செம தில்லு! ஆள் யார்னு தெரிஞ்சும் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்! அதான் எல்லாரும் பாராட்டி தள்றாங்க!
போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) மீறுபவர்களுக்கு, நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் காவல் துறையினர் நேரடியாக சாலைகளில் இறங்கி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். எனவே காவல் துறையினர் இருக்கும் இடங்களில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படும். மற்ற இடங்களில் எல்லாம் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்.
ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. காவல் துறையினர் இல்லாவிட்டாலும் கூட, சாலைகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வாகன ஓட்டிகளை கண்காணிக்கின்றன. இதன் அடிப்படையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் (Fine) விதித்து வருகின்றனர். இதுதவிர சமூக வலை தளங்களின் ஆதிக்கம் வேறு தற்போது அதிகரித்து விட்டது.

போக்குவரத்து விதிமீறல்களின் வீடியோக்கள் (Videos) மற்றும் புகைப்படங்களை (Pictures) சமூக வலை தளங்களில் பதிவிட்டு, போக்குவரத்து காவல் துறையினரை 'டேக்' செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வகையில் சமூக வலை தளம் மூலம் தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் மீது சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.
சென்னை வடபழனி பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தில், கடந்த ஜூலை 27ம் தேதி மதியம் 3.30 மணியளவில் இரு சக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அதாவது தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி (Karunanidhi) ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தன.

அத்துடன் நம்பர் பிளேட்டிற்கு கீழே உதய சூரியன் சின்னத்தின் படம் இருந்தது. இதுதவிர அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டியவர் மட்டுமே ஹெல்மெட் (Helmet) அணிந்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நிலையில், இந்த விதிமுறையும் மீறப்பட்டிருந்தது.
அந்த வழியாக வந்த ஒருவர் இதனை புகைப்படம் எடுத்தார். அத்துடன் நில்லாமல் சமூக வலை தளங்கள் மூலமாக இந்த விஷயத்தை சென்னை போக்குவரத்து காவல் துறைக்கும் தெரிவித்தார். இதன் பேரில், நம்பர் பிளேட் விதிமீறலுக்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அனேகமாக சம்பந்தப்பட்ட நபர், தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவில் ஏதேனும் ஒரு பதவியிலோ அல்லது தொண்டராகவோ இருக்கலாம். இருப்பினும் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் காவல் துறையினர் யாரும் இல்லையே என போக்குவரத்து விதிமுறைகளை மீறி கொண்டிருப்பவர்களுக்கு இச்சம்பவம் நல்ல பாடத்தை கற்று கொடுத்திருக்கும் என நம்பலாம். இனி எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாதீர்கள். காவல் துறையினர் இல்லாவிட்டாலும், உங்களை கண்காணிக்க தற்போது ஆயிரம் கண்கள் இருக்கின்றன.
அதை உணர்ந்து கொண்டு, சாலையில் பொறுப்பாக செயல்படுங்கள். இது போக்குவரத்து காவல் துறையினர் விதிக்கும் அபராதங்களில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும் என்பதை மனதில் வைத்து கொள்வது நல்லது. நாம் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே, சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications