கொரோனா நோயாளியின் உயிரை காப்பாற்ற உபேர் டிரைவர் செய்த காரியம்... கேட்கும்போதே மனசுக்கு இதமா இருக்கு...
கோவிட் நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக உபேர் ஓட்டுனர் செய்த உதவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், மக்களுக்கு உதவி செய்யும் பல நல்ல மனிதர்களை பற்றிய செய்திகள் நமது மனதிற்கு இதமளித்து கொண்டுள்ளன. இந்த வரிசையில் உபேர் ஓட்டுனர் ஒருவர் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. அவர் செய்த காரியத்திற்காக, நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

உதித் அகர்வால் என்ற உபேர் டிரைவர், கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட தனது தாயின் உயிரை காப்பாற்ற எவ்வாறு உதவினார்? என்பதை, ரிட்டுபர்ணா சாட்டார்ஜி என்பவர் சமூக வலை தளங்களில் எழுதியுள்ளார். இதுகுறித்து சமூக வலை தளங்களில் அவர் கூறியுள்ளதாவது: இரக்க மனம் கொண்ட உபேர் ஓட்டுனர் ஒருவரை பற்றிய கதை இது.

கடந்த ஏப்ரல் 28ம் தேதி எனது நண்பர்கள் சிலர், எனது தாயை மருத்துமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் படுக்கை வசதி பெறுவதற்கு, எனது தாய்க்கு அவர்கள் உதவினர். அந்த சமயத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு 80 ஆக மட்டுமே இருந்தது. மேலும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது.

எனவே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவையிருந்தது'' இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால் ரிட்டுபர்ணா சாட்டர்ஜியால் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே உபேர் டாக்ஸி மூலமாக தனது தாயை மருத்துவமனையில் அனுமதிக்க அவர் முடிவு செய்தார். அவர் சென்றாக வேண்டிய மருத்துவமனை 40 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்தது.

ஆனால் 4 டிரைவர்கள் கேன்சல் செய்து விட்டதால், ரிட்டுபர்ணா சாட்டர்ஜி நம்பிக்கை இழந்தார். இதுகுறித்து ரிட்டுபர்ணா சாட்டர்ஜி கூறுகையில், ''ஐந்தாவது ஓட்டுனரிடம் பின்வரும் விஷயத்தை நான் கூறி விட்டேன். சகோதரா, நீங்கள் கேன்சல் செய்வதாக இருந்தால் என்னிடம் கூறி விடுங்கள். ஏனெனில் என்னால் 15-20 நிமிடங்கள் ரிஸ்க் எடுத்து காத்து கொண்டிருக்க முடியாது.

எனவே நான் அனைத்து விபரங்களையும் கூறி விடுகிறேன். இதன் மூலம் நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என நான் அவரிடம் கூறினேன்'' என்றார். மேலும் தானும், தனது அம்மாவும் கோவிட்-19 நோயாளிகள் என்பதையும் ரிட்டுபர்ணா சாட்டர்ஜி, டிரைவரிடம் கூறியுள்ளார். எனினும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிட்டுபர்ணா சாட்டர்ஜி கூறுகையில், ''எனது அம்மாவிற்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே வருவது குறித்தும், என்னால் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பது குறித்தும் நான் ஓட்டுனரிடம் கூறினேன். 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதையும் தெரிவித்தேன்'' என்றார்.

இதன்பின் டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ரிட்டுபர்ணா சாட்டர்ஜியையும், அவரது தாயையும் உபேர் ஓட்டுனர் உதித் அகர்வால் கூட்டி சென்றுள்ளார். இதுகுறித்து ரிட்டுபர்ணா சாட்டர்ஜி கூறியுள்ளதாவது: பொது போக்குவரத்து இல்லாத அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரமாக உபேர் ஓட்டுனர் காத்திருந்தார்.

நாங்கள் உள்ளே செல்வதற்காக காவலர்களுடன் வாக்குவாதம் செய்தார். உள்ளே சென்றதும், எனது அம்மாவிற்கு அவர் உதவி செய்தார். மருத்துவமனை நடைமுறைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் நான் பிஸியாக இருந்தபோது, அவர் அங்கேயே காத்திருந்து எனது அம்மாவிற்கு உதவி செய்தார். எனது அம்மாவை அங்கு அனுமதித்த பின், என்னை மீண்டும் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டு விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மறுநாள் ரிட்டுபர்ணா சாட்டர்ஜியின் அம்மாவை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியிருந்தது. அப்போதும் அந்த உபேர் ஓட்டுனர் உதவி செய்துள்ளார். இந்த சூழலில் மருத்துவமனையில் இருந்து தனது தாய் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்று கிழமை ரிட்டுபர்ணா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். ''26 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, நான் உபேர் ஓட்டுனருக்கு போன் செய்தேன்.

அப்போது நான் அங்கே இருப்பேன் என அவர் கூறினார். எனது தாயை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவதற்கு நான் வேறு யாரை நம்புவேன்?'' என ரிட்டுபர்ணா சாட்டர்ஜி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இதற்காக உபேர் ஓட்டுனர் உதித் அகர்வாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் நெகிழ்ச்சியளிப்பதாக நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








