அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா?
இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு, ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், 1.13 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் நிறைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இந்த அதிரடி நடவடிக்கையை ஒடிசா போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒடிசா மாநிலத்தில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராத தொகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சர் மாவட்டத்தில் உள்ள அமர்புரா என்னும் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் பன்ஜாரா என்பவர் மீதுதான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராயகடா மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் கேன்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, போக்குவரத்து காவல் துறையினரிடம் பிரகாஷ் பன்ஜாரா சிக்கி கொண்டார். போக்குவரத்து காவல் துறையினர் வழங்கிய அபராத ரசீதின்படி, பிரகாஷ் பன்ஜாரா தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

அத்துடன் அவரது இரு சக்கர வாகனத்தில் பதிவு எண்ணும் இல்லை. பிரகாஷ் பன்ஜாரா மத்திய பிரதேச மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். ஆனால் தொழில் நிமித்தமாக, இரு சக்கர வாகனத்தின் பதிவு பணிகளை முடிக்காமலேயே அவர் ஒடிசா மாநிலம் ராயகடா பகுதிக்கு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு எண் இல்லாமல் வாகனத்தை இயக்கிய காரணத்திற்காக அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாத காரணத்திற்காக தனியாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர காப்பீடு இல்லாத காரணத்திற்காக 2,000 ரூபாயும், தலை கவசம் அணியாத காரணத்திற்காக 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதிவு எண் இல்லாமல் டீலர் இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்ததற்காக 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல் துறையினர் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களில் சிக்கி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற மறுப்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

எனவே வாகன ஓட்டிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டன. அபராத தொகைகள் மிகவும் கடுமையாக இருப்பதால், அதற்கு பயந்து கொண்டு பலர் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








