சொன்னா எங்க கேக்கறாங்க... டூ வீலர் தீப்பற்றி எரிந்ததால் சென்னையில் பரபரப்பு... காரணம் என்ன தெரியுமா?
சென்னையில் டூ வீலர் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2020ம் ஆண்டு இன்று இனிதே பிறந்துள்ளது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக, உலகம் முழுவதும் நேற்று இரவு கலை நிகழ்ச்சிகள் களைட்டின. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடந்தன. இதில், ஒரு சில அசம்பாவிதங்களும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னை அருகே நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே உள்ள நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் நவீன். கல்லூரி மாணவர். சோழிங்கநல்லூரில் உள்ள கல்லூரி ஒன்றில் நவீன் தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறது. இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே, இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் வலம் வருவது வாடிக்கையான ஒன்றுதான்.

டூ வீலர்களில் ரைடு சென்று அனைவருக்கும் வாழ்த்து சொன்னால்தான் அவர்களுக்கு புத்தாண்டே பிறக்கும். ஆனால் இதில் ஒரு சில இளைஞர்கள் அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டுகின்றனர். போதாக்குறைக்கு குடி போதையில் வேறு சிலர் வாகனங்களை இயக்குகின்றனர். இதன் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்கள் நடைபெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

இதில், பலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக காவல் துறை தரப்பில், ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பாகவும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் அதனை பொருட்படுத்துவது கிடையாது. எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களில் சாலை விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, நவீன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் டூ வீலரை அதிவேகத்தில் இயக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கரணை-வேளச்சேரி சாலையில் நவீன் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர் சாலையில் கவிழ்ந்தது. அப்போது பெட்ரோல் கசிந்ததால், டூ வீலரில் தீப்பற்றியது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.

காயம் அடைந்த நவீனை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையிலும், அதிக வேகமாகவும் வாகனம் ஓட்டியதே இந்த விபத்திற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. கார், பைக் என எவ்விதமான வாகனம் என்றாலும் குடிபோதையில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் அதிவேகத்தில் பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் அதிவேகத்தில் பயணம் செய்தால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடிய அபாயம் உள்ளது. இந்திய சாலைகள் ஆபத்து நிறைந்தவை. இங்கு எப்போது எது உங்கள் வாகனத்தின் குறுக்கே வரும் என கணிக்கவே முடியாது. சில சமயங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் திடீரென குறுக்கே வந்து விடும்.

இன்னும் சில சமயங்களில் பாதசாரிகள் திடீரென உங்கள் வாகனத்தின் குறுக்கே வந்து விடுவார்கள். அந்த சமயங்களில் நீங்கள் அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தால், உடனடியாக உங்களால் வாகனத்தை நிறுத்த முடியாமல் போய் விடும். இதன் விளைவாக பயங்கரமான சாலை விபத்தில் நீங்கள் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நேரமின்மை காரணமாகவே பெரும்பாலானோர் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். அதாவது பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வதற்கு நேரமாகி விட்டால், உடனே ஆக்ஸலரேட்டரை முறுக்கி பிடித்து விடுகின்றனர். இது ஆபத்தானது. வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும், கொஞ்சம் முன்கூட்டியே கிளம்பினால், இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

இன்னும் சிலரோ த்ரில்லுக்காக அதிவேகத்தில் செல்கின்றனர். பொது சாலைகளில் அதிவேகத்தில் செல்வது ஆபத்தானது. அது சட்ட விரோதமானதும் கூட. உங்களுக்கு த்ரில் வேண்டுமென்றால், ரேஸ் டிராக்குகளில் பாதுகாப்பாக உங்களால் அதனை அனுபவிக்க முடியும். எனவே இரண்டாம் ரகத்தை சேர்ந்தவர்கள் ரேஸ் டிராக்குகளுக்கு சென்று விடுங்கள்.

அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் ஆபத்தானதுதான். குடிபோதையில் இருந்தால் உங்களின் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற மோசமான செயல்களை செய்ய குடிபோதை உங்களை தூண்டி விட்டு விடும். அதே சமயம் நீங்கள் எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டுள்ளீர்கள்? என்பதும் உங்களுக்கு தெரியாமல் போய் விடும்.

எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதையும் தவிர்த்து விடுங்கள். இன்று புத்தாண்டு பிறந்துள்ளது. இதை முன்னிட்டு தங்களிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கங்களை விட வேண்டும் என பலர் சபதம் எடுப்பது வாடிக்கை. உங்களிடம் மேற்கண்ட இரண்டு கெட்ட பழக்கங்களும் இருந்தால், அதனை இன்றோடு விட்டுவிடுவது என சபதம் எடுத்து கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில் அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அத்துடன் அந்த விபத்தின் அதிர வைக்கும் வீடியோவும் வெளியானது.

குடிபோதையில் டிரிபிள் டிரைவ் சென்ற இளைஞர்கள் திடீரென மாயவதைப் போன்று அந்த காட்சிகள் உள்ளன. அந்த வீடியோவையும், இந்த விபத்து குறித்த தகவல்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியமானதாக மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவதே முதன்மை இடத்தில் இருக்கின்றது.

இதனை தவிர்க்கும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பனும், வாகன ஓட்டிகள் அதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதே இல்லை.

இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் எத்தகைய பின் விளைவு சந்திக்கக் கூடும் என்பதனை விளக்குகின்ற வகையிலான வீடியோ ஒன்று புதிதாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம், ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சாலையில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதால் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்ற மூன்று இளைஞர்கள் மிகப் பெரிய விபத்தைச் சந்தித்தனர். இந்த விபத்துகுறித்த காட்சிகள் பார்ப்பதற்கு மாயாஜாலத்தைப் போன்று காட்சியளிக்கின்றது.

பைக்கில் சென்ற மூவரும் திடீரென விபத்துக்குள்ளான சில நொடிகளிலேயே மாயவதைப் போல் அங்கிருந்து தூக்கி வீசப்படுகின்றனர். இதுகுறித்த வீடியோவை ஷாந்தோனில் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், மிதமான வேகத்தில் செல்லும் அந்த பைக்கில் மூன்று இளைஞர்கள் அமர்ந்து செல்கின்றனர். அவர்கள், எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாவது வலது பக்க பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.

அப்போது, அவர்களுக்கு பின்னே வேகமாக வந்த கார்கள் ஒலி எழுப்பி அவர்களை ஒதுங்கச் செய்துவிட்டு ஓவர்டேக் செய்தன. இவ்வாறு, தொடர்ச்சியாக மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அவர்களை ஓவர்டேக் செய்து கடந்தன.

இதனால், சாலையின் இடப்பக்க பாதைக்கும், நடு பாதைக்கும் இங்கும் அங்குமாக மாறி சென்ற அந்த இளைஞர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமாறு திரும்பினார்கள். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் நேரடியாக பாதையை பிரிக்கும் டிவைடர் மீது மோதியது.

இந்த விபத்தில், பைக்கில் அமர்ந்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களும் எதிர்பக்க சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்து சரியாக நள்ளிரவில் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக அப்போது வேறெந்த வாகனமும் வராத காரணத்தால் அந்த பைக் மற்ற எந்த வாகனம் மீதும் மோதாமல் மீண்டும் சாலையின் மறுபக்க டிவைடர்மீது மோதி நின்றது.

இந்த சம்பவத்தில், பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞருக்கு மட்டும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. மற்றவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் சிறு சிறு காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து, அவர்களை மீட்ட சக வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அனைத்தையும் பைக்கின் பின்னால் காரில் வந்த இளைஞர்கள் சிலர் தங்களின் செல்போன் மூலம் பதிவு செய்திருந்தனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர்கள்தான், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பெரும்பாலும், இதுபோன்று மதுபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காகவே போலீஸார் இரவு, பகல் பாராமல் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களை ஏமாற்றிச் செல்லும் பலர் இதுபோன்று விபத்துகளைச் சந்தித்து பெரும் பின்விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.


Click it and Unblock the Notifications








