டிரைவர் பார்ட்னர்களுக்காக ரூ. 18.5 கோடியை ஒதுக்கிய உபேர்... எதுக்குனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!
தனது இந்திய டிரைவர் பார்ட்னர்களுக்காக உபேர் நிறுவனம் ரூ. 18.5 கோடியை ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் மிக தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. உச்சபட்சமாக வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, இறப்போரின் எண்ணிக்கையும் நான்காயிரத்தைத் தொட ஆரம்பித்திருக்கின்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை இந்தியா மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றது. தடுப்பூசி வாயிலாக மக்களைக் காக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தனது டிரைவர் பார்ட்னர்களுக்கு உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக உபேர் நிறுவனம் பெரும் தொகையை ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுவனம் ரூ. 18.5 கோடி வரை ஒதுக்கியிருக்கின்றது. இந்த பெரும் தொகையைக் கொண்டு அதன் டிரைவர் பார்ட்னர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான இன்சென்டீவ் தொகையை வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 1,50,000 பேருக்கு தடுப்பூசிக்கான தொகையை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உபேர் நிறுவனம் இந்தியாவில் வாடகை கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன சேவையை வழங்கி வருகின்றது. இவர்களையேக் கொடிய வைரசிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஆகையால், பலர் வெளியூர் பயணங்களைத் தவிர்க்க ஆரம்பித்திருக்கின்றனர். குறிப்பாக, சொந்த வாகனங்களைத் தவிர்த்து வாடகை வாகனங்களில் பயணிப்பதற்கு அதிகம் தயங்குகின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் பயணிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக டிரைவர் பார்ட்னர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அறிவிப்பை உபேர் வெளியிட்டுள்ளது. இது டிரைவர்களை வைரசிடம் பாதுகாப்பது மட்டுமின்றி தொற்று பரவலைத் தவிர்க்கவும் உதவும்.

மேலும், டிரைவர் பார்ட்னர் வைரஸ் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர் என்ற தகவலை டிஜிட்டல் சான்று வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் உபேர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, பயணிகளை அச்சமின்றி பயணிக்க வழி வகுக்கும் என நிறுவனம் நம்புகின்றது.

இதுமட்டுமின்றி, உபேர் நிறுவனம் தனது டிரைவர் பார்ட்னர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையையும் டாக்ஸ்ஆப் எனும் செயலி வாயிலாக வழங்கி வருகின்றது. இதனை முதல் அலை கொரோனா வைரஸ் பரவலின் தொடக்க காலத்திலேயே நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர, முழு ஊரடங்கு காலத்தில் வாகன போக்குவரத்து பற்றாக்குறை இருந்த நேரங்களில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு இலவச மற்றும் சலுகை கட்டணத்தில் ரைடு போன்ற சேவைகளையும் உபேர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








