக் ஆம்புலன்ஸ்களில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ சைரன்கள் மற்றும் ஜிபிஎஸ் வசதியுடன் டேப்லெட்கள் போன்ற உபகரணங்களையும் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் பெற்றுள்ளன.

சவாலான பகுதிகளில், அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கு இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். குறிப்பாக நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் பாதிப்பு உள்ள பகுதிகளில் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அங்குள்ள குறுகலான சாலைகளில் வழக்கமான பெரிய ஆம்புலன்ஸ்கள் சென்று வருவது சிரமமான காரியம் என்பதே இதற்கு காரணம். இந்த பகுதிகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த வீரர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தால் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் மூலம் விரைவான மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்படும். இதன் மூலம் அவர்கள் உயிரிழப்பது தவிர்க்கப்படும். குறுகலான சாலைகளில் வழக்கமான ஆம்புலன்ஸ்களால் வர முடியாத காரணத்தால் சில சமயங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பது தாமதமாகிறது.

இந்த தாமதம் நிலைமையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. ஆனால் பைக் ஆம்புலன்ஸ்கள் மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்படும். இதற்கு முன்னதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தகைய பைக் ஆம்புலன்ஸ்களை உருவாக்கி, இந்தியாவின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications