ஓடும் காரை முடக்கிய 'ஹேக்கர்'களை வளைத்து போட்ட உபர் டாக்சி நிறுவனம்!!
கடந்த மாதம் அமெரிக்காவின் நெடுஞ்சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்த ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் கம்ப்யூட்டரை, முடக்கி ஆட்டோமொபைல் துறையினரையும், கார் வாடிக்கையாளர்களையும் கதி கலங்க வைத்தனர் மென்பொருள் வல்லுனர்களான சார்லி மில்லர் மற்ரும் க்றிஸ் வாலெசெக்.
ஹேக்கர்கள் போன்று செயல்பட்டு, உட்கார்ந்த இடத்திலிருந்து அந்த காரை அவர்கள் முடக்கினர். இது பெரும் புயலை கிளப்பியதுடன், அந்த சாஃப்ட்வேர் கொண்ட கார்களை வைத்திருக்கும் வாடிக்ககையாளர்களிடத்தும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரையும் உபர் டாக்சி நிறுவனம் வளைத்து போட்டுள்ளது.

சைபர் தாக்குதல்
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் ஆன்போர்டு கம்ப்யூட்டரின் சாஃப்ட்வேரை, செயற்கைகோள் தொடர்பு மூலமாக இருந்த இடத்திலிருந்து இருவரும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மேலும், காரின் எஞ்சின், ஸ்டீயரிங் கட்டுப்பாடு என அனைத்தையும் கையிலெடுத்தனர். இதனால், கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை கார் இழந்ததுடன், ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. அவர்கள் ஹேக்கர்கள் போன்று செயல்பட்டு, செயல்விளக்கமாகவே செய்து காண்பித்தனர்.

க்றைஸ்லருக்கு நெருக்கடி
ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் சாஃப்ட்வேரில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடு அந்த நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், இந்த சாஃப்ட்வேர் கொண்ட 1.4 கார்களை திரும்ப அழைப்பதாக அறிவித்தது. சைபர் தாக்குதலால் கார்கள் திரும்ப அழைக்கப்பட்ட முதல் சம்பவமாக ஆட்டோமொபைல் வரலாற்றில் பதிவானது.

வளைத்து போட்ட உபர்
மிகுந்த பாதுகாப்புடன் உருவாக்கப்பட்ட ஜீப் செரோக்கீ எஸ்யூயின் சாஃப்ட்வேரையே உடைத்து, அதில் உள்ளே புகுந்து வேலையை காட்டிய மென்பொருள் பாதுகாப்பு நிபுணர்களான சார்லி மில்லர் மற்றும் க்றிஸ் வாலெசெக் ஆகிய இருவரையும் உபர் டாக்சி நிறுவனம் பணியமர்த்திருக்கிறது. இதில், சார்லி மில்லர் டுவிட்டரின் சாப்ட்வேர் பாதுகாப்புத் துறை எஞ்சினியராகவும், க்றிஸ் வாலெசெக் ஐஓ ஆக்டிவ் நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்புத் துறை எஞ்சினியராகவும் பணியாற்றி வந்தவர்கள்.

எதற்காக?
அமெரிக்காவை சேர்ந்த உபர் டாக்சி நிறுவனம், கூகுள், ஆப்பிள் போன்று ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, 40 மென்பொருள் பணியாளர்களை ஏற்கனவே பணியமர்த்திவிட்டது. இந்தநிலையில், இந்த காரின் தொழில்நுட்பத்தை ஹேக்கர்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்படுத்தும் நோக்கில், இந்த இருவரையும் பணியமர்த்தியுள்ளது. அதாவது, பாம்பின் கால் பாம்பறியதனது தானியங்கி கார் சாஃப்ட்வேர் பாதுகாப்புக்கான தொழில்நுட்ப மேம்பாட்டில், இந்த இருவரும் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய இடம்
சார்லி மில்லர் மற்றும் க்றிஸ் வாலெசெக் ஆகிய இருவரும், உபர் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்ற உள்ளனர். மேலும், தொழில்நுட்ப பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி ஜோ சுல்லிவான் மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி ஜான் ஃப்ளைன் ஆகியோருடன் மிக நெருக்கமாக இணைந்து பணிபுரிய உள்ளதாக உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








