அதிர்ச்சி... செருப்பு அணிந்து கொண்டு டூவீலர் ஓட்டக்கூடாது... வாகன ஓட்டிகளை நடுங்க வைக்கும் விதிமுறை
நீங்கள் செருப்பு அணிந்து கொண்டு டூவீலர் ஓட்டுபவரா? அப்படியானால் இந்த விதிமுறை உங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என மத்திய அரசு கூறியுள்ளது.

இதன் மூலமாக இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என மத்திய அரசு நம்புகிறது. போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக உயர்த்தியிருக்கும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அதே சமயம் அபராதம் முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளதால், இதற்கு கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அத்துடன் இதை காரணம் காட்டி போக்குவரத்து போலீசார் வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. எது எப்படியோ விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகைகள் கிட்டத்தட்ட இந்தியா முழுக்க அமலுக்கு வந்து விட்டன.

தற்போது இந்தியா முழுக்க வாகன ஓட்டிகள் மத்தியில் இதுதான் முக்கியமான பேசு பொருளாக மாறியுள்ளது. பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஒன்று சேர்த்து வாகன ஓட்டிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் விதிக்கப்படும் மிக கடுமையான அபராத தொகைகள் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

இது வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அதேபோல் சில வினோதமான விதிமுறைகள் குறித்த தகவல்களும் தற்போது வரிசையாக வெளியாகி வருகின்றன. இந்தியாவில் இப்படி எல்லாம் கூட விதிமுறைகள் இருக்கிறதா? என இவற்றில் சில விதிமுறைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் சில விதிமுறைகள் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

அவ்வாறு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு விதிமுறை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது காலணி அல்லது மிதியடிகளை (Chappals or Sandals) அணிய கூடாது என்பதுதான் அந்த விதிமுறை. போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டதன் மூலம் இப்படி ஒரு விதிமுறை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், மோட்டார் வாகன சட்டம் 2019 அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே இப்படி ஒரு விதிமுறை இந்தியாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு வினோதமான விதிமுறை சட்டத்தில் இருப்பது தொடர்பாக வாகன ஓட்டிகள் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

இந்த விதிமுறையின்படி பார்த்தால், கியருடன் கூடிய டூவீலர்களை இயக்கும்போது, ஹவாய் செப்பல்கள் (Hawaii Chappals), ஃபிலிப் ஃப்ளாப்ஸ் (Flip Flops) அல்லது ஸ்லிப்பர்களை (Slippers) வாகன ஓட்டிகள் அணிய கூடாது. இவற்றை அணிந்து டூவீலர்களை இயக்கினால் என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.

இவற்றை அணிந்து கொண்டு டூவீலர்களை ஓட்டினால், கியர்களை மாற்றுவதில் வாகன ஓட்டிக்கு சிரமங்கள் ஏற்படலாம் என இந்த விதிமுறைக்கான காரணத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இரு சக்கர வாகனத்தை நிறுத்தும்போது 'ஸ்லிப்' ஆவதற்கான வாய்ப்பை இது உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை நீங்கள் பின்பற்ற தவறினால், முதல் முறை உங்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். அதன் பிறகும் நீங்கள் இந்த விதிமுறையை தொடர்ச்சியாக மீறினால், 15 நாட்கள் சிறைவாசம் அனுபவிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதுகுறித்து நவபாரத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே இனி டூவீலர்களை இயக்கும்போது நீங்கள் 'ஷூ' அணிந்து கொள்வது நல்லது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறையை பின்பற்றுவது மிகவும் கடினம். எனவே போலீசார் இதை மிகவும் கடுமையாக அமலுக்கு கொண்டு வருவார்களா? அல்லது இந்த விஷயத்தில் மட்டும் வாகன ஓட்டிகளிடம் இலகுவாக நடந்து கொள்வார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த விதிமுறையை நடைமுறையில் பின்பற்றுவது சாத்தியமா? செப்பல் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறதா? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








